Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 4

This entry is part 48 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் :  மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

ஒரு பொருள் பற்றிய மிகவும் பொதுவான இலக்கிய நயத்தையும்,  எளிமையானவற்றையும் நுட்பமாக விளங்கிக்கொள்ள அதன் எந்தவொரு பகுதியையும் அலட்சியம் செய்யாது நமது பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும். அதிரியனுடைய காரியதரிசியான பிளேகனை நன்கு ஆய்ந்தறியமுற்பட்டு அதன்மூலம் நான் தெரிந்துகொண்டது, மறக்கபட்ட இந்த மனிதருக்கு நாம் மிகவும் கடன் பட்டிருக்கிறோம் என்கிற உண்மையை; குறிப்பாக முதன்முதலாகத் தெரியவந்த  மிகச்சிறந்த அழகான பேய்க்கதை ஒன்றிற்காக. பிளேகனுடைய படைப்பில் ஈர்க்கப்பட்டே  ஃபொன் கேத்தா(Goethe) பாலட் வகையில்  « கொரிந்த் மணமகள்(Fiancée de Corinth) » எழுதினார்;   அதுபோல « கொரிந்த்தியன் திருமணம் (Noces corinthiennes) » அனடோல் பிரான்ஸ்(Anatole France) என்பவரால் உருவானது. இவ்விஷயத்தில் கூடுதலாகத் தெரிந்துகொள்ளவேண்டியது, பிளேகன் எழுதுகோல் இதே ஆர்வத்துடன் மனிதவரம்புகளை மீறும் அனைத்து  விசித்திர சக்திகள், இரண்டுதலை அரக்கர்கள்,  ஹெர்மாஃப்ரோடைட்  (hermaphrodites)என்கிற ஆணும் பெண்ணுமான மனிதர்கள், அவர்களுக்குள்ள பிள்ளைப்பேறு சக்தி என்பது பற்றியெல்லாம் கூட எழுதியுள்ளது என்கிற உண்மையைத் தவிர, இதுகுறித்து அரசரும் காரியதரிசியும் விவாதித்திருக்கவும் வேண்டும்.


அதிரியன் நினைவுகள் என்கிற தலைப்பைக் காட்டிலும் அதிரியன் நாட்குறிப்பு என்கிற தலைப்பினை விரும்பும்  மனிதர்கள், செயல்திறன்கொண்ட மனிதர்கள் நாட்குறிப்பினை வைத்திருப்பது மிகவும் அரிது என்பதை மறந்துவிடுகின்றனர். அவர்கள் எப்பொழுதும், பிற்காலத்தில் செயலற்று இருக்கிறபோது ஆழ்மனதிலிருந்து கடந்தகாலத்தில் நடந்ததை  நினைவு கூர்ந்து, அதனைக் குறிப்புமெடுத்து,  அவ்வப்போது வியப்பிலும் ஆழ்வதுண்டு.


சக்கரவர்த்தி அதிரியனுக்கு எப்போதுமே அனைத்தையும் தெரிந்துகொள்வதில்   பொதுவாகவே ஆர்வமுண்டு. அத்தகைய  மன்னரைப்பற்றிய துல்லியமான செய்திகளையும்; போர் மற்றும் அமைதி விவகாரங்களில் அவர் காட்டிய ஆர்வத்தையும்; செதுக்கப்படும் சிலைகள், அவற்றின் மூலத்துடன் ஒத்திருக்கவேண்டுமென்கிற அவருடைய இரசனை குறித்தும்; அக்காலத்திய கவிதைகள் மற்றும் கட்டுக்கதைகளில் மன்னர் காட்டிய ஈடுபாடுபற்றியும் அறிவதற்கு, வேறு ஆவணங்கள் இல்லாத நிலையில், கருங்கடல் பயணம் சார்ந்து பேரரசர் அதிரியனுக்கு, அர்ரியன் எழுதிய கடிதங்கள் நமக்கு உதவுகின்றன. இவை ரோமசாம்ராச்சியத்தின்  ஏகாதிபத்திய உருவத்தை விரிவான வகையில் மீண்டும் கட்டமைக்கப் போதுமானவை. மார்கஸ் ஆரேலியஸோடு முற்றாகத் தொலைந்துபோன  இந்த ரோமானியக் காலக்கட்டம், காலங்கள் எதுவாயினும் மிகவும் அரிதானதொன்று. இக்காலக்கட்டத்தில் பணிவிலும், மரியாதையிலும்  நுட்பமான வேறுபாடுகளிருந்தன ; ஆயினும்  அறிஞரும் அரசு நிர்வாகியுமான  அர்ரியன், சக்கரவர்த்தி அதிரியனை நண்பராகப் பாவித்துக் கடிதங்களை எழுதுவது குறிப்பிடத்தகுந்தது. நேற்றைய கிரேக்கம், அதன் உயர்ந்த இலட்சியங்கள் என்கிற பண்டையப் பெருமையை நினைத்து ஏக்கம் ; இழந்த காதல்பற்றிய பூடகமான குறிப்பு, அதிலிருந்து விடுபட ஆன்மீக முறையில் ஆறுதலைத்தேடும் உயிர்பிழைத்த ஜீவனின் முயற்சி ; அச்சுறுத்தும் தேசங்கள், கடுமையான தட்பவெப்பநிலைகளென அனைத்திற்கும் இவற்றில் இடமுண்டு. தவிர அதில் மிக ஆழமாக உணர்ச்சிப் பரவசத்துடன் குறிப்பிடப்பப்படும் பாலைப் பிரதேசங்களும், கடலும், அதனோடிணைந்த சேரும் சகதியும், குவிந்திருக்கும் கடற்பறவைகளும் அடங்கிய காட்சி, பளிங்குக்கல்லில் இறக்கைவிரித்துக் ஒரு கூட்டமாக நாரைகள் பறப்பதாகச் சித்தரிக்கபட்டு, வில்ல்லா அதிரியானாவில் கண்டெடுக்கப்பட்டது ; இன்று ரோமிலுள்ள தெர்மிஸ் அருங்காட்சியகத்தில் (Musée des Thermes) காணக்கிடைக்கிறது.

