கிராமப்புற அமெரிக்காவில் விவசாய நிலம் வைத்திருப்பது பெரும் செல்வத்திற்கான அறிகுறியாக இருந்ததொரு காலம் உண்டு. குறைந்து வரும் லாபம், அதிகரித்து வரும் செலவுகள், நிச்சயமற்ற எதிர்காலம் ஆகியவற்றால் பல விவசாயக் குடும்பங்கள் போராடி வரும் நிலையில், நிலங்கள் பெரும்பாலும் நிதி மதிப்பை விட உணர்வுப்பூர்வமான மதிப்பையே கொண்டிருக்கிறது. ஆனால் சமீபத்திய தொழில்நுட்பப் புரட்சி அந்தக் கதையை மாற்றி எழுதப் போகிறது என்பது தான் சுவாரஸ்யமே!
செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பம் , தரவு மையங்களுக்கான தேவையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தூண்டியுள்ளது. இந்த புதிய AI சகாப்தத்தில், அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று இனி பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் எண்ணையோ அல்லது இயற்கை எரிவாயுவோ அல்ல. அது பூமிக்கு மேலே உள்ள நிலம்தான்.
இந்த மாற்றம் தான் முற்றிலும் புதிய கோடீஸ்வரர்கள் வர்க்கத்தை உருவாக்கி வருகிறது.
இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், வடகிழக்கு பென்சில்வேனியாவில் உள்ள சேலம் டவுன்ஷிப்பில் அரங்கேறியுள்ள சம்பவம்தான். அங்கு பல தசாப்தங்களாக டேவிட்டும் மாரிலீ கிலிட்டியும் தங்களின் 89 ஏக்கர் பண்ணையில் கடுமையாக உழைத்து வந்தனர். பன்றிகளை வளர்ப்பது அவர்களுக்கு ஒருபோதும் பெரும் செல்வத்தைக் கொண்டுவரவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் தங்கள் விவசாயத் தொழிலை விரிவுபடுத்த முயன்று கடனில் மூழ்கி, அண்டை வீட்டாரிடமிருந்து கடுமையான எதிர்ப்பையும் எதிர்கொண்டனர். பல ஆண்டுகளாக நிதிப் போராட்டங்கள் அவர்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்தன.
பின்னர் எல்லாம் மாறிவிட்டது. எப்படி?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நில மேம்பாட்டாளர்கள் அந்தத் தம்பதியினரை அணுகி நம்பவே முடியாத ஒரு சலுகையை வழங்கினர். ஒரு சாதாரண விலைக்கு மட்டுமே விற்க முடியும் என்று அவர்கள் நினைத்திருந்த அவர்களின் பண்ணை திடீரென்று 22 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடையதாக மாறியது.
அதற்குக் காரணம் விவசாயம் அல்ல.
அவர்களுடைய சொத்து ஒரு பெரிய செயற்கை நுண்ணறிவு(AI) தரவு மையத்திற்கு மிகச்சரியான இடமாக மாறியிருந்ததே காரணமாகும்.
கிலிட்டி குடும்பத்தினர் மட்டும் இல்லை. சேலம் டவுன்ஷிப்பில் இருக்கும் 96 குடும்பங்களும் கூட்டாகச் சேர்ந்து முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோனுக்குச் சொந்தமான தரவு மைய மேம்பாட்டாளரான QTS-க்கு சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை விற்றுள்ளன. இந்த பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு வியக்கத்தக்க வகையில் 586 மில்லியன் டாலரை எட்டியது. சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் சுமார் 5.5 மில்லியன் டாலர் பெற்றுள்ளது. அதாவது, ஒரு ஏக்கர் நிலம் தோராயமாக 330,000 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனைக்கு முன்பு இந்தக் குடும்பங்களில் பலர் சாதாரண வேலைகளைச் செய்பவர்களாகவும், சிலர் நடமாடும் வீடுகளில் வசிப்பவர்களாகவும், மற்றவர்கள் சிறு வணிகங்களை நடத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். ஒரே இரவில் தங்கள் நிலங்களை விற்று அமெரிக்காவின் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கோடீஸ்வரர்கள் வரிசையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிலம் ஏன் திடீரென்று இவ்வளவு மதிப்புமிக்கதாக மாறியது?
செயற்கை நுண்ணறிவுக்கு மிகப்பெரிய கணினி ஆற்றல் தேவைப்படுகிறது. ஒவ்வொரு செயற்கை நுண்ணறிவு மாதிரியும் பில்லியன்கள் அல்லது டிரில்லியன்கள் அளவிலான தகவல்களைச் செயலாக்குகிறது. இதற்கு 24 மணி நேரமும் இயங்கும் ஆயிரக்கணக்கான சக்திவாய்ந்த கணினி சேவையகங்கள் தேவைப்படுகின்றன. இந்த சேவையகங்களுக்கு மூன்று முக்கிய வளங்களைக் கொண்ட பிரம்மாண்டமான தரவு மையங்கள் தேவை. அவை, தொடர்ச்சியான மின்சாரமும், அதிக திறன் கொண்ட மின் பரிமாற்ற கம்பிகளும், வேகமான இணைய இணைப்பும் ஆகும்.
