- அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம்
- செயற்பாலது ஓரும் அறன்
- நுண்பொருள் காண்பது அறிவு
- வகையறச் சூழ்ந்தெழுதல்
- தூய்மணி சிந்திடும் தோய்ந்த நெருப்பு
- ஒருமையுள் ஆமைபோல்
- நெஞ்சம் நிமலமாய் நிலைபெறின்…
- எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்
- கர்மத்தின் வகையறிதல்
- செயல் என்னும் நிவேதனம்
- ஒன்றே நினைந்திருக்க உள்ளம் கனியும்
- ஞானம், ஞேயம், ஞானகம்யம்
- சத்யம், ஞானம், அனந்தம் பிரம்ம
- ஆனந்தம் பிரம்மனோ வித்வான்
- சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
- கீதா முகூர்த்தம்
- நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
கீதையின் இரண்டாவது அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ஜூனன் கண்ணனிடம் சரணடைந்து “நான் உங்கள் மாணவன். உங்களிடம் சரணடைந்திருக்கிறேன். எனக்கு மேன்மையானது எதுவோ அதைக் கூறுங்கள்,” என்று வேண்டுகிறான். அதற்குப் பின்னர்தான் கிருஷ்ணன் தத்துவ உபதேசத்தைத் துவங்குகிறார். அவன் அவரிடம் சரணடைவதற்கு முன்பு போரிலிருந்து விலகி ஓடுவதற்கு பல்வேறு காரணங்களைக் கூறிப் புலம்புகிறான். அப்போது அவற்றை அமைதியாகக் கேட்டுக் கொள்கிறார் கிருஷ்ணர். பின்னர் இரண்டாம் அத்தியாயத்தின் துவக்கத்தில் அவனிடம், “நீ வீரன். அலியின் தன்மையை அடையாதே. எழு, போரிடு,” என்று அறிவுரை கூறுகிறார். இது அர்ஜூனனின் நண்பனாகவும், அவனது நலனில் ஆர்வம் கொண்டவராகவும் அவனுக்கு அவர் அளித்த பொதுவான அறிவுரை மட்டுமே. அவன் முழுமையாகச் சரணடைந்தபின்தான், தனக்கு எது நன்மையைத்தரும் என்று தெரியவில்லை என்பதை ஒப்புக்கொண்ட பிறகுதான் அவர் ஆத்ம உபதேசத்தைத் துவங்குகிறார்.
கீதையின் இரண்டாம் அத்தியாயத்துக்கு சாங்கிய யோகம் என்று பெயர். இங்கு சாங்கியம் என்ற சொல் கபிலரின் சாங்கிய தத்துவத்தைக் குறிக்கவில்லை. சாங்க்யம் என்ற சொல்லுக்கு “ சம்யக் க்யாயதே அனேன இதி சாங்க்யம்.” என்ற ஒரு விளக்கம் இருக்கிறது. அதாவது, ஆத்மாவின் உண்மைத் தன்மையை சரியாக, பரிபூரணமாக அறிந்துகொள்ளும் ‘ஆத்ம ஞானத்தை’ சாங்க்யம் என்ற சொல் குறிக்கிறது.
அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்டதோ தனது அப்போதைய பிரச்னையான உற்றார், உறவினரை கொல்லாமல் தவிர்ப்பது எப்படி என்பதற்கான விடையை மட்டும்தான். இதைத்தான் அவன் தன்னுடைய பிரச்னையாக உணர்ந்திருந்தான். ஆனால் இது அவனது மேலோட்டமான பிரச்னை மட்டுமே. அவனது உண்மையான பிரச்னை தன்னைப் பற்றிய உண்மையான அறிவை அடையாதிருத்தல்தான். எந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிட்டால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்து போய்விடுமோ அதற்குத்தான் வேதாந்தம் தீர்வை அளிக்கிறது.
கிருஷ்ணர் ஒரு மெல்லிய புன்னகையுடன் தன் உபதேசத்தைத் துவங்குகிறார் என்று கீதை சொல்கிறது. இந்தப் புன்னகைக்கான காரணத்தை பல்வேறு ஆசிரியர்களும் பலவேறாக விளக்கியிருக்கிறார்கள். அர்ஜூனனை நிமித்தமாகக் கொண்டு இந்த உலகிற்கு கீதையை அருள ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் கிருஷ்ணரின் இதழ்களினின்றும் எழுந்த புன்னகை அது என்று ஒரு விளக்கம் இருக்கிறது.
