
வெகுநாட்கள் சிறையில் இருக்கும் ஒரு கைதியாக
வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பிற்குள்ளாக
வந்து போகின்றன
பகல்களும் இரவுகளும்
இதே இடத்தில்
எத்தனையோ முறை
அவை சலித்துத் திரும்பியிருக்கலாம்
அல்லது
ஒரே வேலையை பல வருடங்களாகச் செய்துவரும்
ஒரு தொழிலாளியின்
காய்த்து போன கைகளைப் போல
கருத்துத் தடித்து அவற்றின்
சுரணை குறைந்து போயிருக்கலாம்
நித்தம் சிதறும் இந்நாட்களின்
ஜீவன தாதுக்கள்
காதில் நுழைந்த
கோழி இறகாகக்
குறுகுறுப்பு செய்தபடி
நம்
அறைகளில் அல்லது தாழ்வாரத்தில்
மேயவும் கூடும்
இந்த நாட்களை
கிழவர்களும் கிழவிகளும்
தங்கள் பொக்கை வாயில் போட்டு மென்றபடி
சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள்
ஒரு கவிஞனோ
அல்லது ஓர் ஓவியனோ
அவற்றைத்
தங்கள் செல்லப் பிராணியைப் போலப்
பழக்குகிறார்கள்
நான் அவற்றை
ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைக்கிறேன்
என் மகள் அதைத் திறந்து
ஒரு பட்டாம்பூச்சி ஆக்கிப்
பறக்கவிடுகிறாள்
வேறொரு நிலப்பரப்பில்
வேறொரு மகள்
வேறொரு நிறத்தில்
இதே போல்
அவற்றைப் பட்டாம்பூச்சிகளாகப்
பறக்க வைக்கக் கூடும்
வனமெனும் தெருநாய்கள்
ஒரு வனத்தை உருவாக்க நினைப்பவன்
மிகுதியான கற்பனை உடையவன்
அவன்
இது வரை தொட்டிச் செடிகளை மட்டுமே வளர்த்தவனாக
இருக்கக்கூடும்
அல்லது
மாடித் தோட்டத்தில் சில செடிகளையும்
வாழை
மரக்கன்றுகளையும்
வளர்ப்பவனாக இருக்கலாம்
வனம் என்பது
தெரு நாய்களை ஒத்தது
அவை
தானாகத் தேடிப் புணர்ந்து
தன் விருப்பத்திற்கு குட்டிகளை ஈனுவதும்
அதில் ஒன்றிரண்டைத்
தின்பதுமாக இருக்கும்
இது அவனுக்கு தெரியாமல் இருக்கக்கூடும்
நம்மில் பலருக்கும்
வனத்தை உருவாக்குவதற்கு முன்பாக
வேதிப்பொருட்களோடு தங்கிவிட்ட
மண்டையோடுகள் குவிந்திருக்கும் இந்த நிலத்தைச் செப்பனிட வேண்டும்
இந்நிலத்தின் துவாரங்களை அடைத்திருக்கும்
கந்தகச்
சதைகளை அகற்ற வேண்டும்
கல் இடுக்குகளில் தங்கிவிட்ட உலோகப் பட்டைகள்
பொருத்தப்பட்ட எலும்புகளை அகற்ற வேண்டும்
பிறகு
நாம்
செய்ய வேண்டியது
வனத்தை உருவாக்குவதல்ல
வெறுமனே
அந்த இடத்தை வேடிக்கை பார்ப்பது மட்டுமே
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

வனமென்னும் தெருநாய்கள் கவிதை அருமை. அழிந்து கொண்டுவரும் இயற்கையை வளர்க்க வேண்டுமென்பதில்லை. மனிதன் தனது இரசாயண அழுக்குகளைக் களைந்தாலே போதும்.