
சற்று முன் பூத்த ஆயுளுக்குமான நிலம்
விருப்பக் கூட்டிலிருந்து
வேட்கைப் புள்ளிக்குள்
கடற்கரைத் தடங்கள் போலல்லாது
பாதங்கள் நகர்கின்றன,
பெரும் சவாலாகவும்
அதிபயங்கரத் திகிலாகவும்
போதையும் அல்லாத மாம்சமும் அல்லாத
உன்னை எதிர்கொள்வதில் எனக்கிருக்கும்
அதிகச் சிரத்தையோடு கூடிய
மேலதிக கவனப்பிசகுத் துளியும் அற்று
என்னைக் கையாளும் முறையினை
மிக லாவகமாய் அறிந்து வைத்திருக்கிறாய்
இரவும் அல்லாத பகலும் அல்லாததொரு வெளியிலிருந்து
மெள்ள மெள்ள அவிழ்ந்து கொண்டிருக்கிறேன்
***
பிரகாசிக்கும் துயரம்
துள்ளும் டால்பின்களைக் கண்களில் வென்று
புன்னகை ஒன்றைப் பரிசளித்திருந்தாய்
தாயின் முதல் சுகப்பிரசவ வலியென
ரீங்கரிக்கிறது
திறக்கப்பட்ட ஜன்னல்களினூடே
மின்னிச் சிலிர்க்கும்
பனி
பேரலை முழங்கும் நமது இருப்பில்
வெண்சங்கினை ஒத்துப் பிரகாசிக்கும்
இத்துயரத்திற்கு
மரணம் மட்டும் ஒருபோதுமில்லையெனச்
சுற்றிச் சுழல்கிறது
நாளின் கடிகாரம்
***
—ஆறுமுகம் முருகேசன்
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

