காற்றெனும் இசைஞன்
உடைகளைத் தோரணங்களாக்கி
தானொரு சிறுவனாகி
தாவித் தாவிக் கலைத்து விளையாடுகிறது
காற்று
மீட்டப்படும் ஊளை இசையின்
தாளத்திற்குத் தப்பாமல் தவித்தலைகின்ற விரல்கள்
அதனதனை அதனதன் இடத்தில் அமர்த்திட
உறங்கும் இரவு
யாவரும் உறங்குவதைப் பார்த்துப் பார்த்து
சலித்துப் போயிருந்தது அவ்வீட்டின் இரவுக்கு
மழலையின் சிணுங்கலும் அழுகையும்
கேட்கத் துவங்கிய நாள் முதல்
இரவு உறங்கும் அழகை
கொட்டக் கொட்ட கூடிப் பார்த்தபடியிருக்கிறது
மொத்த வீடும்
இரவுதான் எத்தனை அழகாய் துயில்கிறது!
