மகரந்தம்

[stextbox id=”info” caption=”ஹேக்கர்களிடம் சிக்கித் திணறிய சிஐஏ”]

சிஐஏ என்றால் ஏதோ முள்ளம்பன்றி போலச் சிலிர்த்துக் கொண்டு உடலெங்கும் ஆயுதமாக நிற்கும் ஒரு அமைப்பு என்று நம் கற்பனை வளர்ந்திருக்கிறது. இன்னொரு பக்கம் அது என்னவென்றே காணப்பட முடியாத ரகசிய இருட்டு நிறுவனம் என்றும் ஒரு கருத்து உலவுகிறது. ஆனால் அதுவும் பல அமெரிக்க ஸ்தாபனங்களைப் போலத் தொடர்ந்து பொதுமக்களிடம் தன் அலுவல்கள் பற்றி ஏதோ ஒரு நீர்த்த வடிவிலாவது தகவல்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒரு தகவல் தளத்தை, சில தகவல் துறையில் வல்லமை பெற்ற, ஆனால் முகம் மறைந்து வாழும் சிலர், தாக்கி அழித்து, சில மணி நேரமாவது செயல்பட விடாமல் செய்திருக்கிறார்களாம். இதே கூட்டம்தான் சோனி கம்பெனியின் ஆவணங்களில் இருந்து பல மிலியன் பேரின் கடனட்டை விவரங்களைத் திருடியது. சமீபத்தில் சிடி வங்கியிலிருந்தும் தகவலைத் திருடியதும் இவர்களே. இன்னும் பே பால் போன்ற பல நிதி நிறுவனங்களை இவர்கள் தாக்கி இருக்கிறார்கள். இப்படி பல நாடுகள் மீதும் தாக்குதல் நடத்த ஒரு பட்டாளம் பல்கலை மாணவர்களைச் சீன ராணுவம் தயாரித்து வருகிறது. இந்த சிஐஏவின் பொது மக்கள் தொடர்புத் தளத்தைத் தாக்கியது அனேகமாக அமெரிக்க/ யூரோப்பியர்களாகத்தான் இருக்க வாய்ப்பு அதிகம். மேலும் தகவல்களை இங்கு பாருங்கள்.

http://www.huffingtonpost.com/2011/06/15/cia-website-lulzsec-hackers_n_877812.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”சீனாவின் இணையப் போர்”]
சைபர் வார்’ எனப்படும் தகவல் தளத்தில் நடத்தப்படும் போர். இதைச் சீனா உலகெங்கும் நடத்தி வருவதைக் கனடிய ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். சீன ராணுவம் இதற்காக ஒரு பல்கலையையே நிறுவி இருப்பதாகவும் அவர்கள் சொல்கின்றனர். சீனா பொய் சொல்வதில் படு சாமர்த்தியமுள்ள ஒரு அரசால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆளப்பட்டு வருகிறதால், அது இந்த கனடிய ஆய்வாளர்கள் சொல்வதை மறுப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் மேற்கின் பல அரசுகள் சமீபத்து ஆண்டுகளில் தம் நிறுவனங்கள் கடுமையாகத் தாக்கப்படுவதை அறிந்து தற்காப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் உலகிலேயே மிக செயல்திறன் குறைந்ததும், சிறிதும் நிர்வாகத் திறமையோ, பாதுகாப்பு உணவோ, ஏன் அபாயங்கள் குறித்த அச்ச உணர்வோ ஏதுமில்லாத இந்திய அரசு என்ன செய்கிறது? நீண்ட உறக்கத்தில் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. தம் சிறையில் இருக்கும் குற்றவாளிகள் யாரென்றே தெரியாமல், அவர்களைப் பாகிஸ்தானில் தேடச் சொல்லி பட்டியலை அனுப்புகின்றனர். ஒரு நாட்டின் மைய உளவு நிறுவனமே இத்தனை ‘சாமர்த்தியம்’ நிறைந்ததென்றால் என்ன சொல்ல முடியும் நம்மால்? ஜெர்மனி சைபர் போரிலிருந்து தம் அரசு அமைப்பைத் தற்காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தயாராகிறதாம்.

http://www.spiegel.de/international/germany/0,1518,768764,00.html

[/stextbox]


[stextbox id=”info” caption=”Mad Max”]
”Mad Max” என்ற ஒரு ஆஸ்திரேலியத் திரைப்படம் உலகெங்கும் பிரபலமாக இருந்தது ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. ஒரு மலிவு விலைப் படம், திடீரெனப் பிரபலமாகி எடுத்தவர்களுக்கு தங்கச் சுரங்கமாயிற்று. மெல் கிப்ஸன் என்ற நடிகர் இதனால் உலகத் திரைகளில் பிரபல நட்சத்திரமாகி, புகழால் தலையை இழந்து தீவிர மத வெறியராகி, பின் யூதர்களை இழித்துப் பேசி வெறுப்பவராகி, என்னென்னவோ பிரச்சினைகளில் சிக்கி தான் ஒரிஜினல் ‘Mad’ போன்றவனே என்று நிரூபித்து விட்டார். இந்த மாக்ஸ் படத்தின் கரு, பெட்ரோலிய எண்ணெய் எல்லாம் தீர்ந்த உலகில் வாழ்க்கை மறுபடி புராதன தொழில் முறைகளுக்குத் திரும்புகிறது. நகரங்கள் அழிந்து எல்லாம் பழைய ‘காட்டுத் தனமான’ வாழ்க்கைக்குத் திரும்புவதில் சிலர் மட்டும் கொஞ்சம் எண்ணெயைப் பதுக்கி வைத்துக் கருப்புச் சந்தையில் கொள்ளை அடிக்கிறார்கள். உலகெங்கும் குற்றக் கூட்டங்களே ஆள்கின்றன. அவர்களிடையே போர்.