இரண்டாம் அத்தியாயம் பதினொன்றாவது சுலோகத்திலிருந்து தனது உபதேசத்தைத் துவங்குகிறார் கிருஷ்ணர். ஆதி சங்கரர் கீதைக்கு உரை எழுதுகையில் இந்த சுலோகத்திலிருந்தே தன்னுடைய உரையைத் துவங்குகிறார். ஏனெனில் இங்கிருந்துதான் உண்மையில் வேதாந்தம் துவங்குகிறது. கீதை உபநிஷத் என்ற இடத்துக்கு நகர்கிறது. இரண்டாவது அத்தியாயத்திலேயே கிருஷ்ணர் ஆத்ம தத்துவத்தின் அதி உன்னதமான உண்மைகளை அர்ஜூனனுக்கு உபதேசிக்கிறார். அவற்றின் துவக்கமாக பதினொன்றாவது சுலோகத்தில் அவர் கூறும் விஷயம் முழு வேதாந்தத்தையே உள்ளடக்கியது போன்றதாகும். அதில் அவர் என்ன சொல்கிறார்?
அவர் அர்ஜூனனிடம் இவ்வாறு கூறுகிறார்: “கவலையுறத்தகாத விஷயங்கள் குறித்து நீ கவலையுறுகிறாய். (அதே நேரம்) ஞானியைப் போல் பேசுகிறாய். ஞானியர்களோ இறந்தவர்கள் குறித்தோ, இருப்பவர்கள் குறித்தோ எப்போதும் கவலைப்பட மாட்டார்கள்.”
உபதேசத்தின் துவக்கமாக உள்ள கீதையின் இந்த சுலோகத்துக்கு உபக்ரம சுலோகம் என்று பெயர். கிருஷ்ணரின் இந்தக் கருத்தை ஆராய்ந்து பார்ப்போம். ஞானியர்கள் துயரப்படமாட்டார்கள் என்று அவர் சொல்கிறார். எனில் அஞ்ஞானிகள்தாம் துயரத்தில் உழல்வார்கள் என்று கொள்ளலாம். எனவே ஒருவனது துயரத்துக்குக் காரணம் அறியாமைதான் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எதைக் குறித்த அறியாமை? தன்னுடைய உண்மையான தன்மையைக் குறித்த அறியாமை. எனவே துயரத்திலிருந்து விடுபட ஒரே வழி தன்னுடைய உண்மையான தன்மையை அறிந்து கொள்ளுதல் மட்டும்தான். துயரத்திலிருந்து விடுபடுவதற்கான சாதனம் – ஆத்ம ஞானம். ஆத்ம ஞானத்தை அடைந்தால் நாம் அடையக்கூடிய சாத்யம் நம்முடைய சோக, மோகங்கள் நீங்கி சம்சாரத்திலிருந்து விடுதலை அடைதல்.
கீதையை பாரதி மொழிபெயர்த்திருக்கிறார். இந்த சுலோகத்துக்கு அவருடைய மொழிபெயர்ப்பு ஓர் அழகிய கவிதை.
பாரதியின் மொழியாக்கம்:
ஶ்ரீ பகவான் சொல்கிறான்,
துயர்படத்தகாதார் பொருட்டு துயர்ப் படுகின்றாய். ஞான வுரைகளு முரைக்கிறாய்! இறந்தார்க்கேனும் இருந்தார்க்கேனுந் துயர் கொளார் அறிஞர்.
உண்மையில் மரணம் என்ற நிகழ்வு ஒருவனுக்குள் துயரத்தை உருவாக்குவதில்லை. ஒவ்வொரு கணமும் உலகில் மரணங்கள் நிகழ்ந்த வண்ணம்தான் உள்ளன. மரணம் துயரத்தைத் தருவது எப்போதென்றால், அது நம்மைச் சார்ந்தவர்களுக்கு நிகழும்போதுதான். அல்லது நமக்கே அது நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தினாலும் துயரம் நமக்கு ஏற்படுகிறது. எனவே மரணம் அல்ல, நான், எனது என்ற பாவனையே ஒருவனது துயரத்துக்கு உண்மையான காரணம். இதுவே பந்தத்துக்கும் காரணம். ஒருவனது துயரம் நீங்க வேண்டும் என்றால் அவனது சூழ்நிலையை மாற்ற வேண்டிய அவசியமில்லை. அவனை அந்தச் சூழ்நிலையோடு பிணைத்து வைத்திருக்கும் “நான்” “எனது” என்ற எண்ணங்களை மாற்றினாலே போதும்.
