- ஜப்பானியப் பழங்குறுநூறு
- துயரிலும் குன்றா அன்பு
- உனக்காக உறைபனியில்
- நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்
- கடவுளும் காணா அதிசயம்
- கனவிலேனும் வாராயோ?
- எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?
- உயிரையும் தருவேன் உனைக்காண
- நீ வருவாயென!
- மலைவளி வீழ்த்து தருக்கள்!
- துயர் கூட்டும் நிலவு
- செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை
- ஊற்றுநீர் அன்ன தூய இதயம்
- குளிரில் தனிமை கொடிது
- வெண்பனியா வெண்மலரா?
- பிரிவினும் உளதோ பிரிதொன்று?
- நிலவு ஒரு பனியாகி
- மலையாற்றின் இலையணை
- சக்குராவின் சலனம்
- நீண்ட வாழ்வே சாபமோ?
- மனித மனமும் மலர் மணமும்
- கோடைநிலா எங்கே?
- புல்நுனியில் பனிமுத்து
- கொடிவழிச் செய்தி
- இறை நின்று கொல்லுமோ?
- காணும் பேறைத் தாரீரோ?
- சொல்லாத காதல் எல்லாம்
- காதல் மறைத்தாலும் மறையாதது
- காற்றினும் கடியது அலர்
- மறவேன் பிரியேன் என்றவளே!
- காதல்வலி விதைக்கும் வெறுப்பு
- தேடலும் மறத்தலும்
- ஜப்பானிய பழங்குறுநூறு 47-50
- வலிவிடு தூது
- வாள்போல் வைகறை
- நெஞ்சம் மறப்பதில்லை
- நிலவினும் நெடிது!
- இடம் மாறினும் மணம் மாறுமா?
- காவலும் தாண்டுவது காதல்
- பனிவிலகலில் அக்கரை வெண்மை
- எனக்கெனவே மலர்ந்தாயோ?
- விழியிலிருந்து நினைவுக்கு
- உள்ளும் புறத்தும் தனிமையே!
- காதல்மொழிகள் கடலலை போலே!
- கேட்டதும் கிடைத்ததும்
- துள்ளிவரும் வெள்ளலையே!
- இடம்பெயரும் புள்ளினங்காள்!
- மைக்குழற் செறிவன்ன காதல்
- துயரறுத்தலே துயரமோ?
- உள்ளத்தில் உள்ளேனா?
- தூவானமும் வெண்வானமும்
- ரகசியமானது காதல்
- உடைகளும் சுமையடி தனிமையிலே!
- காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!
- துன்பம் போக்குவதே தூயப்பணி
- எரிதழல் உள்ளம்
- துயர்சூழ் உலகில் தனிமை
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
おほけなく
うき世の民に
おほふかな
わが立つ杣に
すみぞめの袖
கனா எழுத்துருக்களில்
おほけなく
うきよのたみに
おほふかな
わがたつそまに
すみぞめのそで
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: மதகுரு ஜியென்
காலம்: கி.பி. 1155-1225.
இத்தொடரின் 76வது பாடலை (துள்ளிவரும் வெள்ளலையே!) இயற்றிய அமைச்சர் ததாமிச்சியின் மகன். கி.பி. 1219ல் பதிப்பிக்கப்பட்ட குகான்ஷோ என்ற புகழ்பெற்ற நூலின் ஆசிரியர். புத்த மதத்தின் பார்வையில் மனிதகுல வரலாறு என்ற பொருண்மையில் அமைந்த இந்நூல் இன்றும் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தனது 10ம் வயதில் புத்த மதத்தின்மேல் ஈடுபாடு கொண்டார். எனினும் இவரது தந்தை பேரரசர் கோதொபாவின் அரசவையில் உயர்ந்த பொறுப்பில் இருந்ததால் அவருக்குப்பின் அரசவைப் பொறுப்பையும் ஏற்க வேண்டியிருந்தது. தனது பரந்துபட்ட உலக அறிவால் 29வது வயதிலேயே பேரரசரின் முதன்மை அரசியல் ஆலோசகர் என்ற நிலையில் வைத்து அழகுபார்க்கப்பட்டார். ஆனால் 7 ஆண்டுகளிலேயே அரசியலில் ஆர்வம் குறைந்து கி.பி. 1192ல் தெந்தாய் புத்தமதப் பிரிவின் தலைவராக ஆனார்.
