மகரந்தம்


[stextbox id=”info” caption=”கட்டிட விற்பனருக்கு பிடித்த அறை”]

Architects_Homes

மனது சரியில்லாத போது நீங்கள் என்ன செய்வீர்கள்? சிலர் இசை கேட்பார்கள். சிலர் புத்தகம் படிப்பார்கள். கணினி வல்லுநராக இருந்தால் புதியதாக விளையாட்டோ மென்பொருளோ உருவாக்குவார். அந்த மாதிரி கட்டிடக் கலைஞர்களிடம் சென்று உங்களுக்கு எந்த அறை ரொம்பவும் பிடிக்கும்? புத்துணர்ச்சி பெற எந்தக் கட்டிடத்தின் எந்தப் பகுதிக்குள் இருக்க விரும்புவீர்கள் எனக் கேட்டார்கள். அதற்கான பதில்களைப் புகைப்படங்களாக இங்கே பார்க்கலாம்.

http://nymag.com/thecut/2015/04/designers-architects-favorite-rooms.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”மரபணுவும் வலுச்சண்டையும்”]

AKR0GD Magnetic resonance scan MRI of the head computer enhanced and colorized to show the normal anatomy of the brain and head

வன்முறை என்பது அரசாங்கத்திற்கே மட்டுமே சொந்தமானது. அதனால், சமூகத்தில் எல்லோரும் நல்லுறவு பேணுவதையே அரசு விரும்புகிறது. மேற்கு ஐரோப்பாவில் இந்த வழிமுறையை ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை மெல்ல மெல்ல மக்களிடையே பரவலாக்கத் துவங்கினார்கள். கிறித்துவ மதத்தில் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இதற்கு கொஞ்சம் தடைக்கல்லாக இருந்தது. எல்லாவிடங்களிலும் காவல்துறை செயல்படாதது, இதற்கு மேலும் இடையூறாக இருந்தது. தனி மனிதர்களுக்கிடையேயான தகராறுகளை, அவர்களே கைகலப்பில் தீர்த்துக் கொண்டது மேலும் முட்டுக்கட்டை இட்டது.
பதினொன்றாம் நூற்றாண்டு முதல் கடுங்குற்றங்கள் செய்ப்வர்களுக்கு மரண தண்டனையை உடனுக்குடன் அமல்படுத்துவதற்கு தேவாலயம் ஆதரவு தெரிவித்தது. ஜெயிலில் வாடுவோம் என்னும் பயத்தினாலேயே கொலைக்குற்றம் செய்பவர்களின் எண்ணிக்கை இருபதாம் நூற்றாண்டு வரை குறைந்து கொண்டு வந்தது. எனினும், போதை மிகுதியினாலும், பொறாமையினாலும், மன அழுத்தத்தினாலும் பிறரைக் கொலை புரிபவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் காணப்படவில்லை. வன்முறைக்கு எதிரான சமூகம் உருவாக்க மேற்கத்திய உலகின் சமூகத் திட்டங்களும் சட்ட அமலாக்கத்தின் உதவியுடன் கூடிய அமைதியாக்க வழிமுறைகளும் இந்த ஆராய்ச்சியில் அலசப்பட்டு இருக்கிறது.

http://www.epjournal.net/articles/western-europe-state-formation-and-genetic-pacification/
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஓ காதல் கண்மணி”]

Modern_Love

இந்தக் கால காதலைப் பற்றி எழுதுமாறு நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரைப் போட்டி வைத்தார்கள். 489 கல்லூரிகளில் இருந்து 1800க்கும் மேற்பட்ட மாணவர்கள், இதில் பங்கெடுத்தார்கள். அவர்களில் வெற்றி பெற்றோரின் பதிவுகளை வெளியிட ஆரம்பித்து இருக்கிறார்கள். உறவு என்பதை திருமணம், கணவன், மனைவி போன்ற சிமிழ்களில் அடைக்க விரும்பாத தலைமுறையை இந்தக் கட்டுரைகள் அடையாளம் காட்டுகின்றன. அந்த மாதிரி பந்தம் என்றோ, நட்பு என்றோ, பாசம் என்றோ சொல்லிக் கொள்ளாததால் ஏற்படும் சிக்கல்களையும் பேசுகின்றன.