துயரம் என்பது “நான்” எனப்படும் ஆத்மாவின் தனித்த இயல்பாக இருக்க முடியாது. அப்படித் துயரமே அதன் இயல்பாக இருந்தால் அதை நீக்கவே முடியாது. நெருப்பிலிருந்து வெப்பத்தையோ, தழலிலிருந்து ஒளியையோ நீக்கி விடமுடியுமா? எனவே துயரம் ஆத்மாவுக்குத் தொடர்பில்லாத ஒரு இயல்பு. ஆத்மாவின் உண்மையான இயல்பு ஆனந்தமாக இருத்தலே. எனவேதான் இயல்பிலேயே நாம் ஆனந்தமாக இருப்பதை விரும்புகிறோம். துக்கத்தை நாம் விரும்புவதில்லை. அது நம் இயல்பாகவே இருந்திருந்தால் துக்கத்தை மகிழ்ச்சியோடு(?!) ஏற்றுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்போம். ஆத்மாவின் உண்மையான இயல்பை அறியாமல் இருத்தலாலேயே துயரம் நமக்கு ஏற்பட்டிருப்பதாக எண்ணிக் கொள்கிறோம். மீண்டும் அதே பாம்பு, கயிறு உதாரணத்துக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இருப்பது கயிறுதான். அதைப் பாம்பு என்று எண்ணுவதன் அறியாமையில்தான் அச்சமும், துயரமும் விளைகின்றன. அதேபோலத்தான் அறியாமையின் விளைவாக நாம் அல்லாத விஷயங்களை நாம் என்று எடுத்துக்கொண்டு துயரத்துக்கு ஆளாகிறோம். அப்படியெனில் “எனது” என்று நான் தேர்ந்தெடுத்துள்ள என்னைச் சார்ந்தவர்களும், பொருட்களும் என் துயரத்துக்குக் காரணமாக இருக்க முடியுமா? நான் உறக்கத்தில் வீழும்போது பொருட்களோ, மனிதர்களோ எனக்குத் துயர் தரும் ஆற்றலை இழந்து விடுகின்றனர். எனவே அவர்களும் உண்மையில் என் துயரத்துக்குக் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. உண்மையிலேயே என்னுடைய துயரத்துக்கு யார் காரணம் என்பதை அறிந்து கொள்வதற்கான ஆராய்ச்சி துவங்கப்பட வேண்டும் என்று கீதை கூறுகிறது. அந்த ஆராய்ச்சிக்கு “ஆத்ம அனாத்ம விசாரம்” என்று பெயர்.
இயல்பிலேயே எல்லா உயிர்களும் “நான்” என்பதன் உண்மைத்தன்மையை அறியாமல்தால் பிறக்கிறார்கள். தன்னைப் பற்றிய தவறான புரிதலோடுதான் வாழ்கிறார்கள். தன்னைப் பற்றிய அறியாமை எங்கு தொடங்கியது என்பதை குறிப்பிட்டுவிட முடியாது. எனவே அறியாமை “அனாதி” என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் அதற்கு ஒரு முடிவு உண்டு. சரியான அறிவை அடைந்தபின் ஒருவனது அறியாமை முடிவுக்கு வருகிறது. அந்த அறிவை அடைவதற்கு முதலில் ஆத்ம அனாத்ம விசாரம் செய்யப்பட வேண்டும். இந்த சுலோகத்தில் ஆத்ம அனாத்ம விசாரத்துக்கான அச்சாரம் போடப்படுகிறது. மேலும் யோகத்திற்கான முதற்படியும் இங்கு மறைமுகமாக புகட்டப்படுகிறது. ஞானிபோல் பேசுவதும், அஞ்ஞானி போல விசனப்படுவதும் அர்ஜுனன்பால் இருந்த முரண்பாடாகும். அறிந்தோ அறியாமலோ பலபேர் இத்தவற்றை செய்கின்றனர். அவர்கள் சொல்வது ஒன்றாகவும், செய்வது வேறொன்றாகவும் இருக்கிறது. மனம், மொழி, செயல்(மெய்) ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் இயங்குவதே யோகம் எனப்படுகிறது. யோகம் புரிதலே ஒரு சாதகனது முதற்கடமையாகின்றது. மனமொன்று எண்ண, மொழியொன்று பேச, இவ்விரண்டிற்கும் மாறான மற்றொன்றை மெய் செய்ய, மனிதனது ஆற்றல் சிதறலடைகிறது. ஆகவே ஒருவன் சிந்திப்பதும், சொல்லுவதும், செய்வதும் முற்றிலும் பொருந்தி ஒன்றுபட்டிருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவன் ஆத்மசக்தியுடையவன் ஆகின்றான்.