கி.பி. 767ல் மதகுரு சாய்ச்சோ இப்பிரிவைத் தோற்றுவித்த அதே ஹியெய் மலையிலுள்ள என்ர்யாக்குஜி கோயிலில் தலைமை மதகுருவாகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் தனது 70ம் வயதில் வாழ்வின் இறுதி நெருங்கியதை உணர்ந்தாரோ அல்லது தனது கடமைகள் முடிந்துவிட்டன என நினைத்தாரோ இத்தொடரின் 12வது பாடலை (கொண்டல் விலக்காயோ கொண்டலே!) இயற்றிய மதகுரு ஹொன்ஜோவின் வழியிலேயே உயிருடன் கல்லறைக்குள் புகுந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாகத் தனிப்பாடல் திரட்டு ஒன்றும் 270 பிற பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன. காலத்தால் அழியாத 36 பிற்காலக் கவிஞர்கள் பட்டியலில் இவர் இடம்பெற்றிருக்கிறார்.
பாடுபொருள்: துயரறுப்பதே நோக்கம்
பாடலின் பொருள்: என்னால் முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் இவ்வுலக மக்களைத் துன்பத்திலிருந்து காப்பதே என் இலக்கு.
கி.பி. 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானில் ஹோகென், ஹெய்ஜி என்ற இருபெரும் உள்நாட்டுக் கலவரங்களும் கெம்ப்பெய், ஜோக்யூ என்ற இரு போர்களும் நடைபெற்று நாடே விரக்தியான அமைதியற்ற நிலையில் இருந்தது. அரசமைப்பே நிலையற்று இருந்ததால் மன்னர்களால் நாட்டு மக்கள் ஆற்றுப்படுத்தப்பட் இயலாத நிலையில் கடவுளாவது அமைதி வாழ்க்கையைத் தரமாட்டாரா என ஏங்கினர். இது மனிதகுலத்தின் இயல்பும் கூட. அப்போது புதிதாக மதகுருவாகப் பதவியேற்றிருந்த இப்பாடலின் ஆசிரியருக்கும் அத்தகைய உந்துதல் ஏற்பட்டதில் வியப்பில்லை. ஆனால் இளவயதாக இருந்தாலும் அறிவு முதிர்ச்சியால் தன் எல்லைகளை உணர்ந்தே இருந்ததால்தான் தன்னால் முடியுமா என்ற ஐயத்துடனே பாடலைத் தொடங்குகிறார்.
இதற்கு முந்தைய பாடல்களிலும் சட்டையின் கைப்பகுதி இடம்பெற்றிருக்கிறது. அப்பாடல்கள் எல்லாம் அழும்போது பெருகும் கண்ணீரைத் துடைத்துத் துடைத்து ஈரமாக இருக்கிறது என்ற பொருளில் கையாண்டன. ஆனால் இப்பாடல் வேறொரு கோணத்தில் சட்டையின் கைப்பகுதியைச் சுட்டுகிறது. புத்தர் எமக்களித்த இந்த அங்கியின் கருமையிடப்பட்ட நீண்ட கைப்பகுதியால் மக்களை அரவணைத்துத் துன்பத்திலிருந்து காப்பேன் என்கிறார்.
வெண்பா:
முடிவது துன்பம் எனினும் உலகின்
அடியுணி ஏங்கும் மனதில் – விடியல்
தரவே கடமையும் கொள்ளக் கடவுளும்
தந்ததே சட்டையின் கைஅடியுணி – அடிபட்டவர் அல்லது பாதிக்கப்பட்டவர்
பாடல் 96: பனிவிழும் முதுவனம்
மூலப்பாடம்:
கான்ஜி எழுத்துருக்களில்
花さそふ
嵐の庭の
雪ならで
ふりゆくものは
わが身なりけり
கனா எழுத்துருக்களில்
はなさそふ
あらしのにはの
ゆきならで
ふりゆくものは
わがみなりけり
ஆசிரியர் குறிப்பு:
பெயர்: அமைச்சர் கிண்ட்சுனே
காலம்: கி.பி. 1171-1244.