http://www.nytimes.com/2015/05/03/style/modern-love-college-essay-winner.html?smid=tw-nytimes&_r=0
[/stextbox]


[stextbox id=”info” caption=”Heading”]

Genius_Com_Annotate_Courses_Students_Badges_Gamification_Screens_Home

படிப்பன, கேட்பன, ரசிப்பன, சுவைப்பன, கவனிப்பன ஆகிய எல்லாவற்றையும் பற்றி நாம் நண்பர்களிடையே தொடர்ந்து பேசுகிறோம். உறவினர்களிடையே உரையாடுகிறோம். ஏன், இப்போது இந்தக் கணம் சந்திக்கும் புதுமுகங்களோடு கூட கலாய்க்கிறோம். முன்பு சமூகம் என்று ஒன்று அருகருகே தொடர்ந்து வாழ்பவரிடையே அன்றாட இயக்கத்தினால் கட்டப்பட்டு உறுதியாக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இன்றோ சமூகம் என்பது முகமறியாப் பேர்களுடன் கூட ஒரு ஒளிரும் திரையால் உருவாக்கப்பட்டு விடுகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால், இந்த அருவ வெளிக் கட்டமைப்பு கிட்டத்துச் சமூகத்தை விடவும் ஈர்ப்பும், பாதிப்பும், அர்த்தப் பொதிவும் நிறைந்ததாகக் கூட ஆகி விடும் போலிருக்கிறது.
அருகாமை மனிதர்களின் குறுகிய எல்லைகள் நம்மைக் குறைப்பன என்று தோன்றுவதால், இந்த அருவ வெளி மனிதர்களின் பரிச்சயத்தில் நம்மை ஆழ்த்திக் கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் போலிருக்கிறது. இந்தப் புது வழக்கத்தின் தாக்கமாகப் பற்பல விதங்களில் நமக்குக் கற்க வாய்ப்புகள் கிட்டுகின்றன. கற்பது என்பது ஏதோ அருமையான, உருப்படியான விஷயங்களில் மட்டும்தான் என்றில்லை. மனிதச் செயல்களில் பெரும்பங்கு உருப்படியானவற்றால் நிரம்பியதாக இல்லை. அஃதொன்றே நாம் குரங்குகளின் உறவினர்கள் என்பதை நிறுவுகிறது என்று கூடச் சொல்ல முடியும். விளையாட்டு என்பது கூட நமக்கு இன்று நுகர்பொருளாகி விட்ட நிலையில், இப்படி அசம்பாவிதங்கள் நிறைந்த வாழ்க்கை அமைவதில் வியப்பு கொள்ள ஏதுமில்லை.
சில வாய்ப்புகளை நமது அருவத் தொடர்புகள் நம் முன் வைக்கின்றன. அவை அருமையும், பெருமையும், சீர்மையும் நிறைந்தவைதான். ஆனால் நல்லதை முன்வைத்தால் எடுத்துக் கொண்டு அதைப் பாராட்ட நமக்கு மனம் வர வேண்டுமே? நம்மில் பெற்றோராக இருந்து அனுபவம் கொண்டவர்களுக்குத் தெரியும், இப்படி நல்லதைச் சொல்லிக் கொண்டிருந்தால், அந்த யோசனைகளில் பத்தில் ஒன்று கூட எதிரில் உள்ளவர்களின் மனதில் இறங்கி நிற்பதில்லை என்பது. ஆகவே இந்த வாய்ப்பும் அப்படித்தான் அதிக பட்சம் விரயமாகும் என்று தோன்றுகிறது.
இருந்த போதும் உலகளாவிய விதை தூவலில் எங்கெல்லாமோ ஏதேதோ இடங்களில் விழும் விதைகள் பிழைத்து ஆலமரமாக, கனிமரமாக, மருந்துத் தாவரமாக, நிழல் தருவாகத் தழைக்க வாய்ப்பு அதிகம் என்பதால் இப்படி ஒரு வாய்ப்பை இந்த அருவ மனிதர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அவ்வகை வாய்ப்பு இந்தத் தளம். ஜீனியஸ்.காம் என்கிற இதில், படிப்பன… இத்தியாதிகளை நன்கு புரிந்தவர்கள், ரசிப்பவர்கள் தாம் ஏன் இவற்றை இத்தனை அனுபவித்துப் பிடித்துப் போய் ரசிக்கிறோம் என்று விளக்குகிறார்கள். இவை கிட்டத்தட்ட நுணுகி விளக்கும் குறிப்புகளென்று தெரிகிறது. இவை நம்மைச் சோம்பேறிகளாக்குமா, அல்லது ஊக்குவித்து நம்மையும் மேலான விதத்தில் எழுதிப் பங்களிப்பவர்களாக்குமா என்பதை முன்கூட்டிச் சொல்லி விட முடியாதில்லையா?
படித்துப் பாருங்கள். முதல் திரியில் இந்தத் தளத்தின் முயற்சி குறித்து தள அமைப்பாளர்கள் பேசுகிறார்கள்.