இன்று உலகெங்கும் பைத்தியக்காரன் மாக்ஸ் படத்தில் வரும் குற்றக் கூட்டங்களைப் போலவே அழிப்பை நோக்கமாகவும், செயல்திட்டமாகவும் கொண்ட ‘திறமைசாலிகள்’ தகவல் வலை அமைப்பைப் பயன்படுத்தி நிறுவனங்களைத் தாக்கி செயலிழக்கச் செய்ய முயல்கின்றனர். ‘பெயரிலி’ (அனானிமஸ்) என்ற ஒரு அமைப்பு வங்கிகள், பெண்டகன் (அமெரிக்க ராணுவத்தின் தலைமையகம்) போன்றனவற்றைத் தாக்கிப் ‘புகழ்’ பெற்றிருக்கிறது. சமீபத்தில் இன்னொரு கும்பலான ‘லுட்ஸெக்’ என்பது தன் பங்குக்கு சிடி வங்கி, சோனி போன்ற நிறுவனங்களைத் தாக்கி இருக்கிறது. ’மாக்ஸ்’ படம் மேலும் எதார்த்தமாகிறதற்கு ஒரு சான்று, இந்த லுட்ஸ் கும்பல், பெயரிலி கும்பலையும் தாக்கி இருக்கிறது. செய்தி இதோ.

http://latimesblogs.latimes.com/technology/2011/06/lulzsec-anonymous-cyber-fight.html

[/stextbox]


[stextbox id=”info” caption=”முதலைகளை அழித்த தேரைகள்”]
என்ன ஒரு அதிசயமான விஷயம் இது. தேரைகள் ஆஸ்திரேலியாவில் சில பகுதிகளில் பெரும் நன்னீர் முதலைகளை, கடும் விஷப் பாம்புகளை எல்லாம் 90 சதவீதம் போல அழித்து விட்டனவாம். இந்தத் தேரைகள் ஆஸ்திரேலியாவின் இயற்கையான வாசிகள் அல்ல. மழைக்காடுகளில், தென்னமெரிக்காவில் இருந்த இந்தத் தேரைகளை ஆஸ்திரேலியாவில் கரும்பை அழித்த சாம்பல் நிற வண்டுகளைத் தின்னும் என்று கருதி ஆஸ்திரேலியாவில் கொண்டு வந்து நுழைத்தனராம். தேரைகள் வண்டுகளைத் தின்னவில்லை. மாறாக தம் இயல்பான நிலத்துக்கு நேரெதிரான தட்ப வெப்ப நிலை கொண்ட ஆஸ்திரேலியாவில், அதன் அனேகமாக உலர்ந்த சீதோஷ்ணத்தையும் லட்சியம் செய்யாமல், பெரிதும் வளர்ந்து நாடெங்கும் பரவியதோடு அல்லாமல், அவற்றுக்கு எதிரிகள் யாரும் இல்லாததால் இன்று ஆஸ்திரேலியாவின் பெரும் பிரச்சினையாக ஆகி இருக்கின்றன. மேலும் விசித்திரமும், அற்புதமும் நிறைந்த பல தகவல்களுக்குக் கட்டுரையைப் படியுங்கள். கட்டுரையில் ஒரு விடியோவும் உள்ளது, அதையும் பாருங்கள்.

http://www.guardian.co.uk/environment/2011/jun/16/cane-toad-conquest-australia

[/stextbox]


[stextbox id=”info” caption=”அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், அதிகாரம்”]
உலகின் பெரும் ஆயுதத் தயாரிப்பாளரும், ஏற்றுமதியாளரும் ஆன அமெரிக்காவின் அரசு நம் இந்திய அரசைப் போலவே ஏகப்பட்ட ஓட்டைகள் நிறைந்த ஒன்று. ஒரு புறம் பாகிஸ்தான் நம்பத்தகாத கூட்டாளி என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டே, இன்னொரு புறம் பாகிஸ்தானுக்குப் பிலியன் பிலியனாகச் செலவில் பெரும் ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு. எத்தனை அறிவு, என்ன ஒரு சாமர்த்தியம்! சொந்தச் செலவில் சூனியம் வைப்பது என்பார்களே அதேபோல சொந்தச் செலவில் தன் வீட்டுக்கே கொள்ளி வைத்துக் கொள்ளுகிறதா அமெரிக்க அரசு, அல்லது தென்னாசியாவில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போரை மூட்டி விட்டு இரண்டு நாடும் எரிந்தால் இந்தியர்களின் உலகத் தொகை குறையும், அமெரிக்க வெள்ளையரின் உலக அதிபத்தியம் நிலைநிற்கும் என்று கணக்குப் போடுகிறதா? தகவலுக்கு இக்கட்டுரையைப் பாருங்கள்.

http://www.wired.com/dangerroom/2011/06/youre-still-buying-spy-gear-for-the-pakistanis/
[/stextbox]


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.