SV 115 பெண்கள் சிறப்பிதழ்
இசை, தி. ஜானகிராமன், க.நா.சுப்ரமண்யம், ஐந்தாம் ஆண்டு நிறைவு, அசோகமித்திரன் சிறப்பிதழ்களைத் தொடர்ந்து 107, 108 வது சொல்வனம் இதழ்கள் ‘சிறுகதைச் சிறப்பிதழ்களாக’ வெளி வந்தன. இப்போது 115 வது இதழ் ‘பெண்கள் சிறப்பிதழாக’ மலர்கின்றது.
சிறப்பிதழ் என்றால் இவையெல்லாம், இவர்களெல்லாம் இருக்க வேண்டும் என்கிற Blue Print பற்றியெல்லாம் எண்ணாமல் பல் கலைகளையும், இலக்கியத்தின் பல்வேறு வகைகளையும், பல வயதுப் பகுப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுத்தாளர்களின் தமிழ் எழுத்துகளையும், மற்றும் உலக, அகில இந்திய எழுத்துகளின் மொழி ஆக்கங்களையும் கொண்டிருக்கும் ‘பெண்கள் சிறப்பிதழை’ மிகுந்த மகிழ்ச்சியோடு வெளிக் கொணர்கிறோம்.
இந்த இதழில் பிரபலமடைந்த எழுத்தாளர்கள் சிலரோடு, அத்தனை பிரபலமாகாத பல எழுத்தாளர்களையும் வாசக கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம். இந்த இதழுக்காகச் சேகரித்த விஷயங்கள் இன்னும் நிறையவே கைவசம் இருக்கின்றன, அவை அடுத்தடுத்த இதழ்களில் பெண்கள் சிறப்பிதழின் நீட்சியாக வெளிவரும். பெண்களே ஒரு தொடர்கதைதானே என்றார் ஒரு பதிப்பாசிரியர். சிறிது யோசித்தால், பெண்களால்தான் மானுடமே தொடர்கதையாக இருக்கிறது என்பது புரியுமில்லையா?
இதற்கு உதவிய அனைத்து எழுத்தாள நண்பர்களுக்கும் எங்கள் நன்றி. இந்த உவகை, கிரியா ஊக்கியாகவும், நலம் விரும்பிகளாகவும், முயற்சிகளிலும், நிறைவிலும் முழுப் பங்கேற்கும் நண்பர்களாகவும் எங்களோடு என்றும் பயணிக்கும் வாசகர்களான உங்களால்தான் சாத்தியமாகியுள்ளது. உங்கள் தொடர்ந்த நல்லாதரவிற்கு மனமார்ந்த நன்றி.