http://genius.com/Genius-founders-introducing-geniuscom-annotated
அடுத்த லிங்கில், ஹிட்ச்காக்கும், ஸ்பியல்பெர்க்கும் ஒப்பிடப்பட்டு பேசப்படுகிறார்கள்.

http://genius.com/Nice-peter-and-epiclloyd-steven-spielberg-vs-alfred-hitchcock-lyrics
இந்தத் தளத்தில் குறிப்புகளை நாமும் சேர்க்கலாம். யாரும் சேர்க்கலாம். இது ஒரு கூட்டம் ஒன்று சேர்ந்து யோசித்து உருவாக்கும் விரிவுரை, பொழிப்புரை, பதவுரை, விமர்சனம் என்று எப்படி உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்படி பொருள் கொள்ளுங்கள். இது நிபுணர்களின் களம் அல்ல. ஆனால் நம் களம். நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கும், நிபுணர்களுக்கும் இடையே உள்ள பள்ளத்தை இட்டு நிரப்ப இது உதவுமா என்று நாம் கவனிக்கலாம். அந்த விதத்தில் இது ஒரு ஜன நாயகப்படுத்தும் முயற்சி. வெல்லுமா? என்ன நினைக்கிறீர்கள்?
[/stextbox]


[stextbox id=”info” caption=”போரும் திருட்டும்”]