கிருஷ்ணர் இரண்டாம் அத்தியாயத்தில் அர்ஜூனனைப் பார்த்து மூன்று முக்கியமான கேள்விகளை மறைமுகமாகக் கேட்கிறார். (அல்லது அந்தக் கேள்விகளை அவர் கேட்பதாக அவரே பாவித்துக்கொண்டு அவற்றுக்கு விரிவான விடையளிக்கின்றார்). இந்தப்பகுதியே ஆத்ம அனாத்ம விசாரமாக வருகிறது. அவரது கேள்விகள்: உன்னுடைய துயரம் பீஷ்மர், துரோணர் ஆகியோரின் ஆத்மாவைக் குறித்ததா? அல்லது அவர்களது அனாத்மாவைக் குறித்ததா? அல்லது அவர்களைக் கொல்வது அதர்மம் என்று கருதி துயரப்படுகிறாயா? இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் நோக்கிலேயே பகவானின் உபதேசம் அமைந்துள்ளது.
முதலில் அவர் ஆத்மா மற்றும் அனாத்மாவின் உண்மையான இயல்புகளைக் கூறுகின்றார். அந்த இயல்புகளின் அடிப்படையில் பார்த்தால் நீ துயரப்படுவது தகாது என்று கூறுகிறார். “முன்பு எப்போதாவது நான் இருந்ததில்லை என்பது இல்லை. நீயும், இந்த அரசர்களும் இருந்ததில்லை என்பதும் இல்லை. இனி நாம் எதிர்காலத்தில் இல்லாமல் போவோம் என்பதும் இல்லவே இல்லை.” என்கிறார். இந்தக் கூற்றைக் கூறுவதிலிருந்து ஆத்மா நித்யம் (என்றுமுள்ளது) என்பதை நிறுவுகிறார். எந்த ஒரு பொருளுக்கும், உற்பத்திக்குமுன் இல்லாமலிருத்தல் என்பதும், அதனுடைய அழிவிற்குப்பின் இல்லாமலிருத்தல் என்பதும் உண்டு. இது அநித்யத்தை குறிக்கிறது. நான் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றியவன் என எண்ணுகிறோம். பிறந்த நாள் கொண்டாடுகிறோம். ஆனால் உண்மையில் தோன்றியது இந்த நாமரூபம்; உடல்களும், அவற்றின் பெயர்களும்தாம். உடலின் தோற்றத்தை ஆத்மாவிற்கு ஏற்றிவைத்து ‘நான் பிறக்கின்றேன், முதுமை அடைகின்றேன், இறக்கப் போகின்றேன்’ என்று குழம்புகிறோம். இங்கு பகவான் எதிர்மறை வாக்கியங்கள்(இருந்ததில்லை என்பது இல்லவே இல்லை) மூலம் அதை நீக்குகிறார். ஆத்மாவாகிய ‘நான்’ பிறப்பதில்லை. இல்லாமல் போவது என்பது இல்லவே இல்லை. ஆத்மா என்றும் இருப்பது – நித்யம் என்கிறார்.
மேலும் ஆத்மா ஒன்றுதான் என்பதையும் கிருஷ்ணர் இங்கு நிறுவுகிறார். “நான், நீ(அர்ஜுனன்), இந்த மன்னர்கள் அனைவரும் இல்லாமல் இருந்ததில்லை. இனி இல்லாமல் போவதும் இல்லை’ என பன்மையில் கூறுவது, உடல்கள் என்ற உபாதியின் அடிப்படையில். உதாரணமாக பானைகள் வந்து செல்கின்றன. பானையினுடைய ஆகாசம் (வெளி) என்பது அனைத்து பானைகளுக்கும் ஒன்றுதான். ஏனெனில் பானைகளுக்கு உள்ளும் வெளியும் பரவிக்கிடக்கும் வெளி ஒன்றே. அதுபோல கிருஷ்ணர், அர்ஜுனன், கூடியிருந்த மன்னர்கள் என உடல்கள் பலவாயினும், ஆத்மா ஒன்றுதான். காலத்திற்குட்பட்ட அநித்யமான இந்த உடல்கள் குண, வடிவ வரையறைக்குட்பட்டதாக பலவாக உள்ளது. காலத்தை கடந்த நித்ய ஆத்மா, வடிவம் மற்றும் குணங்களைக் கடந்து ஒன்றாக உள்ளது.
