மொழிபெயர்ப்பு கவிதைகள்

அரசு தூதுவர்

darkroom
ஒருநாள் அறையில், ஒரு சிறு எலி.
ரெண்டு நாள் கழித்து, ஒரு பாம்பு.
அது, நான் நுழைவதை பார்த்து,
தன் உடலின் நீள்வரியை
படுக்கைக்கு கீழே உதறியது,
பிறகு ஒரு சாதுவான வீட்டு செல்லப்பிராணியை போல் சுருண்டு கொண்டது.

அது எப்படி வந்தது அல்லது வெளியேறியது என்று எனக்கு தெரியாது.
பின்னர் மின்கைவிளக்கு கொண்டு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வருடமாய் நான் கவனித்தேன்
ஏதோ ஒன்று – பீதி? மகிழ்ச்சி? மரணத்துயரம்? –
என் உடலில் நுழைந்து வெளியேற.

அது எப்படி உள்ளே வந்தது என்பது தெரியாமல்
அது எப்படி வெளியே போனது என்று தெரியாமல்.

வார்த்தைகளால் அடைய முடியா இடத்தில் அது தொங்கியது
வெளிச்சம் செல்ல முடியா இடத்தில் அது உறங்கியது.
அதன் வாசனை பாம்பைப் போலவோ எலியைப் போலவோ இல்லை,
புலன்நுகர்ச்சியாகவோ புலனடக்கமாகவோ இல்லை.

நம் வாழ்வுகளில் நமக்கு ஒன்றுமே தெரியாத
திறப்புகள் உள்ளன
அவற்றின் ஊடே
மணி கட்டப்பட்ட கால்நடை கூட்டங்கள் விருப்பத்துக்கு பயணிக்கும்,
நீண்ட கால்களுடன், தாகத்தில், அந்நிய தூசால் மூடப்பட்டு.

மூலம் : ஜேன் ஹெர்ஷ்பீல்டு

திருமண வரவேற்பு

ஒரு தூரத்து உறவினரின்
திருமணத்தின் போது
கடவுளும் சாத்தானும்
ஒரே மேசையில்
அமர்ந்திருந்தனர்
ஏனெனில்
இருவருடைய நாள் ஏற்பாடுகளும்
அத்திருமண விருந்திற்கானவை.
அது ஒரு இலவச மதுக்கூடம்;
தமது இருக்கைகளை தள்ளாடி
அடைந்த பொது
எல்லாரும்
ஒரு மெல்லரவத்தை
கொண்டிருந்தனர்.
அனைவரையும்
ஒரு ஜோக் சொல்லி
கேளிக்கை ஊட்டி
சாத்தான் இறுக்கத்தை கலைத்தது.
பழுப்பு நிறத்தில் ஒட்டும் படியாய் (sticky)
உள்ளது எது?
ஒவ்வொருவரும்
திகைத்து
கடவுளை சங்கடமாய்
பார்த்தனர்;
அவர் முறைத்தபடி இருந்தார்;
மற்ற எல்லாரையும்
போல
ஒரு கீழ்த்தரமான பதிலை
எதிர்நோக்கினார்.
ஒரு குச்சி (stick), சாத்தான்
அப்பாவியாக சொன்னது;
மொத்த மேஜையும்
களிப்பில் ஆரவாரித்தது.
உனக்கு நல்ல
நகைச்சுவை உணர்வு
இருக்கிறது, கடவுள் சொன்னார்.
உன்னை ஏன்
எனக்கு ஒருபோதும்
பிடிக்கவில்லை என்பது புரியவில்லை.
கடவுள்
சாத்தானின் தோளை
ஆதுரமாய் தட்டினார்.
எனக்கும் தெரியாதே,
சாத்தான் சொன்னது.
அது கெட்ட
சுபாவத்தினோடு
சம்மந்தப்பட்டதாக
இருக்கலாம்
என்று நினைக்கிறேன்..
கடவுள் சரிதானென்று
தலையாட்டினார்.
பிறகு
ஒரு நொடிப் பிளவில்
சாத்தான்
எல்லாரையும்
பஸ்மமாக ஆக்கியது.

மூலம் : கேதரின் மோக்ளர்

தர்மம்

முன்கதவு வழியாக ஒவ்வொரு காலையும்
தொப்பியின்றி குடையின்றி
காசின்றி
தனது நாய் கூண்டுக்கு சாவி இன்றி
தளர்-ஓட்டத்தில் நாய் வெளியேறும் விதம்
என் இதயத்தின் வட்டத்தட்டை பால் போன்ற பெருமிதத்தால்
நிரப்ப ஒருபோதும் தவறுவதில்லை.

தாங்கமுடியாத கவலைகள் அற்ற வாழ்வுக்கு
இதைவிட சிறப்பான உதாரணம் யார் வழங்க முடியும்?
தனது திரைச்சீலையற்ற குடிசையில்
ஒற்றை தட்டு, ஒற்றை கரண்டியுடன் தோரோ?
தனது குச்சி மற்றும் புனித டயபர்களுடன் காந்தி?

தனது பழுப்பு மயிர் மற்றும் நீல கழுத்துப்பட்டியைத்
தவிர வேறு ஏதுமின்றி,
தனது ஈர மூக்கை, சீரான சுவாசிப்பின்
கம்பீர ரெட்டை நுழைவுவாயில்களை, மட்டும் தொடர்ந்து,
தனது வாலின் தூவல்கொத்தால் மட்டும் தொடரப்பட்டு
அதோ போகிறது லௌகீக உலகுக்குள்.

ஒவ்வொரு காலையிலும்
பூனையை மோதி தள்ளி விட்டு
அதன் உணவு மொத்தத்தையும் அது உண்ணாமல் இருந்தால்
சுயகட்டுப்பாட்டின் எத்தகைய ஒரு மாதிரியாக
லௌகீக பற்றின்மையின் எத்தகைய லட்சிய வடிவாக அது இருந்திருக்கும்
காதுக்குப் பின்னால் சொறிந்து விட
வரவேற்புகளின் துள்ளித் தாவல்களுக்கு
இத்தனை ஆர்வமாக அது இல்லாமல் இருந்திருந்தால்,
நான் மட்டும் அதன் கடவுளாக இல்லாமல் இருந்திருந்தால்.

நன்றி: Best American Poetry 1999. p. 49-50

மூலம் : பில்லி காலின்ஸ்


Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.