Rebuilding_Afghanisthan_Iraq_Bribery_Theft_War_Frauds_Corruption_Graphs_Charts

போர் என்றால் ஏதோ மிக ஒழுங்கான, கட்டுப்பாடுள்ள அணிகளால் நடத்தப்பட்டு, மோசமான நிலைமைகள் திருத்தி அமைக்கப்படுவன என்பது போன்ற ஒரு பிரமை அனேகரிடம் இருக்கிறது போலும். போர் எதையும் தீர்மானிப்பதில்லை, யாரிடம் கடுமையான தாக்குதல் சக்தி இருக்கிறது என்பதை வேண்டுமானால் உறுதி செய்யலாம். அல்லது ஒரு சூதாட்டத்தில் யாருடைய பந்தயம் அந்த ஒரு கட்டத்தில் வென்றது என்று இருக்கலாம். (சூது+ ஆட்டம் என்று சொல்வதிலேயே நியதிகள் அங்கு வேலை செய்யத் தேவை இல்லை என்று தெரிகிறது.)
போர்ப்படைகளில் மிக நியதியுடன் செயல்படுபவர்கள் என்று சிலர் இருக்கலாம். கொள்ளையடிப்பவர்கள், கொலைகாரர்கள் என்றோ, தம் மன உளைச்சலை எதிரில் உள்ளவர் யாரேனும், எதிரியோ, எதிரிகளைச் சார்ந்த சாமானியரோ, அவர்களிடம் காட்டுவதில் தயக்கமில்லாதவராகவோ இருப்பவர்களும் இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட அணிகளில் உறுப்பினராக இருப்பார்கள். போர் என்பது மிக்க களேபரமும், அலங்கோலமும் நிறைந்த களம் என்பதால் தனி நபர்கள் அனைவரையும் கண்காணிப்பது அத்தனை சுலபமான செயல் அல்ல. ஒழுங்கீனங்களில் பலவும் கண்டு கொள்ளாமல் விடப்படுவதும் நடக்கும், ஏனெனில் படைகள் முதற்கண் தாம் ஆபத்தில் சிக்காமல் இருப்பதையே கவனத்தில் வைத்திருப்பர். பின் தாக்குதலோ, தற்காப்போ எது முயற்சி நோக்கமானாலும் அதைப் பின்பற்றுவர். இந்த இரண்டு இலக்குகள் தவிர்த்த மற்ற நிகழ்வுகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படாது. எனவே எந்த நாட்டுப் போர்வீரர்களானாலும் அங்கு கணிசமான ஒழுங்கீனங்கள் நிலவும். எதிரிப் படை/ அணி எத்தனைக்கு மெலிவானதோ அத்தனைக்கு ஒழுங்குடன் செயல்பட முடியும் என்றாலும், அப்படி ஒன்றும் எதிர்பார்த்தபடி செயல்படும் எந்திரங்கள் அல்ல படைகள், படைவீரர்கள். பல நேரம் மெலிவானவர்களைக் கூடுதலாகத் துன்புறுத்துவது மனிதரின் இயல்பு. கடும் எதிர்ப்பு இருக்குமிடத்தில் அத்தனை கடுமை காட்டாமல் பின் வாங்குவதும் மனித இயல்புதான்.
இன்றைய செய்தியில் இராக், ஆஃப்கானிஸ்தான் ஆகிய போர்க்களங்களிலிருந்து அமெரிக்கப் படை வீரர்கள் ஏராளமாகத் திருடி, சுரண்டி எடுத்துப் போயிருக்கிறார்கள், நஷ்டம் பல நூறு மிலியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என்று ஒரு அமெரிக்கச் செய்தி அமைப்பு சொல்கிறது.
இது ஏதோ கடை நிலைப் படை வீரர்கள் மட்டுமே செய்யும் திருட்டாகக் கருதத் தேவை இல்லை. படைகளுக்கு பொருட்களை அளிக்கும் ஒப்பந்தங்களைத் தீர்மானிக்கும் உயரதிகாரிகளில் இருந்து அந்த ஒப்பந்தங்களைப் பற்றிப் பேசி முடிவெடுக்கும் அரசியலாளர்கள் வரை ஏராளமானவர்கள் இந்தப் பகல் கொள்ளைகளில பங்கெடுக்கிறார்கள் என்று இந்த அறிக்கை சொல்கிறது.
போர் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்து விடுவதே உசிதம் என்று எப்போதும் புஜபலத்தையே முதல் வழியாகத் தேர்ந்தெடுக்க முனையும் சாதாரணர்கள் இந்த விஷயங்கள் பற்றி அத்தனை தகவலறிவோ, ஆய்வறிவோ இல்லாது அப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்பது ஒரு சமூகப் பிரச்சினை. இவர்கள்தாம் அரசியலாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பதவியில் அமர்த்துகிறார்கள் என்பதாலேயே சில நாடுகள் எப்போதும் போர்வெறியிலேயே ஆழ்ந்திருக்கின்றன. போரைத் தவிர்த்து, பேச்சு வார்த்தைகள் மூலமாகப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், நெடுங்காலத் திட்டங்கள் மூலம் எதிரி என்று கருதப்படுவோரின் எதிர்ப்பை முறியதிக்க முயல்வோரும் கொண்ட நாடுகள், வெளித்தோற்றத்துக்குக் கோழைகள், ஏமாளிகள் என்று தெரிய வந்தாலும், இறுதிக் கணக்கில் வென்றவர்களாகவே இருப்பார்கள்.

http://www.slate.com/articles/news_and_politics/politics/2015/05/u_s_troops_have_stolen_tens_of_millions_in_iraq_and_afghanistan_center_for.html
[/stextbox]


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.