Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

செல்வசங்கரன் கவிதைகள்

தைரியம்

ஓடுகின்ற தண்ணீர் நினைத்தால்
முகத்தின் பிம்பத்தை கொண்டு போயிருக்க முடியும்
அப்படிச் செய்யவில்லை
தைரியமாக அங்கேயே நிறுத்தியது
வெகு நூற்றாண்டுகள் கழித்தும் மனிதர்கள்
நீரோடையைப் பார்க்க வந்து குனிவர்
இன்னும் வெகு நூற்றாண்டுகளுக்கு
தைரியம் நின்ற இடத்திலேயே நின்று பேசப்படும்


வாழ்வின் சாரம்

வாழ்வின் சாரம் மிகவும் அலுப்பூட்டுகிறது
இதற்குத்தானா என்பதே எதிலும் மிஞ்சுகிறது
ஒரு மலைப் பயணம் மேற்கொள்ளலாம் எனக்
கிளம்பிக் கொண்டிருக்க
மலையே இறங்கி வந்து கைகளில் என்னை
ஏந்திக் கொள்ளுகிற அதிசயம் நிகழ்ந்தால் கூட
எதுவும் மாறாதென்று தோன்றியது
முதலில் அதிசயம் நிகழட்டும்
ஏனெனில் காலைச் சூரியன் எல்லாவற்றின் மீதும்
மஞ்சளைப் பூச தயார் நிலையில் உள்ளது

Exit mobile version