கருணையும் அதன் வசீகரமும்
வாலாட்டும் நாயொன்று
மழையில் பொருமிக்கொண்டிருக்கிறது
இழுத்து அடைக்கப்பட்ட ஜன்னலுக்கு உள்ளே
அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்
கருணையையும் அதன் வசீகரத்தையும்
நிர்வாணப்பெருங்கடலின்
ஒருதுளி தொட்டு
வியாபிக்கும்
முனகல் ஒலிகள் மோதி
வியர்க்கும் நைட்லேம்பின் நிசப்தக் காத்திருப்பை
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இரவு
ஒருபுள்ளியில் சடாரெனத் தட்டிவிடுகிறது
கருணையும் அதன் வசீகரமும்
புறம் சென்று
வெள்ளந்தி நாயின் வாலைப் பற்றியபடி
மழையை விரட்டத்தொடங்கியது
அப்பொழுது
அவர்களின் கனவில் கடவுள் விசிறிக்கொண்டிருந்தார்
மழை இன்னும் வேகமாக கொட்டுகிறது.
-ஆறுமுகம் முருகேசன்
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
