Site icon சொல்வனம் | இதழ் 369 | 28 ஜூன் 2026

புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 19

This entry is part 19 of 23 in the series புவிச் சூடேற்றம்

சிலர், மரம் வளர்த்தால், எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்கள். இன்னும் சிலர், கார்கள், லாரிகள் குறைந்தால், காற்று மாசும் குறையும், புவி சூடேற்றமும் சரியாகிவிடும் என்கிறார்கள். இன்னும் சிலர், இதோ, காற்றில் உள்ள கரியமில வாயுவை ஒரு எந்திரத்தைக் கொண்டு சரி செய்யலாம் என்கிறார்கள். பில் கேட்ஸ், மரங்களின் ஒளிச்சேர்கையை துரிதப்படுத்தினால், எல்லாம் சரியாகிவிடும் என்கிறார். இன்னும் சில ஆர்வலர்கள், சூரிய பலகம் எல்லாவற்றையும் சரி செய்து விடும். சூரிய ஒளியை மின்சாரமாக்கும் மின்கலன்களின் செயல்திறன் கூடியுள்ளது. அதைப் பயன்படுத்தினாலே இந்தப் பிர்ச்சினையை தீர்க்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.

தலை சுற்றுகிறது அல்லவா?

ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். அடுத்த சில கட்டுரைகளை வாசித்தால், உங்களது இந்தக் குழப்பம் முற்றிலும் குறையும். அதற்கு முன்னர், சில விஷயங்களை இந்த உலகப் பிரச்சினையில் நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

  1. எந்த ஒரு தீர்வும் இந்தப் பிரச்சினையைத் முழுவதும் தீர்க்கப் போவதில்லை. இந்த ராட்சச பிரச்சினையை, பல தீர்வுகள் கொண்டே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்
  2. சில தீர்வுகள், உடனே பயனளிக்கும் (பைக்கைத் துறந்து சைக்கிள்), மற்றவை சில ஆண்டுகளுக்குப் பிறகு பயனளிக்கும் (மரங்கள்).
  3. சில தீர்வுகள், மிகவும் அதிகமாக செலவாகும், மற்ற சில தீர்வுகள் எளிமையாக அனைவருக்கும் பொருந்தும்.
  4. இந்தியா போன்ற நாடுகள், முதலீடுக்கு எங்களிடம் பணமில்லை என்று சொல்லி பல தீர்வுகளை புறக்கணிக்கக் கூடும். இது போன்ற நாடுகளுக்கு எதில் முதலீடு செய்தால், எப்பொழுது என்ன பயன் விளைவிக்கும் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
  5. ஏன் ஒரு பிரச்சினை உருவானது என்பதைப் புரிந்து கொண்டாலே, அதைத் தீர்க்க முடியும்.

ஆக, இந்தப் பகுதியில், மிகச் சுருக்கமாக, எப்படி இந்தப் பிரச்சினையில் மனிதகுலம் மாட்டிக் கொண்டு விட்டது என்பதைப் புள்ளி விவரங்களோடு பார்ப்போம். அதன் பின், எந்தத் தீர்வுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பார்ப்போம். ஒன்று மட்டும் நிச்சயம். இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும், ஏதோ ஒரு விஷயத்தில், உங்களது புரிதல், முற்றிலும் ஒரு புதிய பாதையில் பயணிக்கும். இது என் உத்தரவாதம்.

எப்படி மாட்டிக் கொண்டோம்?

அப்படி என்ன கிழித்தோம்?

கடந்த 50 ஆண்டுகளில், மனித முன்னேற்றம், முன்னம் இருந்த காலங்களை விட பல விதத்திலும் துரிதமானது.

பிரச்சினையின் உயர்நிலைப் புரிதல்

தொல்லெச்ச எரிபொருள், விவசாயம் மற்றும் காடுகள், இந்த மூன்று விஷயத்தில் நாம் கவனம் செலுத்தினால், பிர்ச்சினையின் ஏறக்குறைய 90% தாக்குதலை சமாளிக்க முடியும் என்று சொல்ல நாம் ஒரு விஞ்ஞானியாக இருக்கத் தேவையில்லை. உடனே தொல்லெச்ச எரிபொருள் பக்கம் சாய்வதற்கு முன்னர், ஒன்றைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். எல்லா புவி சூடேற்ற வாயுக்களும் ஒன்றல்ல.

