முதல் மழைத்துளி

கண்கள் திறக்கும் கணத்தில்
கைகள் நீண்டன
படகு ஓட்டி வந்தவன் கரையடைந்து
துடுப்பைக் கீழே போட்ட பின்
மயில்கள் ஆடும் வனத்தினுள் நுழைந்தான்
கார்முகில் காத்திருக்கும் வேளை
இதுதானோவென அதிசயித்தான்
கோயில் கோபுரத்தின்
இரண்டாயிரத்தைந்நூறு சிற்பங்களில்
ஒன்றை மட்டும் காட்டி
இதோ பாரதிசயத்தை என்று
காட்டிவிட்டுக் கைகட்டி நின்றான்
முட்களையெல்லாம் கவனமாகப்
பிடுங்கியெறிந்தபின்
மலர்களை மெல்ல நீட்டினான்
மலரிதழ் மீது விழுந்தது முதல் மழைத்துளி.

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.