எல்லை தரும் இன்றைய பாடம்
மொழி தெரியாது
குரலும் தெரியாது
அவலத்தில் இருந்தோர் பாடல்
எனத் தெரிகிறது
தென்னோலையில் செய்த குறும் படகு
காற்றையும் கடலையும்
எதிர்த்துச் செல்கிறபோது
பிறக்கும் ஒரு பாடல்
ஈரத்தில் நனையாத அலைபேசியும்
அதில் சேமித்து வைத்திருக்கும் படங்களும்
ஊர்க்காற்றும்
நிறைவெய்தாத என் காமமும்
வழி முறிந்த பாலை வனத்தில் எரிந்தாலும்
தளராமல் தொடரும் நடை.
எல்லை கடந்து வருகிறேன்
காற்றாகலாம்
கடவுளாகலாம்
கல்லறையாகலாம்
கதை சொல்லியாகலாம்.
மனிதனாக முடியாது.
கடலில் ஒரு பெட்டி
ஒரேயொரு பெட்டியைத்தான்
நீங்கள் கொண்டு வரலாம்.
படகோ சிறிது.
நெடுந்தூரப் பயணம்.
பெருங்கடல்.
பாரம் கூடினால் கடலே சுடலை.
பெட்டியில் எவற்றை நான் வைத்தேன்?
என் கையெழுத்தில் எஞ்சியிருந்த கவிதைகள்,
முத்தம் பதிந்திருந்த சில நூல்கள்
சில கடிதங்கள்
சில மாவிலைகள்
அம்மாவின் படம்,
எப்போதோ கைக்கெட்டிய ஒரு சயனைட் குப்பி
காய்ந்து போன மூன்று
பூவரசம் பூ
இன்னும் எவையெவை எல்லாவற்றையும்
வைத்திருக்கலாமோ என்ற
அந்தர நினைவு.
உங்கள் பெட்டியில்
எதை வைத்தீர்கள்?
