Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

தாத்தா

கொளுத்தும் வெய்யிலில்
வியர்வை நீரை
வழித்தெடுத்து
பூமியில் சிந்தி
கிளறும் தாத்தாவிற்கு
இந்த பூமிதான்
தாய்

களைப்பைப் போக்க
அதன் மடியிலேயே
படுத்துறங்குவார்

அசந்துறங்கும் தாத்தாவிற்கு
குழந்தைகள் போல்
தென்றலை வீசும்
தென்னங்கீற்றுகள்

தாய்ப்பால் போல
நீரைச் சுரந்து
தாகம் தணித்து
நெஞ்சை நனைக்கும்
கிணற்றில்
சூரியனும் படுத்துக் கிடக்கும்
தாத்தாவைப் போல

தினம் தினம்
வளரும் கன்றுகளை
அண்ணாந்துப் பார்த்து
அக மகிழ்வார்
தாயைப் போல
தாத்தா!

வளர்ந்தாலும்
எப்போதும்
தனது குழந்தையென
தாத்தாவின் காலடிகளை
நெஞ்சில் சுமக்கிறாள்
பூமித்தாய்

திடீரென
மாண்டு போனார்
தாத்தா!

வளர்ந்து
காய்க்கத் தொடங்கிய
மரத்தில்
சில கனிகள்
உதிர்ந்து விழுகின்றன

தாத்தாவிற்கு
கனிகள் தருவதாக
அசைந்து நெகிழ்கிறது
மரம்

Exit mobile version