“எலே இந்த வழியாத்தான் போகணுமாம்” என்று யாரோ தமிழில் பேசியது காதில் விழுந்தது. நடுத்தர மற்றும் வயதான தாத்தா பாட்டிகள் ஒரு இருபது பேர் போல நம் மக்கள் வந்திருந்தார்கள். ரோப் கார் ஏறுமிடத்திற்கு வரிசையில் நின்று ஏறி விட்டோம். பழனியில் ரோப் காரில் சென்று வந்த அடுத்த நாள் அங்கு நடந்த விபத்துப் பற்றி செய்திகளில் பார்த்தது கண்முன்னே வந்து சென்றதால் கொஞ்சம் பயமாக இருந்தது எனக்கு. கீழே பார்த்தால் பசுமையான காடு. பறவைகளின் இன்னிசை கீதம் மலைகளில் எதிரொலிக்க, மலை முகடுகளைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது மழைமேகங்கள். கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகான அருவிகள் என்று இயற்கைக்காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. கோடைக்காலத்தில் எப்படி இருக்குமோ தெரியாது. மழையில் குளிர்த்த மரங்களும் மனிதர்களும் நகரமும் புத்துணர்ச்சியாய் காண்பவர்களையும் தொற்றுக் கொள்கிறது!
