சிதறுண்டவைகளின் தொகுப்பு
’’என் கிராமத்தில் இருந்து வந்திருக்கும் மதிப்பிற்குரியவரே,
உங்களுக்கு கிராமத்தில் நடப்பவை எல்லாம் தெரிந்திருக்கும் தானே?
சொல்லுங்கள், நீங்கள் அங்கிருந்து புறப்பட்ட நாளில்
என் வீட்டின் பனி படர்ந்த ஜன்னலின் எதிரே இருக்கும்
அந்த ப்ளம் மரம் மலர்ந்திருந்ததா?’’
இந்த புகழ்பெற்ற கவிதை சீன ஓவியரும் கவிஞருமாகிய வாங் வெய் எழுதியது.
சீன அரசவையின் உயர் பொறுப்பில் இருந்த வாங் வெய் போர்க்கைதியாக கொண்டு செல்லப்பட்டு சிறைவைக்கப்பட்டு இருக்கையில் எழுதிய கவிதைகளும் கடிதங்களும் உலக பிரசித்தி பெற்றவை. அவற்றிலொன்றுதான் ப்ளம் மரங்கள் மலர்ந்திருந்ததா? என்று கேட்கும் இந்த கவிதை.
வாங் வெய் தன்னிடமிருந்த அரசியல் ரகசியங்கள் எதுவும் போராளிகளுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக செவிடர் போல நடித்துக் கொண்டிருந்தார். வதைக்கு ஆளாகி எதையும் சொல்லாமலிருக்கும் பொருட்டு மருந்துகளை விழுங்கி தன் குரலை சேதப்படுத்திக் கொண்டார்.
பல்வேறு சித்ரவதைகளுக்கிடையிலும் தன்வீட்டின் எதிரே இருந்த ப்ளம் மரம் பூத்ததா என்று கேட்கும் இக்கவிதை சொந்த நிலத்தை பிரிந்து புதியதோர் இடத்தில் வாழும் பழைய நினவுகளின் இனிமையிலும் புதிய இடத்தில் தன்னை பொருந்திக் கொள்ள முடியாத துயருக்கும் இடையே அலைவுறும் ஆன்மாவின் விசும்பல்தான்.
இதைப்போலவே தன் ஈழத்து வீட்டின் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் நமக்கு இனி இல்லை கண்ணே’’ என்று துயர் கொள்ளும் புலம்பெயர் கவிதை ஒன்றுண்டு. போதமும் காணாத போதத்தில் இயக்கத்துக்கு சேரப் போகையிலும் தேமா மரத்தை பார்த்துக்கொள்ள சொல்லி கடிதம் எழுதும் தாயமும் வாங்வெய்யின் மற்றுமோர் வடிவம்தான்
புலம்பெயர் இலக்கியங்கள் அனைத்தும் ‘diasporic war literature’ எனப்படுகின்றன. பண்டைய கிரேக்க மொழியில் Diaspora என்பதற்கு ‘சிதறுண்ட’ என்று பொருள். சொந்த நிலத்தை விட்டு பல்வேறு காரணங்களால் வேறு புதிய பகுதிகளில் தனித்தனியே சிதறுண்டவர்களின் படைப்புக்களுக்கு இதைக்காட்டிலும் பொருத்தமான பெயர் வேறென்ன இருக்க முடியும்? புலம்பெயர் இலக்கியங்கள் உலகெங்குமே இருக்கின்றன என்றாலும் பெரிதும் அவை ஈழத்து புலம்பெயர் படைப்புக்களை குறிப்பதாகவே இருக்கின்றன.
அகரமுதல்வனின் போதமும் காணாத போதமும் போர்ச்சூழலில் சிதறுண்ட நினைவுகளின், உறவுகளின், நம்பிக்கைகளின் தொகுப்புத்தான்.