பென்சில்வேனியாவில் உள்ள அந்த நிலங்கள், இயற்கை எரிவாயு, அணுசக்தி நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பிற்கு அருகில் அமைந்திருந்தன. வேறு இடங்களில் புதிய மின்சார உள்கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் செலவு மிக்கதாக இருந்திருக்கும். இந்தப் பண்ணைகளுக்கு ஏற்கனவே தாராளமான மின்சாரம் கிடைத்ததால் அவற்றின் மதிப்பு வியத்தகு முறையில் அதிகரித்தது.
இன்றைய செயற்கை நுண்ணறிவுப் பொருளாதாரத்தில், ஒரு காலத்தில் எண்ணெய்க்கான அணுகல் எவ்வளவு மதிப்புமிக்கதாக இருந்ததோ அதே அளவிற்கு மின்சாரத்திற்கான அணுகலும் மதிப்புமிக்கதாக இருக்கக்கூடும்.
அதுவே அமெரிக்கக் கனவின் ஒரு புதிய வடிவமாக உருவெடுத்துள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழில்முனைவோர், வால்ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களைப் போலல்லாமல், இந்தப் புதிய கோடீஸ்வரர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் ஒருபோதும் பணியாற்றியதில்லை. அவர்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நிலத்தை வைத்திருந்தார்கள். அவ்வளவுதான். அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்!
எதிர்பாராமல் கிடைத்த பணத்தில் சிலர் கனவு இல்லங்களைக் கட்டுகிறார்கள். சிலர் உள்ளூர் வணிகங்களை வாங்குகிறார்கள். தங்கள் சமூகங்களில் முதலீடு செய்கிறார்கள். மருத்துவ ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்கிறார்கள். எதிர்கால சந்ததியினருக்கு நிதி நிலைத்தன்மையை உறுதி செய்கிறார்கள். கிலிட்டி குடும்பத்தின் மகள்களில் ஒருவர் ஒரு உள்ளூர் மதுபான ஆலையை வாங்கியுள்ளார். மற்றொருவரான மருத்துவர் ஒரு புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவத் திட்டமிட்டுள்ளார். எதிர்பாராத நில விற்பனை, இப்போது புதிய வணிகங்கள், தொண்டுப் பணிகள், குடும்பக் கனவுகளுக்கு நிதியுதவி அளித்துள்ளது.
பென்சில்வேனியாவின் கதை தனித்துவமானது அல்ல.
அமெரிக்கா முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்புக்காக நிலத்தைப் பெறுவதற்கு கட்டுமான நிறுவனங்கள் போட்டிப் போடுகின்றன. வர்ஜீனியா, டெக்சாஸ், அரிசோனா, ஜார்ஜியா, ஓஹையோ, பென்சில்வேனியா போன்ற மாநிலங்கள் தரவு மையக் கட்டுமானத்தில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைச் சந்தித்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாததாகத் தோன்றிய திட்டங்களில் பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்படுகின்றன.
இந்த வளர்ச்சி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அப்பாற்பட்ட பல வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளுக்கு நிலையான வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். மின்சார வல்லுநர்கள், பொறியாளர்கள், HVAC நிபுணர்கள், எஃகு, கான்கிரீட் உற்பத்தியாளர்கள், உபகரணங்களை நிறுவுபவர்கள் என அனைவரும் இந்த விரைவான விரிவாக்கத்தால் பயனடைந்து வருகின்றனர். முக்கிய மின் உள்கட்டமைப்புகளுக்கு அருகிலுள்ள நிலங்களின் மதிப்பும் வியத்தகு முறையில் உயர்ந்து வருகிறது. உள்ளூர் பொருளாதாரங்களும் மாறி வருகின்றன.
