கவிதைகள்

குறவன் சுட்ட பறவை

t987

பொருளற்றுப்போவதின்
பொருள்தேடுமொருவனை
பேதையென்பதா
பித்தனென்பதா
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
சூன்யத்தில் சுவடுகள் பதிக்க
மூச்சுமுட்ட முயலுமொருவனை
மூர்க்கனென்பதா
முட்டாளென்பதா
யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆலமரத்திலிருந்தன
ஆயிரம் பறவைகள்
ஒன்றைச் சுட்டான் குறவன்
எஞ்சியவைகளை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

வசமானதென்ன?

sbgy67

அறியுமுன் நிகழ்ந்திருக்கும்
கருவறையில்
புதியதொரு உயிரின் வரவு
தன்னிச்சையாய் நிகழும்
நந்தவனத்தில்
அரும்பு மலரும் தருணம்
ஆழிப்பேரலை வருகுதென்று
அறிவிக்கலாம்
நிற்குமா நில்லென
ஏவுகணைகள் சூன்யவெளியில்
உளவறிந்தது
எறும்புவாயுணவு
உடலம் சடலமாகுமுன்
உயிர்ப்பறவை
சிக்கும் வலைகளில்லை
வசமானதுதான் என்ன?
லாவண்யா


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.