இத்தொடரின் தொகுப்பாளர் சதாய்யேவின் மனைவியின் தம்பி இவர். தலைமை அமைச்சராக இருந்த இவர் பின்னாளில் பதவியைத் துறந்து மதகுருவாக மாறிவிட்டார். ஃபுஜிவாரா வம்சத்தின் கிளைவம்சமான சய்யோன்ஜி பரம்பரை இவரிடமிருந்து தொடங்குகிறது. பேரரசர் கோதொபா ஷோகன்களை வீழ்த்த முயன்று ஜோக்யூ போராக வெடித்தது என்றும் யொஷிதொக்கி உஜி ஆற்றங்கரையில் கோதொபாவைச் சிறைப்பிடித்துப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் எனவும் பார்த்தோமல்லவா? அப்போர் முடிவுக்கு வருவதற்குச் சிலநாட்கள் முன்பு தலைமை அமைச்சரான இவரைக் கைது செய்தார் யொஷிதொக்கி. பேரரசர் கோதொபாவின் திட்டங்கள் எல்லாம் இவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என்ற யொஷிதொக்கியின் கணிப்பு மிகவும் சரியாக இருந்தது. கோதொபாவின் திட்டங்கள் அனைத்தையும் இவர் யொஷிதொக்கியிடம் காட்டிக்கொடுக்க, ஷோகன்களின் வெற்றி எளிதானது. வேறு வழியின்றிக் காட்டிக்கொடுக்க நேர்ந்ததாலோ என்னவோ, அதிகாரமிக்க பதவியைத் துறந்து மதகுருவாக மாறினார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 114 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
பாடுபொருள்: முதுமையடைதல்
பாடலின் பொருள்: என் குடிலின் வெளியே உதிர்ந்து கொண்டிருப்பது பனியா சக்குரா மலரா என்று தெரியவில்லை. ஆனால் உதிர்ந்து கொண்டிருப்பது என்னவோ நான்தான்.
முதுமையடைதலை விளக்கும் ஓர் எளிய பாடல். ஜப்பானில் பனிக்காலத்தில் பனி பொழிவது மிக அழகாக இருக்கும். வெப்பநிலை சுழியத்துக்குக் கீழ் செல்லும்போது மழை பெய்தால் தண்ணீர் உறைந்து பனித்துகள்களாக விழும். அப்போது காற்றடித்தால் பல துகள்கள் ஒன்றாகச் சேர்ந்து கட்டி போல் ஆகிக் காற்றில் மிதந்து அங்குமிங்கும் அலையும். பனிக்காலம் முடிந்து வசந்தகாலம் தொடங்குவதற்கு அறிகுறியாக ஜப்பானில் சக்குரா எனும் மலர் பூக்கும். மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரம் முழு அழகுடன் பூத்துக்குலுங்கும். அப்போதும் அது மழை மற்றும் காற்றுக் காலம்தான். ஆனால் வெப்பநிலை சுழியத்துக்குச் செல்லாது. வீசும் காற்றால் வெண்ணிற சக்குராவின் இதழ்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து காற்றில் அசைந்து தரையில் வீழ்வது பனித்துகள்கள் காற்றில் அலைந்து தரையில் வீழ்வது போலவே இருக்கும். அதுபோலவே ஒவ்வொரு நாளும் உடலும் மனமும் வலுவிழந்து சிறிது சிறிதாக முதுமையை நோக்கி நகரும். பனி பொழிந்தால் மீண்டும் அடுத்த சுழற்சியில் புதிய பனி உருவாகும். சக்குரா உதிர்ந்தால் மீண்டும் அடுத்த பருவத்தில் புதிய மொட்டு உருவாகும். ஆனால் முதுமை என்பது தொடர்ச்சியாக நிகழ்வது. எனவே, உண்மையில் உதிர்ந்து கொண்டிருப்பது நாம்தான் என்கிறார் புலவர்.
வெண்பா:
பனியிலும் தீங்குளிர் தீண்டிடும் தட்பம்
இனியவும் என்றே வசந்தம் – தனிச்சுழி
அல்ல தெனினும் உதிர்தல் முதுமையே
என்றே முடிவது வாழ்வுதனிச்சுழி – அறிவியல் கருத்தியல்படி, எட்ட முடியும் சிறும வெப்பநிலை.
(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
