விருப்பு வெறுப்பு
கலந்த சொற்களை
மெளன பெட்டிக்குள் போட்டு
தாழிட்டு பூட்டொன்றால்
பூட்டி வைத்தேன்
விருப்பும் வெறுப்பும்
யார் பெரியவரெனும்
விவாதத்தைத் தொடங்கி
வாக்குவாதமாக்கிக் கொண்டிருக்கின்றன
மெளனத்தினுள்
பேரிரைச்சல்
கேட்கத் தொடங்குகிறது
இதோ
கையிலுள்ள
அப்பூட்டின் சாவியை
உருக்கிக் கொண்டிருக்கிறேன்
தனிமை தீயில்.

சிவப்புக் கம்பளம் விரித்து
தாரை தப்பட்டை
சங்கின் ஓசைகள் முழங்க
அமைதியாக காத்திருக்கிறேன்
மரணத்தை எதிர்பார்த்து
முகவரி தவறிய மரணம்
யார் யாரையோ தழுவி
ஒரு குருட்டு நத்தைப் போல்
நகர்ந்து கொண்டிருக்கிறது
என்னை நோக்கி…
எல்லோருரின் பார்வையிலும்
பல முகவரிகள்
கொண்டவன் நான்
மரணத்திற்கு மட்டும்
முகவரி ஏதும் அற்றவனாகிறேன் .

காற்று வீசாத
தருணத்தின் ஓரு நொடியில்
கிளையைப் பிரிந்த
பழுத்த இலையொன்று
மூன்று நான்கு முறை
சுழன்ற பின்
மரத்தின் நிழலில்
வந்து விழுந்தது
இது நாள் வரையில் தன்னுள்
ஓர் அங்கமாகிருந்த இலைக்கு
நிழல் கொடுப்பதைத் தவிர
வேறென்ன செய்திட முடியும்
இந்த மரம்
இது நாள் வரையில்
தன்னைச் சுமந்த மரத்திற்கு
உரமாவதைத் தவிர
வேறென்ன செய்திட முடியும்
உதிர்ந்த இலை

எங்கிருக்கிறாய்?
என்ன செய்கிறாய்?
சாப்பிட்டாயா?
என இப்படி
அடிக்கடி கேட்பவனிடம்
பெரும் எதிர்பார்ப்புகளென
வேறென்ன இருக்கப் போகிறது
இதே கேள்விகளைத்
தன்னிடம் கேட்கப்படுவதைத் தவிர
இப்படியே கேட்டு
பழகிப் போனவன்
பழக்கத்தை நிறுத்திக் கொள்ளும்
நிர்பந்தத்தின் வேளையில்
நன்கு உணர்கிறான்
ஓடு நொறுக்கப்பட்ட
நத்தை ஒன்றின்
தீரா ரணத்தை
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

அருமை.. குமார் சேகரன்.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதவும்.
மிக்க நன்றி.Kannan.