சிலருடைய வாழ்க்கையை நல்ல விதமாகப் புரட்டிப்போட்டிருந்தாலும் செயற்கை நுண்ணறிவின் இந்த வளர்ச்சியை அனைவரும் வரவேற்பதில்லை. தரவு மையங்களின் இந்த விரைவான விரிவாக்கம் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், அதிகரித்த மின்சார நுகர்வு, நீர் பயன்பாடு, இரைச்சல், கிராமப்புற சமூகங்களின் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கவலைகளைக் காரணம் காட்டி, குடியிருப்பாளர்கள் பெரிய செயற்கை நுண்ணறிவு மையங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். கணினி சர்வர்கள் நிரம்பிய பிரம்மாண்டமான தொழிற்சாலைக் கட்டிடங்களின் வரிசைகளுக்குக் கீழே, அமைதியான கிராமப்புற நிலப்பரப்புகள் படிப்படியாக மறைந்துவிடும் என்று சிலர் கவலைப்படுவதிலும் நியாயம் இருப்பது போலத்தான் தெரிகிறது. ஒரு துறையின் வளர்ச்சியால் வேறு சில துறைகளில் பாதிப்புகளும் ஏற்படுவதைத் தடுக்க இயலாது தான். ஒரு சில நில உரிமையாளர்கள் செல்வந்தர்களாகும் அதே வேளையில், அருகிலுள்ள சமூகங்கள், சுற்றுச்சூழல், உள்கட்டமைப்புச் செலவுகளைச் சுமக்க நேரிடலாம் என்றும் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
இருப்பினும், புதிய வேலை வாய்ப்புகள், அதிகரித்த வரி வருவாய், பல்லாண்டுகளாகப் பொருளாதார ரீதியாகப் போராடி வரும் பகுதிகளில் பில்லியன் கணக்கான டாலர்கள் வருமானம் வருவதையும் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சேலம் டவுன்ஷிப்பில் மட்டும் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டம் அதன் 12 தரவு மையக் கட்டிடங்களில் 1,500-க்கும் மேற்பட்ட கட்டுமான வேலைகளையும், சுமார் 600 நிரந்தரப் பணியிடங்களையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்றில் ஒவ்வொரு தலைமுறையும் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைத்த ஒரு தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
1848 முதல் 1855 வரை நடந்த தங்க வேட்டையில் ஈர்க்கப்பட்டு உலகெங்கிலும் இருந்து 300,000-க்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்தனர். ஒரே இரவில் நகரங்கள் தோன்றி வங்கிகள் செழித்தன. தொடர்வண்டிப் பாதைகள் விரிவடைந்தன. கலிஃபோர்னியாவின் பொருளாதாரம் நிரந்தரமாக மாற்றப்பட்டது.
1859-ல் ‘எட்வின் டிரேக்’ பென்சில்வேனியாவில் வெற்றிகரமாக எண்ணெய்க்காகத் துளையிட்டபோது, பெட்ரோலியம் என்பது தானியங்கி வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள், நவீன நாகரிகத்திற்கு ஆற்றல் அளிக்கும் எரிபொருளாக மாறும் என்று மிகச் சிலரே கற்பனை செய்திருந்தனர். ஆனால் எண்ணெய் வரலாற்றில் மிகப்பெரிய செல்வங்களில் ஒன்றானது மட்டுமல்ல அமெரிக்காவை ஒரு தொழில்துறை வல்லரசாகவும் அது நிலைநிறுத்தியது.
1990களில் மின்சாரமும் தொழில்மயமாக்கலும் அமெரிக்காவை அடுத்த தளத்திற்குக் கொண்டு சென்றன.
2000 வருடம் நடந்த இணையப் புரட்சி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் மாற்றியது. அமேசான், கூகிள், ஈபே, பின்னர் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தகவல்தொடர்பு, வர்த்தகம், கல்வி, பொழுதுபோக்கை மாற்றியமைத்தன. மென்பொருள், பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்துசக்தியாக உருவெடுத்து, கோடீஸ்வரர்களையும் உலகின் பெரும் செல்வந்தர்களையும் தொழில்முனைவோர்களில் பலரையும் உருவாக்கியது.
2022 முதல் தற்பொழுது வரை ஏற்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவுப் புரட்சியால் ஒரே இரவில் கணினிகளால் மொழியைப் புரிந்துகொள்ளவும், கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், படங்களை உருவாக்கவும், மென்பொருள் எழுதவும், அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவவும் முடியும் என்பதை மில்லியன்கணக்கான மக்கள் உணர்ந்தனர். மின்சாரம், இணையத்தைப் போலவே செயற்கை நுண்ணறிவும் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை அரசாங்கங்களும் வணிக நிறுவனங்களும் உடனடியாக உணர்ந்தன.
போட்டி தொடங்கியது
அமெரிக்கா மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க தங்க வேட்டையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக ஆரம்பித்துள்ளது. ஆனால் இந்தமுறை அந்த மதிப்புமிக்க வளம் பூமிக்கடியில் இருக்கும் புதையல் அல்ல. மாறாக, செயற்கை நுண்ணறிவை இயக்கும் டிஜிட்டல் உள்கட்டமைப்பைத் தாங்கக்கூடிய நிலமாகும்.