கிருஷ்ணர் ஆத்மா மாற்றங்களுக்கு உட்படாததது என்றும் கூறுகிறார். எவ்வாறு இவ்வுடலுக்கு குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் ஆகியன மாறிமாறி வருகின்றனவோ, அதுபோலவே இன்னொரு உடலை எடுப்பதும் நடக்கிறது. இந்த விஷயத்தில் ஞானி கவலையுறுவதில்லை என்கிறார். ஞானியை அவர் தீரன் என்றே அழைக்கிறார். உண்மையான தீரன் என்பவன் தன்னுடைய உடலின் மாற்றங்கள் குறித்தோ, அழிவு குறித்தோ துயரப்படாதவன்தான். அவனுடைய ஆத்ம ஞானமே அவனுக்கு அந்த தீரத்தை வழங்குகிறது.
ஆத்மாவின் அறிவு சொரூபமானது சூட்சுமமான மனதில் ப்ரதிபிம்பிக்கிறது. சித் சொரூபமான ஆத்மாவின் ஆபாசம்(reflection) அதன் மீது நடக்கிறது. எனவே ஜடமான மனம் அதனால் ஒளியூட்டப்பட்டு, அறியும் தன்மையை அடைகிறது. இதற்கு சிதாபாசம் என்று பெயர். மரணத்தில் சிதாபாசத்துடன் கூடிய மனம் உடலைவிட்டு வெளிக் கிளம்புகிறது. இப்படி வெளிக்கிளம்புவதையே நாம் உயிர் என்கிறோம். எவ்வாறு இந்த உடலில் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம் ஆகியன மாறிமாறித் தோன்றும்போது அவ்வுடலை அறியும் நான் என்ற உணர்வுக்கு எந்த மாற்றமும் ஏற்படுவதில்லையோ, அதுபோலவே உயிர் உடலை விட்டுப் போனாலும் அதை அறியும் நான் என்ற உணர்வு மாறாமல் தொடர்ந்து இருக்கும். ஜடமான மனதில் சிதாபாசம் எதிரொளிப்பதால் மனத்தில் நான் என்ற உணர்வை அறிகிறோம். உயிர் பிரிந்தபிறகு மனமும் அதனோடு சென்று விடுவதால் நான் என்ற உணர்வை மனத்தில் அறிய வாய்ப்பில்லாமல் போகின்றது. எப்படி சூரிய ஒளியால் தண்ணீரில் பிரதிபலிக்க முடிந்து, கற்பாறையில் பிரதிபலிக்க முடியாமல் போகிறதோ அதுபோலத்தான் நான் என்ற உணர்வை அறிய சிதாபாசம் பிரதிபலிக்கும் மனம் அவசியமாக இருக்கின்றது. எனவே உடலின் மாற்றங்களின்போது எவ்வாறு நான் என்ற உணர்வு மாறாமல் இருக்கிறதோ அதுபோலவே ஒரு உடல் போய் வேறு உடல் வரும்போது அந்த நான் என்ற உணர்வு தொடர்ந்து மாறாமல் இருக்கிறது என்று கிருஷணர் கூறுகிறார்.
கீதையின் இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்தில் கிருஷ்ணர் மூன்று முக்கியமான தலைப்புகளை எடுத்துக் கொண்டு பேசுகிறார். ஒன்று ஆத்மாவின் இலக்கணம் அல்லது ஆத்ம அனாத்ம விசாரம். இரண்டாவது ஆத்ம ஞானத்துக்கு ஒருவனைத் தகுதிப்படுத்துவதற்கான சாதனையான கர்மயோகத்தின் இலக்கணம் மற்றும் அதன் செயல்முறைகள். மூன்றாவது ஆத்ம ஞானத்தை அடைந்த ஞானியின் இயல்பு எவ்வாறு இருக்கும் என்பதையும் வர்ணிக்கிறார். இந்த அத்தியாயத்தில் அவர் அகவிடுதலையடைந்த ஞானிக்கு ஸ்திதப்ரக்ஞன் என்று பெயர் கொடுக்கிறார். ஸ்திதப்ரக்ஞன் என்றால் புத்தியில் நிலை நின்றவன் என்று பொருள். இந்த மூன்று தலைப்புகளையும் சுருக்கமாகப் பார்க்க முயல்வோம்.
