வே.நி.சூர்யா, திருமூ, நந்தகுமார் கவிதைகள்

winterநிழல்பசி

—————
-வே.நி.சூர்யா

என் நிழலை பாதாள அரக்கிகள் உண்டுவிடுவார்களோயென்ற
அச்சத்தில்
தவறிவிழுந்த சில்லறையை எடுப்பதுபோல நடித்து
நிழலை எடுத்து
பையில் போட்டுக்கொள்கிறேன்

**O**

வீடு

————–

-நந்தகுமார்

வானம்
மொய்த்துக் கொண்டிருந்தது
கூரையை.
ஜன்னல்கள்
விட்டிலாய்
நகர்ந்து
ஜோதியில்
அமிழ்ந்து விடுகின்றன.
மூலைகளின்
சர்ப்பங்கள்
மேகக் கீறல்களாய்
நகர்ந்து விடுகின்றன
கட்டில்களுக்கடியில்
விஷம் தோய்ந்த
இரண்டு கத்திகள் மட்டும்
நரம்பு பின்னிய
சிலந்தி வாய்கள்
இரைகளைக்
கொஞ்சிக் கொண்டிருந்தன
வானம் இன்னும்
மொய்த்துக் கொண்டிருந்தது.

**O**

நதி

———-

வானத்தை
விழுங்கிக் கொண்டிருந்தது
நிலவும் சூரியனும்
கண்ணாடிச்
சில்லுகளாய்’
உடைந்து
விழுகின்றன
அலைப்பரப்பில்
சிதறியதை
மெல்லத் துழாவி
பத்திரமாய்
வைத்துக்கொண்டேன்
நாளைய
பகலுக்கும் இரவுக்கும்
வேறென்ன செய்ய!

**O**
காட்சியின் நிழல்கள் 
_______________________
-திருமூ
அப்போது வயது
ஐந்தோ ஆறோ தெரியவில்லை
அவள் குளித்து முடித்து வந்து
தலை கவிழ்த்தி கூந்தல் உலர்த்தினாள்
மலர்களைச் சுற்றி மூடியிருந்த இலைத்துண்டின் முடிச்சு
அவிழும் நிலையில் தள்ளாடியது
என்னையொரு ஜீவனாகப் பொருட்படுத்தாமல்
முழுமதி காட்டும் ஒளிமுகத்துடன் கூடிய
பால்வெளியை எதிரொளிக்கிறது நிலைக்கண்ணாடி
உலர்த்தியதில் சிதறிய துளிகளால்
காம்புத் தணல் நீட்டிக்கொண்டது
பிம்பங்கள் ஒவ்வொன்றும் உயிர்ப்புள்ளவை
இப்போது வயது எனக்கு
இருபத்து இரண்டும்
பெருஞ்சில்லறை நாட்களும்
காய்கிறது
தூக்கத்தில் நனைந்த ஞாபகப் பிரதிகள்
கற்பனைகள் தீர்ந்துவிடாத நீர்மத்தை
அனுபவங்கள் சுரந்துகொண்டே இருக்கின்றன
காட்சிகள் தூக்குக்கயிறுபோல
கழுத்தை இறுக்கியவாறு
கண்களைக் கவ்வியிழுக்கின்றன
இப்போதும் நிலைக்கண்ணாடியின் முன்
நின்று பார்க்கிறேன்
ஒரே உருவில் ஆயிரம் தோற்றங்கள்

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.