அதனால் முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் நாடு முழுவதும் தாராளமான மின்சாரம், வலுவான மின் கட்டமைப்பு, ஃபைபர்-ஆப்டிக் வலையமைப்புகள், சாதகமான ஒழுங்குமுறைகள் உள்ள இடங்களைத் தேடுகின்றனர். இந்த நன்மைகளைக் கொண்ட சமூகங்கள் அடுத்த எதிர்பாராத செல்வ மையங்களாக மாறக்கூடும்.
இனி எதிர்காலம் தரவுகளுக்கே சொந்தம். செயற்கை நுண்ணறிவு, மென்பொருளை விட மிக அதிகமாக மாற்றங்களைக் கொண்டுவருகிறது. அது ரியல் எஸ்டேட் சந்தைகள், எரிசக்தி உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு முறைகள், உள்ளூர் பொருளாதாரங்களை மறுவடிவமைத்து வருகிறது. வெகு சிலரே எதிர்பார்த்த இடங்களில் அது வாய்ப்புகளை உருவாக்கி, தொழில்நுட்பத்தின் மூலம் தாங்கள் செல்வந்தர்களாவோம் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத மக்களுக்கு அவர்களின் நிலங்கள் மூலமாக அந்த வாய்ப்பை அளிக்கிறது. மேலும் அளிக்கப் போகிறது.
ஒவ்வொரு மாபெரும் தொழில்நுட்பப் புரட்சியும் வெற்றியாளர்களையும், சவால்களையும், கடினமான தேர்வுகளையும் உருவாக்குகிறது என்பதை வரலாறு காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவுப் புரட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு விஷயம் மேலும் மேலும் தெளிவாகிறது. செயற்கை நுண்ணறிவு யுகத்தில், “தரவு”, உலகின் புதிய இயற்கை வளமாக மாறியுள்ளது. அதைத் தாங்கும் நிலம் அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க பொக்கிஷங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்குமான புரட்சி.
அடுத்த தொழிற்புரட்சியாக மாறும் என்று பலர் நம்புவதற்கு தற்பொழுது அமெரிக்கா பௌதீக அடித்தளத்தை அமைத்து வருகிறது.
நெடுஞ்சாலைகள் போக்குவரத்தை மாற்றியமைத்தது போலவும், மின்சாரம் உற்பத்தியை மாற்றியமைத்தது போலவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒவ்வொரு தொழில்துறையையும் மாற்றியமைக்கக்கூடும். செயற்கை நுண்ணறிவுப் புரட்சி இன்னும் அதன் ஆரம்ப அத்தியாயங்களில்தான் உள்ளது. அடுத்த கோடீஸ்வரர்கள் மென்பொருள் பொறியாளர்களாகவோ, சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழில்முனைவோராகவோ இல்லாமல் சரியான தருணத்தில், சரியான நிலத்தில் நிற்கும் சாதாரண மனிதர்களாகக் கூட இருக்கலாம்.
செயற்கை நுண்ணறிவுப் போட்டி என்பது இனி வெறும் மேம்பட்ட மென்பொருளை உருவாக்குவது மட்டுமல்ல. அது கணினி ஆற்றலுக்கான ஒரு உலகளாவிய போட்டியாக மாறியுள்ளது. மிக வலிமையான செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்கும் நாடுகள், அடுத்த தலைமுறை அறிவியல் ஆராய்ச்சி, சுகாதாரம், உற்பத்தி, கல்வி, வேளாண்மை, நிதி, உற்பத்தி, போக்குவரத்து, பொழுதுபோக்கு, தேசியப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முன்னணியில் இருக்கலாம்.
தொழிற்புரட்சி பத்தொன்பதாம் நூற்றாண்டை மறுவடிவமைத்தது போலவும், இணையம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியை மாற்றியமைத்தது போலவும், செயற்கை நுண்ணறிவு இருபத்தியோராம் நூற்றாண்டை வரையறுக்கக்கூடும்.
எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவு அடித்தளமாக அமையும் என்று நம்புவதால், அமெரிக்கா நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது.
உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களும் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. சீனா, யுனைடெட் கிங்டம், ஃபிரான்ஸ், இந்தியா, ஜப்பான், தென் கொரியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளும் செயற்கை நுண்ணறிவின் தலைமைத்துவம் பல்லாண்டுகளுக்கு உலகளாவிய போட்டித்தன்மையை வடிவமைக்கக்கூடும் என்பதை உணர்ந்து முதலீடுகளைச் செய்து வருகின்றன.
ஏனெனில் யார் வலிமையான செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்குகிறார்களோ, அவர்கள் அடுத்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய பொருளாதாரத்தையும் தொழில்நுட்ப நன்மைகளையும் பெற்று உலகை ஆளக்கூடும்.
வரலாறு மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது.
அந்த அத்தியாயத்தின் முதல் சில பக்கங்களில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