ஏற்கனவே ஆத்ம அனாத்ம விசாரப் பகுதியில் ஆத்மா என்றுமுள்ளது, மாறாதது என்பதை கிருஷ்ணர் நிறுவினார் என்பதைப் பார்த்தோம். மேலும் அவர் ஆத்மா சத் என்பதை “இல்லாததற்கு இருப்பு கிடையாது. இருப்பது இல்லாமற் போவதுமில்லை.” என்ற வாக்கியத்தின் மூலம் நிறுவுகிறார். பின்னர் ஆத்மா சர்வகதம் – எல்லா இடத்திலும் இருப்பது, அதாவது இருப்பது ஆத்மா ஒன்று மட்டும்தான் என்பதால் அதை எல்லா இடத்திலும் இருப்பதாகக் கருதிக் கொள்ளலாம் என்று கூறுகிறார். அப்படி எங்குமுள்ள ஒரு பொருளை அழிக்கும் வல்லமை எவருக்கும் இல்லை என்று கூறுகிறார். ஆத்மாவுக்கு அவினாசி- அழியும் தன்மை இல்லாதது என்று ஒரு பெயர் கொடுக்கிறார். ஆத்மா சத்-சித்- ஆனந்த வடிவமாக இருப்பதால் அதற்கு அழிவில்லை. சங்கரர் தன்னுடைய உரையில், ஸத்-சித்-ஆனந்த ஆத்மாவை எல்லாம் வல்ல ஈஸ்வரனாலும் கூட அழிக்க முடியாது என்கிறார். ஏனெனில் ஈஸ்வரனே ஆத்மாவாக இருக்கிறார். மேலும் ஆத்மாவை ஒருவன் ஒரு பொருளாக அனுபவிக்க முடியாது. ஏனெனில் எந்த ஒரு பொருளையும் அனுபவிப்பவனே அந்த ஆத்மாவாக இருப்பதால் அவனையே அவன் அனுபவித்துக் கொள்ள முடியாது. ஒருவன் தன்னை ஆத்மாவாக அறிந்து கொள்ள மட்டுமே இயலும். எனவே ஆத்மாவுக்கு அப்ரமேயம் (அனுபவத்திற்கு வராதது) என்ற பெயரை கிருஷ்ணர் கொடுக்கிறார். ஒருவனுடைய உடல் காரியம்(product) எனப்படுகிறது. ஒரு காலத்தில் தோன்றி, மாற்றத்திற்கு உட்பட்டு, முடிவை அடைவது உடல். இங்கு பகவான், தனது உடல் உட்பட, அவர்களின் முன் நின்றிருந்த அனைத்து உடல்களையும் சுட்டிக்காட்டி, ‘இந்த உடல்கள் முடிவுடையவைகள்(அந்தவந்த:)’ என்கிறார்.
இந்த உடல்கள் யாருடையது? ஸத்-வஸ்துவான ஆத்மாவே, இந்த உடலுக்கு இருத்தலையும், பிரக்ஞையையும் கொடுக்கிறது. ஆத்மாவின் அறிவு சொரூபத்தை சூட்சும உடல் ப்ரதிபிம்பிப்பதால், ஸ்தூல சரீரமும் உணர்வை அடைகிறது. ஆகவே உடல், அதில் வசித்துக்கொண்டிருக்கும் ஆத்மாவை சார்ந்தது. மாற்றத்திற்குட்பட்டு முடிவை அடையும் இந்த அனைத்து உடல்கள் என்று பன்மையிலும், ஆனால் என்றுமுள்ள மாற்றமடையாத ஆத்மா ஒன்றுதான் என்பதை ஒருமையிலும் குறிப்பிடுகிறார் கிருஷ்ணர்.
ஆத்மா அனுபவத்திற்கு வராதது மட்டுமல்ல. எந்த பொருளையும் அனுபவிக்கவும் இயலாதது. எந்தச் செயலையும் செய்யவும் இயலாதது. எனவே கிருஷ்ணர் ஆத்மாவை அபோக்தா (அனுபவிக்காதவன்), அகர்த்தா (செயல்புரியாதவன்) என்று குறிப்பிடுகிறார். “இந்த ஆத்மாவைக் கொலை செய்பவன் என அறிபவனும், கொல்லப்பட்டவன் என்று நினைப்பவனும் இருவரும் அறியவில்லை. இந்த ஆத்மா கொல்வதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை” என்று கூறுகிறார். கட உபநிஷத்திலிருந்து மந்திரத்தை நேரடியாகவே மேற்கோள் காட்டிப் பேசுகிறார் கிருஷ்ணர். ஆத்மா செயலில் ஈடுபடுபவனாகவோ, செயலுக்கான பொருளாகவோ இல்லை. அகர்த்தாவான ஆத்மாவின் மீது செயல் செய்பவனெனும் தன்மை(கர்த்ருத்வம்) ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லாச் செயல்களும், எல்லா அனுபவங்களும் ஆத்மாவின் முன்னிலையில்தான் நடந்தேறுகின்றன. அப்போது யார்தான் இந்தச் செயல்களையெல்லாம் செய்கிறார்கள்? யார்தான் இந்த அனுபவங்களுக்கெல்லாம் ஆட்படுகிறார்கள்? அதற்கான பதில் அனாத்மா என்றழைக்கப்படும் இந்த உடல், மனம் ஆகியவைதான் என்பதே. உடலுக்கு ஸ்தூல சரீரம் என்றும், மனத்துக்கு (மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கின் தொகுப்பு) சூட்சும சரீரம் என்றும் பெயர். ஆத்மாவின் ஞான சொரூபமானது அனாத்மாவான மனதில் சேதனத்துவத்தை(அறிவை) ப்ரதிபிம்பத்தை போல உண்டு பண்ணுகிறது. எப்படிக் கண்ணாடியில் சூரியனின் பிம்பம் பிரதிபலிக்கிறதோ அதுபோல. இதனால் ஜடமான மனம் ஆத்மாவைப் போல சேதனத்துவத்தை அடைகிறது. இப்போது மனம் கர்த்தா, போக்தா ஆகிறது. ஸ்தூல, சூட்சும சரீரத்தை, ‘நான்’ என எண்ணுவது அகங்காரம். மாறுபடும் தன்மையுடையது உடல். மாறாப் பெருநிலையில் வீற்றிருப்பது ஆத்ம சைதன்யம். தோன்றிய மேகம் மறையும் போது ஆகாசம் எப்படி அழிவதில்லையோ, அப்படி உடல் அழியும் போது ஆத்மா அழிவதில்லை என்பது கிருஷ்ணரின் உபதேசம்.
ஆத்மா நிர்விகாரமானது (மாற்றத்துக்குட்படாதது) என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறார் கிருஷ்ணர். உடல் ஆறுவிதமான மாற்றங்களுக்கு உட்பட்டது. ஷட் விகாரம் என்று அதற்குப் பெயர். அஸ்தி (இருத்தல்), ஜாயதே (பிறத்தல்), வர்ததே(வளர்தல்), விபரினமதே (மாறுதல்), அபக்ஷீயதே (தேய்தல்), வினஷ்யதி (மாய்தல்) ஆகியன அந்த ஆறு மாற்றங்களும். இந்த விகாரங்கள் ஆத்மாவுக்கு இல்லை என்று கிருஷ்ணர் கூறுகிறார். ஆத்மாவுக்கு அவினாசி (அழிவற்றது), நித்யம் (என்றுமுள்ளது), அஜம் (பிறவாதது), அவ்யயம் (குறையாதது), அவ்யக்தம் (புலன்களுக்கு விஷயமாக இல்லாதது), அசிந்த்யம் (சிந்தனைக்கு எட்டாதது), அவிகார்யம் (மாற்றமடையாதது) என்றெல்லாம் பெயர் கொடுத்து அழைப்பதன் மூலம் ஆத்மாவின் உண்மைத்தன்மையை நிறுவுகிறார் கிருஷ்ணர். ஆத்மா செயலைச் செய்பவனும் அல்ல, செயலைச் செய்விப்பனும் அல்ல என்று ஒரு சுலோகத்தில் கூறுகிறார் கிருஷ்ணர்.
ஒரு ஞானி தானே ஆத்மா என்று உணர்ந்திருக்கிறான். எனவே ஆத்மாவுக்கு கிருஷ்ணர் குறிப்பிடும் அத்தனை இலக்கணங்களும் அந்த ஞானிக்கே சென்று விடுகின்றன. ஒரு ஞானி ஒருபோதும் தன்னை ஞானி என்று உணர்வதில்லை. அவன் எப்போதும் தன்னை ஆத்மா என்றே உணர்கிறான். ஆத்மா எந்தச் செயலையும் செய்யாதது என்று அவன் அறிந்திருப்பதால் அவன் தனது எல்லாச் செயல்களை தன்னுடைய அறிவால் துறந்து விடுகிறான். எனவே அவன் சர்வகர்ம சன்யாசி (எல்லாச் செயல்களையும் துறந்தவன்) என்றழைக்கப்படுகிறான். ஆனால் அவன் செய்து கொண்டிருக்கும் எந்தச் செயலையும் அவன் செய்யாமல் விட்டு விடுவதில்லை. செயல்களைச் செய்து கொண்டிருக்கும்போதே “தான் எந்தச் செயலையும் செய்யாதவன்” என்ற அறிவுடன் அவன் திகழ்கிறான். எனவே அவன் செயல் செய்யும்போதும் எந்தச் செயலையும் செய்யாதவனாகிறான். ஆதலால் அவனுக்கு “ஞானகர்ம சன்யாசி (அறிவால் செயல்களைத் துறந்தவன்) என்ற பெயர் அளிக்கப்படுகிறது. ஒரு சாதகனுடைய பிரார்த்தனை, யோகம், நற்பண்புகளுக்கான சாதனை, வேதாந்தக் கல்வி, அவனது சன்யாச வாழ்க்கை அனைத்தும் சர்வகர்ம சன்யாசம் அல்லது ஞானகர்ம சன்யாசத்தில் நிறைவடைகிறது. எல்லா வழிபாடுகளும், கர்மயோகம், ஞானயோகம் போன்ற சாதனைகளும் இந்த நிலையை அடைவதற்காகவே. எனவே ஒருவன் தன் வாழ்வில் பிரம்மசாரியாகவோ, கிருஹஸ்தனாகவோ, சன்யாசியாகவோ எந்த நிலையில் இருந்தாலும் ஞானகர்ம சன்யாச நிலையை அடைந்து விட்டால் அதன்பின் அந்த நிலையிலேயே ஒரு ஆத்மஞானியாக தன் வாழ்க்கையைத் தொடர முடியும். தனது பிராரப்தம் நிறைவடையும்வரை தன்னுடைய உடலில் வாழ்ந்து பின்னர் தன் உடலை ஞானி விட்டு விடுகிறான்.