அகரமுதல்வனின் கடவுள் பிசாசு நிலத்தை ஒரு மலைத் தங்குமிடத்தில் ஒரே நாளில் கண்ணீருடன் வாசித்து முடித்தேன். கடவுள் பிசாசு நிலத்திலிருந்து முளைத்த விதைதான் போதமும் காணாத போதம்
இரண்டிலுமே அகரமுதல்வனின் மொழிவன்மை திகைப்பூட்டுவது. இரண்டிலுமே வாழ்வும் தாழ்வும் சரிக்கு சரியான கலவையில் இருக்கும். துயரைச் சொல்லும் அதே மொழியின் வீச்சில் காதலும் சொல்லபட்டிருக்கும் படைப்புக்கள் இரண்டுமே
போரை செய்தித்தாள்களிலும் பிற ஊடகங்களிலும் மட்டுமே அறிந்திருக்கும் என் போன்றோருக்கு போதமும் காணாத போதும் காட்டும் அசல் போர்ச்சூழலும் கொடுமையும், துயரமும், வதையும், உயிரிழப்பும் அதிர்ச்சியையும் குற்றவுணர்வையும் ஊட்டுபவை.
போர்ச்சூழல் படைப்புக்கள நாவல், கதை, கட்டுரை, கவிதை, திரைப்படம் என பல வகைகளில் இருக்கின்றன. அனைத்துமே போரின் அழிவை, போரினால் உண்டான இழப்புக்களை, வலியை, புலம்பெயர்தலின் அவலத்தை வலுவாக உணர்வுபூர்வமாக சொல்லி இருப்பவைதான் எனினும் போதமும் காணாத போதத்தில் அகரமுதல்வன் மற்றுமொன்றையும் சொல்லுகிறார்
சமீபத்தில் உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டிலிருக்கையில் இறந்தவரின் மனைவி அவர்களின் மகளின் பெயரைச்சொல்லி ‘எங்க சித்ரா பெரியவளான பின்னாடி என் விரலைக்கூட தொட்டதில்லியே எஞ்சாமீ’ என்று பெருங்குரலெடுத்து கதறினார். துக்க வீட்டின் பெண்கள் அனைவரும் ஒரு கணம் திடுக்கிட்டனர்.அதை அவர் ஒரு புகாராகத்தான் சொன்னதாக எனக்குப் பட்டது.
கணவனை போரில் இழந்த பெண்களின் உடலின் சமரையும் போதமும் காணாத போதம் சொல்லுகிறது. உடலின் போரில் அமானுஷ்யமாக வெல்லுகிறார்கள் இதில் வரும் யசோவின் அம்மாவைபோன்ற பெண்கள்
ஒவ்வொரு ஞாயிறன்றும் போதமும் காணாத போதம் நள்ளிரவில் வலையேற்றப்படும். அதன் இணைப்பு வரும் வரை உறக்கமின்றி காத்திருந்து வாசித்திருக்கிறேன்.வெண்முரசு வாசித்த நாட்களுக்கு பிறகு போதமும் காணாத போதம் வாசிக்கத்தான் இரவுகளில் உறங்காமல் காத்திருந்தேன்.
வாசித்தபின் உறக்கம் முற்றிலும் நீங்கி பல இரவுகளை கண்ணீரில் கரைத்திருக்கிறேன். பல பத்திகளை தொடர்ந்து வாசிக்க முடியமால் நிறுத்தி நிறுத்தி உணர்வெழுச்சிகளை மட்டுப்படுத்தி பின்னர் வாசித்திருக்கிறேன்.
25 வாரங்கள் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் இது. நூல்வனம் வெளியீடு. ஒவ்வொரு வாரமும் காத்திருந்து ஏராளமானோர் வாசித்தோம் என்பதை விடவும் போதமும் காணாத போதம் காட்டிய துயரில் பங்கு கொண்டோம் என்றுதான் சொல்லவேண்டும். கண்கள் ஈரமாகாமல் இதை ஒருவரும் வாசிக்கவேயில்லை.