பிர்ச்சினையை முழுவதும் மேல்வாரியாகப் புரிந்து கொள்ள இன்னொரு விஷயம் எஞ்சியுள்ளது. நம்முடைய பூமி, இத்தனை புவி சூடேற்ற வாயுவை எப்படி சமாளிக்கிறது? வெளியேற்றப்படும் புவி சூடேற்ற வாயுவில்:

தீர்வுகளுக்குப் போகு முன், இங்கு இரு பெரிய விஷயங்களைச் சொல்லியுள்ளதை கவனித்திருப்பீர்கள்.

ஒன்று, புவிசூடேற்ற வாயுக்களின் வெளியேற்றல் (இதை மனிதர்கள் தங்களது நடவடிக்கைகளால் ஏராளமாக அதிகரித்து விட்டனர்).

இரண்டாவது, இயற்கை புவிசூடேற்ற வாயுக்களை உள்வாங்கல். அதாவது, உங்களது கட்டிடத்தின் மேலே உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் நீரை மோட்டார் மூலம் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். கட்டிடத்தில் உள்ள வீடுகள் தண்ணீரைப் பயன் படுத்திக் கொண்டே வருகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இந்த இரு நிகழ்வும் சரியாக நடந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், அந்த தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஓடிக் கொண்டே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், வீட்டில் வசிப்பவர்கள், எல்லா குழாயையும் மூடிவிட்டு தூங்கப் போய்விட்டார்களானால், என்ன நடக்கும்?

இதுவே நம்முடைய புவி சூடேற்ற இன்றைய நிலை. இந்த உதாரணத்தில், அதிகபட்ச நீர், மண்ணுடன் கலந்து ஓடிவிடும்; ஆனால், புவி சூடேற்ற வாயுக்கள், இங்கேயே நம் காற்று மடலத்தில் நமக்கு அழிவின் பாதையில் எடுத்துச் செல்லுகின்றன.

இந்த இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டுவிட்ட நாம், என்ன செய்ய வேண்டும்? இரண்டு வழிகள் தான் உள்ளன:

  1. புவி சூடேற்ற காரணிகளில் பெரிய காரணிகளைக் குறைக்க வேண்டும். இது நம் உதாரணத்தில் தண்ணீர் இறைக்கும் மோட்டாரின் வால்வைக் கட்டுப்படுத்தி, குறைந்த அளவு தண்ணீரைத் தொட்டியில் சேர்ப்பதைப் போன்றது
  2. இயற்கையின் சூடேற்ற உள்கொள்ளலை அதிகரிக்க உதவுவது. இது நம் உதாரணத்தில் தண்ணீரைப் பயன்படுத்தும் வீடுகளில், தண்ணீரை அதிகமாகப் பயன்படுத்த முயவதைப் போன்றது. இதிலும் எல்லா பயன்களும் ஒரே அளவில் தண்ணீரைப் பயன்படுத்துவதில்லை. எந்தப் பயனில் அதிக தாக்கம் இருக்கிறதோ, அதையே முதலில் செய்ய வெண்டும்.

முதல், பெரிய காரணியான, தொல்லெச்ச எரிபொருள் என்ற விஷயத்தை மேலும் அலசி, அதில் உள்ள காரணி விதங்களைப் பார்ப்போம்.

அடுத்த பகுதியில், இந்த 62% தொல்லெச்ச எரிபொருள் சார்ந்த கரியமில வாயு வெளியேற்றலை எப்படியெல்லாம் பிரித்து, கரியமில வாயு உமிழைக் குறைக்கலாம் என்று புரிந்து கொள்ள முயற்சிப்போம். சில அரசாங்க முயற்சிகள், புகைக்கும் டீசல் லாரி போல இல்லாவிட்டாலும், புவி சூடேற்றத்தைக் குறைக்க எப்படி வழி செய்கிறது என்பது தெளிவாகும். “அரசாங்க பஸ்கள் டீசல் புகை மண்டலத்தில் இயங்குகையில், நான் மட்டும் ஏன் விலை அதிகமான எல்.ஈ.டி விளக்குகளை வாங்க வேண்டும்?” என்று நீங்கள் கோபப்படுவது நியாயமாக இருந்தாலும், எப்படி இந்தச் சிறுசிறு முயற்சிகள் உதவும் என்பது தெளிவாகும்.

புவிச் சூடேற்றம்

உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன? புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20
Exit mobile version