Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

வருணன் கவிதைகள்

வீடு திரும்பல்

சூன்யத்துள் அலைந்து திரிந்து
அலுத்த சுடர்
விளக்கேற்றும் போதெல்லாம்
திரி நுனியில் இளைப்பாற அமருகிறது
பசலையில் தவிக்கும் சூன்யம்
காற்றைத் தூதனுப்ப
அலைந்து அலைந்து சமரசம்
இவர்களின் ஊடலுக்கிடையில்
அலைவுறுகிறோம்
நானும்
அறையும்
சகலமும்


மேய்ப்பனைத் தேடும் ஆடு

தேடப்படுவது எத்தனை பெரிய பாக்கியம்
தேடப்படுபவர் ஒரு பொருட்டு என்கிறது
தேடல்
காணாமலானதை தேடுகிற கடைக்கண்களும்
யோசிப்புகளும்
கடவுளின் வசிப்பிடங்கள்
இல்லாமற் போனது ஏனென உயராத புருவங்கள்
தம்மையுமறியாமல் ஒரு இறுதிச் சடங்கிற்குச்
சென்று திரும்புகின்றன
தேடுகிற மேய்ப்பனை
கொஞ்சம் எட்ட நின்று கண்கள் பனிக்க
பார்த்தபடி இருக்கிறது தவறிய ஆடு


வன்மம் என்பது

கிடைக்க வேண்டிய தருணத்தைத் தாண்டிடும்படியாக
மிகக் கவனமாய்
தாமதப்படுத்தப்படுகிற அன்பு

மனதின் மதகுகளை துல்லியமாய்
திறக்கத் தகுந்த
தருணங்களில்
அடைத்து விடுகிற செய்நேர்த்தி

பிசகாதிருக்கும் பொருட்டு
வராமைக்கான காரணங்களை
வருவதற்கு முன்னமே
ஒத்திகை பார்க்கிற துல்லியம்.

Exit mobile version