பிராரப்தம் என்ற சொல்லைக் குறித்து சிறிது பார்ப்போம். மூன்று விதமான கர்மங்கள் சாஸ்திரத்தில் பேசப்படுகின்றன. சஞ்சிதம், ஆகாமி, மற்றும் பிராரப்தம். சஞ்சிதம் என்பது ஒரு ஜீவன் இதுவரை எடுத்துள்ள எத்தனையோ பிறப்புகளில் செயல் புரிந்து சேர்த்து வைத்துள்ள கர்மங்களின் பெருந்தொகுப்பு. பிராரப்தம் என்பது அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு சிறுபகுதி வெளிப்பட்டு ஒரு ஜீவனுடைய குறிப்பிட்ட பிறப்புக்குக் காரணமாகும் கர்மமாகும். அந்தப் பிராரப்த கர்மத்தை அனுபவித்துத் தீர்க்கும்வரை ஒரு ஜீவன் இவ்வுலகில் உடல் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பான். பிராரப்த கர்மம் அவனுக்குக் கொண்டு வரும் இன்பங்களையும், துன்பங்களையும் அவன் அனுபவித்தபடியிருப்பான். இந்த நிலை ஞானிக்கும் பொருந்தும். ஆனால் எனக்கு வரும் இன்பங்களும், துன்பங்களும் என் உடலுக்குத்தானே தவிர, எனக்கு அவை நிகழ்வதில்லை என்று ஞானி உணர்ந்திருப்பான். எனவே அவனுக்குப் பிராரப்த கர்மம் என்று எதுவுமில்லை. தனது சென்ற பிறப்பு பற்றியோ, அடுத்த பிறப்பு பற்றியோ ஞானி சிந்திப்பதில்லை. ஏனெனில் அவன் தன்னைப் பிறப்பற்றவன் என்று உணர்ந்திருக்கிறான். எனவே பிறப்புக்களைக் கொடுக்கும் பெருந்தொகுப்பான சஞ்சித கர்மமும் அவனுக்கில்லை. மூன்றாவது கர்மமான ஆகாமி கர்மம் என்பது ஒரு ஜீவன் தான் அப்போது எடுத்துள்ள உடலில் இருந்து கொண்டு புரியும் செயல்களின் தொகுப்பைக் குறிக்கிறது. ஆகாமி கர்மத்தின் தொகுப்பும் ஒரு ஜீவனின் மரணத்துக்குப் பிறகு அவனது சஞ்சித கர்மத்தில் போய்ச்சேரும். ஒரு ஞானி ஞானகர்ம சன்யாசியாக இருப்பதால், தன்னுடைய அறிவால் தன் செயல்கள் அனைத்தையும் துறந்தவனாக இருப்பதால், அவனுக்கு ஆகாமி கர்மமும் இல்லை. இவ்வாறு சஞ்சிதம், ஆகாமி, பிராரப்தம் என்ற மூன்று கர்மங்களையும் ஒருவனுடைய ஆத்மஞானம் எரித்து விடுகின்றது.
எனவே மரணம் என்பது உண்மையில் உடலுக்குத்தான். உடல் என்பது நானல்ல என்பதை உணர்ந்த ஞானிக்கல்ல. “நைந்த துணிகளைக் கழற்றியெறிந்து விட்டு, மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறது” என்பதை உணர்ந்த ஞானி தன் மரணம் குறித்தோ, பிறர் மரணம் குறித்தோ கவலையுறுவதில்லை.