1949 வருடத்திய என்னுடைய குறிப்பிலிருந்து:  கச்சிதமாக  ஒருவரைச் சித்தரிக்க  முனையும்போது புத்தகம் மற்றும் பிறரை மகிழ்விக்கக்கூடிய மனிதரிடமிருந்தும் விலகி நிற்பதுபோல உணர்கிறேன். மனிதர் விதியை அறியமுயலும் புதியவர்களுக்கே நான் சொல்வதன் பொருள் விளங்கும். 


இன்றைய நாவல் எந்த வடிவத்தையும் விட்டுவைக்கவில்லை; அனைத்தையும் முயற்சித்துவிட்டது; நமக்கு வேறு வழியில்லை, அதைக் கடந்துசெல்லவேண்டிய நெருக்கடி. அதிரியன் என்கிற மனிதன் விதி குறித்த இந்த ஆய்வு, பதினேழாம் நூற்றாண்டில் ஒரு துன்பவியலாகவும், மறுமலர்ச்சிக் காலத்தில் கட்டுரையாகவும் கருதப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.


உண்மையில் இந்தப் புத்தகம் எனக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு மகத்தான படைப்பின் சுருக்கம். ஒவ்வொரு இரவும், எனக்குப் பரிச்சயமற்ற வேறொரு காலத்துடன் வெகு நெருக்கமாக அண்மித்து அதன் விளைவாக கண்ணூற்ற  நெடிய தரிசனங்கள் கிட்டத்தட்ட இயல்பாக என்னுள் ஏற்படுத்திய தாக்கம்; அதனை எழுத்தில் வடிக்கப் பழகிக்கொண்டேன். எதையும் விடவில்லை; ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு அசைவும், புரிந்துகொள்ளக் கடினமான நுட்பங்களும் குறித்துக்கொள்ளப்பட்டன. அதுபோலக் காட்சிகள். இரண்டு வரிகளில் சுருக்கமாகச் சித்தரிக்கப்பட்டவை என்னுள் விரிவாக, அதேவேளையில் மெல்ல நகர்ந்து செல்லும். அனைத்தையும் ஒன்றுடனொன்று இணைத்திருப்பின் கையாண்ட விவரணைகளும் பிறவும் சில ஆயிரம் பக்கங்கள்கொண்ட தொகுப்பாக உருமாறியிருக்கும். ஆனால் இரவெல்லாம் எழுதியதை விடிந்ததும் தீயிலிடும் வழக்கமும் என்னிடமிருந்தது. அவற்றில் எண்ணற்ற மிக மோசமான தியானவகைகளும், சில ஆபாச விவரணைகளும் அடக்கம்.


“அதிரியன், அது நீ தான்” என்று உங்களிடம் சொல்லும் நபர்களின் செயல் அநாகரிகம் எனில், முற்றிலும் அந்நியத்தன்மைகொண்ட ஒரு பொருளை எழுதத் தேர்வு செய்ததைக் கண்டு வியப்புறுவதும் அதற்கு நிகரான  அநாகரிகத் தன்மைகொண்டதெனலாம்.  ஆவிகளை அழைக்கும் தருணத்தில் தன் கட்டைவிரலத் துண்டித்துக்கொள்ளும் சூனியக்காரனுக்குத் தன் இரத்தத்தைக் குடித்த ஆவிகள், தனது அழைப்பிற்குக் கீழ்ப்படியுமென்று தெரியும். தவிர அவனுடன் பேசும் குரல்கள், அவன் எழுப்பும் உரத்த சப்தத்தைக்காட்டிலும்  விவேகத்தன்மையும், மரியாதையும் கொண்டவை என்பதையும் அவன் அறிந்தவன் அல்லது கட்டாயம் அறிந்து வைத்திருக்கவேண்டும்.


