Site icon சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

வேனில் – கானல்

வேனில்

கோடையின்
இளைத்த மரங்கள்
கைதூக்கி
விரல்கள் பின்னி மறைத்தும்
வழியெங்கும்
வெயிலின் நிழல்
கிழிபட்டு உதிரும்

வசந்தத்தின் நிழல்
இலைத்துக் குலுங்கும் போது
கச்சிதமாய் வெட்டி
சிங்காரித்துக்கொண்ட
இடைவழிகளில்
தொட்டுச் செல்லும் வண்டிகள்
கடக்கையில் மட்டும்
இலைகளால் தழுவிச் சிரிக்கும்

கானல்

முட்புதர் அடைகாத்த
பறவைகளின் சத்தத்தை
நீரூற்றி அணைக்கிறது
சாரல் மழை

புகையென
கசிந்து
வெளியேரும்
பறவைகள் ஒவ்வொன்றின் பின்னும்
கீச்சென அலறி
பின்தொடர்கிறது
புதரின் கனல்

Exit mobile version