யூரோப்பியக் கவிதைகள்

ஜார்ஜ் சிர்ட்டேஷ் கவிதைகள்

மழைப்பருவ இறகுகள்(விண்டஹெம் அபே)

எத்தனை பிரகாசமாக சூரியன்sun
ஒரு கணம் நீட்டி நடக்கிறது
கண்ணாடி ஊடே
பிறகு ஒளிகிறது
அது சற்று நேரமே வருடின
அதே இடைபாதைகளின்
ஆழ் உள்ளிடங்களில்
பதுங்குகிறது

அப்படி இதயம் நின்று திரும்ப ஆரம்பிக்கிறது
அது நின்றதை
கவனிக்காமல்,
ஒரு ஊஞ்சல்
கைவிடப்பட்டு,
ஒரு விழி பாதி சிமிட்டலில்
தொலைந்து, கரும்பறவைகள்
முழுவேகத்தில், தூசுகளின் ஊடே நீந்திட

மறப்பது

அம்மா

mother_sonசுவர்க்கத்தில் இருந்து கீழ்வரும் முதல் கை அவள் கை
அவள் உனக்கு மேல் வட்டமிடுகிறாள். அது வரப்போகும் வாழ்வின்
முன்னுணர்வு, தரை இறங்க தயாராகும் ஒரு பறவை.
உன் அம்மாவின் வெம்மை. அவள் முலைகள் மென்மையின்
தீவிரம் பற்றின மனப்பதிவு, பிறகு அவளது
கைமுட்டின் எலும்புகள். கன்னங்கள். கழுத்து. அவள்
தலையின் அசைவு, இடுப்பின் முன்பின் ஆட்டம். அவள் முலைக்கண்களின்
மிருதுவான கூம்புகள். அவள் தொப்புளின் புதிர்த்தன்மை. வெப்பம்
குளிர்மை, ஈரம், உலர்வு. பால் மணங்களும், பிரமோன்களும்.
எங்கு நீ ஆரம்பிப்பாய்? பாதங்களை விரல்கள் கிச்சுகிச்சு மூட்டுவதிலா
உதடுகள் தோலில் படுவதிலா? உயரத் தூக்கப்பட்டு
பத்திரமானதற்கு பின் சுழற்றப்படுவதிலா? தெருவின் இரைச்சல்களிலா?
உனது எளிய பேரிடர்களில்? உனது சொந்த அழுகை
உன் தலைக்குள் எதிரொலிக்க கேட்பதில்? ஏதோ தொலைந்து போய்
ஏதோ ஆழ புதைக்கப்பட்டு உள்ளது நீ பார்க்க முயலும் விழியின் அடியில்,
உன் நுரையீரலுக்கு உள்ளே
படிந்த  தூசு போன்ற மெல்லிசாக ஒன்று,
உன் உடலின் மடிப்புகளுள் வார்ப்பு போல திணிக்கப்பட்ட ஒரு வரலாறு.
வானொலி முணுமுணுக்கிறது. ஒரு மணி திடீரென முழங்குகிறது.
தரைக்கு மேல், கூரை மேல் நகரும் ஒளி.
ஒரு பறவை சரசரக்கிறது. அவளது கூந்தல். ஜன்னல் மீதாக
முட்டிடும், வீறிடும் ஒரு மரத்தின் கிளைகள்.

ஜார்ஜ் சிர்ட்டெஷ்
ஜார்ஜ் சிர்ட்டெஷ் தனது எட்டாவது வயதில் ஹங்கெரியிலிருந்து அகதியாக இங்கிலாந்து வந்தார். ஓவியராக பயிற்சி பெற்ற சிர்ட்டெஷ் 1973-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் கவிதைகள் பிரசுரிக்க ஆரம்பித்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான ’The Slant Door’ ஜெப்ரி பேபர் மெமோரியல் பரிசை வென்றது. பிறகு சோல்மொண்டெலெய் விருது இவருக்கு வழங்கபபட்டது. இங்கு தரப்பட்டுள்ள கவிதைகளை உள்ளடக்கின அவரது ’Reel’ தொகுப்பு 2004-இல் டி.எஸ்.எலியட் பரிசை வென்றது. ஹங்கெரியன் மொழியிலிருந்து செய்துள்ள ஆங்கில மொழியாக்கப் பணிக்காக இவர் European Poetry Translation Prize மற்றும் Derry Prize ஆகிய பரிசுகளை வென்றார். Golden Star விருதும் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கான எழுத்திலும் ஆர்வம் காட்டியுள்ளார். தற்போது மல்யுத்தம் பற்றி நாவல் எழுதி வரும் சிர்ட்டெஷ் University of East Anglia-வில் கவிதை மற்றும் படைப்பிலக்கியம் போதிக்கிறார். மேலும் படிக்க : ஜார்ஜ் சிர்ட்டேஷ்

