Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

ரவி அல்லது கவிதைகள்

கள்வனைக் காணாத கண்ணாமூச்சி

சேகரித்தப் பகலை
சேர்த்து வைத்து
இந்த
அந்தியால்தான்
கட்டினேன்
மூட்டையாக.
சூழ்ந்த
இரவிற்குள்
சோர்வாகாமல்
தேடிக்
களைத்தோய்ந்து
கண் விழித்தபோது
அவிழ்த்துக் கிடக்கிறது
பகல்
மீண்டும்
அள்ளச்சொல்லி.


வெளிச்சப்பொழுதின் பேதைமை

தோராயமாக சொல்லிவிடும்
கற்பிதங்கள்
யாவிலும்
உண்மை இருக்க வேண்டிய
அவசியமில்லை.
வசீகரித்துவிட்டாலே போதும்
இந்த
அடிமை மனம்
புரிதலை
மழுங்க வைத்து
தோரணங்களையே
எப்பொழுதும்
தொங்கிக் கிடக்கும்.
மகோன்னத சிலாகிப்பில்
மாசு மறுவற்ற
பிரகாசமென
விடாப்பிடியாக
லயித்து.

Exit mobile version