நான் எழுதுவது ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை அல்ல என்கிற உண்மையை வெகு சீக்கிரம் நான் உணர்ந்தேன். உணர்ந்த மறுகணத்திலிருந்து அம்மனிதர் சார்ந்த உண்மைகளில் கூடுதல் மரியாதையும், கூடுதல் அக்கறையும் செலுத்தினேன்; என் பங்கிற்கு முடிந்தமட்டும் அமைதிகாத்துச் செயல்பட்டேன்.


சொல்லப்படும் ஒவ்வொரு வாழ்க்கையும், ஒரு வகையில் உதாரணத்திற்குரியதே; நடைமுறை உலகினை நமது சொந்த வழிமுறையில் கட்டமைக்க அதன் அமைப்பு குறித்து சாதகமாகவோ பாதகமாகவோ எழுதுகிறோம்.  எவ்வாறாயினும், என்னை விலை கொடுத்தேனும் உயர்த்திப் பிடித்தோ அல்லது குறைத்துமதிப்பிட்டோ, பெரிதும் மிகைப்படுத்தப்படும்  அல்லது எச்சரிக்கையுடன் தவிர்க்கப்படும் விவரங்கள் காரணமாக,  ஏறக்குறைய சுயசரிதை எழுத்தாளர்கள் அனைவருமே  தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்  என்பதும் உண்மை; சுருங்கக்கூறின் தன்னால், பிறரால் கட்டமைக்கப்பட்ட ஒரு மனிதன் இடத்தைப் புரிந்துணரப்பட்ட மனிதன் இட்டு நிரப்புகிறான். மனிதவாழ்க்கையின் வரைபடம் என்பது ஒரு கிடைமட்டக் கோடு, இரண்டு செங்குத்துக்கோடுகள் என்றில்லாது,  மூன்று வளைகோடுகளால் ஆனது;  அவை மூன்றும் முடிவின்றி இழுபட்டவை என்பதன்றி, தொடர்ந்து நெருங்குவதும் விலகுவதுமாக இருப்பவை. பிறர் கூறுவதை அலட்சியம் செய்து, அவற்றை  எப்போதும் நமது பார்வையிலேயே வைத்திருப்பது அவசியம்.  அக்கோடுகளில் முதலாவது  ஒருவன்தான் எப்படி  இருக்கிறோம் என்று நினைப்பது;  இரண்டாவது, தான் என்னவாக இருக்கவேண்டுமென அவன் விரும்புவது; மூன்றாவது கோடு அவன் என்னவாக இருந்தான் என்பதாகும்.  


இவையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்; ஆனால் உண்மையில் நடப்பது என்ன? அவரவர் விருப்பப்படி நினைவுச் சின்னங்களை எழுப்புகிறோம். அசலான கற்களை உபயோகித்துக் கட்டிஎழுப்புவதேகூடக் காரியம் சித்திபெறுவதற்கான நல்லதொரு முயற்சி.


மனித சாகசத்தை அனுபவித்த ஒவ்வொரு உயிரினமும் நானென்கிற எண்ணம் என் மனதிலுண்டு.


இந்த 2 ஆம் நூற்றாண்டுமீது  எனக்கு ஆர்வம் அதிகம்; ஏனெனில் அது வெகுகாலம் கடைசி சுதந்திர மனிதர்களின் நூற்றாண்டாக இருந்தது. நம்மைப் பொறுத்தவரை ஏற்கனவே அக்காலத்திலிருந்து ஒருவேளை வெகுதூரம் வந்திருக்கலாம்.


டிசம்பர் 26, 1950 அன்று, கடுங் குளிர் நிலவிய மாலையொன்றில், அட்லாண்ட்டிக் கடலோரம். அமெரிக்காவில் உள்ள மவுண்ட் டெசர்ட் தீவின் கிட்டத்தட்ட துருவமுனை  அமைதியில், பய்யே நகரின் கி.பி 138ஆம் ஆண்டு கடுமையான ஜூலை வெப்பகாலமாகக் கற்பனை செய்து திரும்ப வாழ முயற்சித்தேன். கால்களின் போர்வையின் பாரம், அது தரும் எரிச்சல்; தமக்குச் சோகத்தை அளித்த வதந்திகளில் ஒரு மனிதன் மூழ்கியிருக்க இங்குமங்குமாக அவனைத் தேடும் அலையில்லாத கடலின் எங்கிருந்தோ கேட்கும் ஒலி. இறுதிக்கட்டத்தின் சாட்சியாகத் தொண்டைக் குழிக்குள் இறங்கும் நீர்,  கடைசித் தலைச்சுற்றல்,  இறுதிக் காட்சிகள் அனைத்தும் கண்முன்னே தெரிகின்றன. இனி நடக்கவேண்டியது சக்கரவர்த்தியின் இறப்பு மட்டுமே

தொடரும்……

அதிரியன் நினைவுகள்

“அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள்
Exit mobile version