மூரியல் ஸ்பார்க் கவிதை

லண்டன் சுற்றுலா

கென்சிங்டன் பூங்கா

முதிய பெண்கள் மற்றும் துலிப் பூக்கள், மாதிரிப் படகுகள்
கையடக்கக் குழந்தைகள், நடமாட்ட அம்மாக்கள்,
கிளிகள் போல் தூரத்து பேருந்துகள்
தனியான ஆண்கள் மழை அங்கிகளைக்
கைமேல் கொண்டு – எங்கே போகிறார்கள்? தற்போது கோடையின்
மூட்டை முடிச்சுக்கள் மற்றும் வண்ணத் தெளிப்பு
ஒரு வருடத்துக்கு முன் விதைத்தது போல் வெளிவந்து விட்டபடியால்.

அந்நியள் வியந்தது என்ன?

லண்டனில் தனியாய் காபி உறிஞ்சியபடிhyde-park_london
இவள் எங்கிருந்து வருகிறாள்?
ஷூக்கள், கூந்தல் – வங்கியில் அவளுக்கு ஏதுமிருப்பதாக எனக்கு படவில்லை.
அவளுக்கு ஆண்துணை உண்டா, எனில் அவன் எங்கே,
பத்தரை மணிக்கு லண்டனில் புத்தகம் படித்தபடி
ஏன் அமர்ந்து இருக்கிறாள்?

அவளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது
ஆண்துணை இன்றி, வேலையற்று, மளிகைக் கடையில் நாயுடன் அவசரமாக ஓடாமல்
தனித்து இருக்கும் படியாக. உறிஞ்சிடும் படியாக.

ஓய்வு நாள்

மூன்றே கால் மணிக்கு கடிகாரம் நின்று போனது;
மேலும் கைகளை அகலமாக விரித்து கொட்டாவி விட்டு அங்கே இருந்தது,
மேலும் அதைத் திரும்ப ஓட வைக்கவில்லை யாரும்,
ஞாயிற்றுக்கிழமை ஆகையால், நாங்கள் வேலையில் மூழ்கி இருந்தமையால்.

ஆகையால் அந்நாள் நிகழ்ந்தது, மறைந்தது.
ஆனால் துண்டுத் துண்டாய் கிழிக்க, தைக்க, நேசிக்க, வெறுக்க
நாங்கள் பின்பற்றின நேரம் சரியானதா
என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை;            நிகழந்தவை எல்லாம்
ஞாயிற்றுக் கிழமை, லண்டன், மணிமுழக்கங்கள், பேச்சு, விதி.

மூரியல் ஸ்பார்க்: குறிப்பு

The Mandelbaum Gate, The Prime of Miss Jean Brodie போன்ற தனது நாவல்களுக்காகவே பிரதானமாக அறியப்பட்ட ஸ்காட்லாந்து எழுத்தாளர் மூரியல் ஸ்பார்க் கவிஞராகவே எழுத்தை ஆரம்பித்தார். ஆங்கிலேய அம்மாவுக்கும் யூத அப்பாவுக்கும் பிறந்த ஸ்பார்க் பின்னர் கத்தோலிக்க மதத்துக்கு மாறி, அது தனக்கு நாவல் எழுத ஒரு விரிவான பார்வை அளித்திருப்பதாய் அறிவித்தார். இந்த மதமாற்றம் காரணமான மனஸ்தாபம் மூன்று வருடங்களுக்கு முன் 88 வயதில் சாகும் வரை அவரைத் தன் மகனிடம் இருந்து பிரித்து வைத்தது. வாழ்வின் ஒழுக்கில் ஒவ்வொரு பிடிமானமாக நாடிச் சென்றுள்ள மூரியலின் எழுத்தின் முக்கிய தேடல் வஸ்து அடையாளம். இங்கு தமிழாக்கப்பட்டுள்ள கவிதைகள் All the Poems என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.

கவிதைகள் தமிழாக்கம்:ஆர்.அபிலாஷ்