20 வருடங்களுக்கு முன்னர் கணவனை ஆர்மிக்காரர்களிடம் பறிகொடுத்து, பலநூறு இரவுகளை தனிமையில் கழித்த ஒருத்தி சாவிற்கு பின்னர் மகளாய் கலவியின் சுகம் காணும் அந்த உக்கிர இரவை சொல்லும் அத்தியாயம் பல இரவுகளின் உறக்கத்தை தின்றது.
காதலி நறுமுகையுடன் ஊரைவிட்டுசெல்லும் அப்பனிடம் கேட்கப்படும் ‘’சின்னஞ்சிறுசுகளாக இருக்கிறீர்களே’’ என்னும் கேள்விக்கு ’’எங்கள் நாட்டில் எல்லோரும் சீக்கிரம் வளர்ந்து விடுவோம் துவக்கேந்த வேண்டுமே” என்னும் அவன் பதிலில் முடியும் ஒரு அத்தியாயம் தொடர்ந்த பல இரவுகளையும் பல பகல்களையும் தின்று தீர்த்தது
’’தேவனே ஏன் என்னை கைவிட்டீர்’’ என்னும் விவிலிய வரிகளுடன் ஈரோடு கிருஷ்ணன் அவர்களின் மிகபொருத்தமான அணிந்துரை அமைந்து விட்டிருக்கிறது. //போதமும் காணாத போதம் ஈழத்தின் ஆழத்துக்குள் சென்று துழாவும் பலமுள் தரித்த பாதாளக்கரண்டி// என்னும் கிருஷ்ணனின் வரிகளுக்கு மேலாக இந்நூலை குறித்து மேலதிகம் யாரும் சொல்லமுடியாது.
ஈரோடு கிருஷ்ணனின் அணிந்துரையை வாசிக்கையில் யூத வதை முகாமின் சுவற்றில் யாராலோ எழுதப்பட்டிருந்த ‘’ கடவுள் என ஒருவர் இருப்பாராயேனால் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு இறைஞ்ச வேண்டும்’’ என்னும் வாசகம் நினைவுக்கு வந்தது.
//தக்கன்ர சிரச கைவாளினால் அறுத்த வீரபத்திரர் எங்களை காப்பாற்றாமல் நிக்கேக்கயே அவர் வீரச்சாவு அடைஞ்சுட்டாரென்று உங்களுக்கு விளங்கேல்லையோ?//
என்ற ஆரூரனின் கேள்வியை இந்த வாசகத்துடன் இணை வைக்கலாம்.
’’உலகம் போற்றும் மனுஷத்துவம் முகம் குப்புற நந்திக்கடலில் வீழ்ந்துகிடந்தது’’ என்னும் அகரமுதல்வனின் ஒருவரியின் நீட்சிதான் மொத்த நூலும்.
போதமும் காணாத போதம் காட்டும் மனிதர்கள் ஒவ்வொருவரும் மிக தனித்துவமானவர்கள். போரென்பதை ஊடகங்களில் மட்டும் அறிந்திருக்கும் நமக்கெல்லாம் அவர்களில் ஒருவரைக்கூட சந்திக்க சாத்தியமில்லை.
அஞ்சு இன்ச் ஷெல் விழுந்ததில் தலையில் பள்ளமுண்டான ஒருவரை நாம் ஒருபோதும் பேருந்துப் பயணமொன்றில் சந்தித்திருக்க மாட்டோம்தானே? துயிலில்லத்தின் விதைகுழிகளை தயார் செய்ய ஊதியம் வேண்டாமென மறுக்குமொருவரை கற்பனையிலும் கண்டதில்லை நாம்
அது போலத்தான் நாலே நாளில் பங்கரை உருவாக்கியது சாதரணமாக உரையாடலில் பேசப்படுமொன்று என்பதயும் நாமறிந்திருக்கமாட்டோம். ஏனெனில் பங்கர்கள் அவர்களின் அன்றாட வாழ்வில் இணைந்திருந்தவை.
வியட்நாம் பெரியப்பா, வீரன், செவிடன் ரத்தினம், கிபிர் அடிச்சு வீரச்சாவடையும் மேஜர் பகீரதன் , புன்னகையுடன் வன்கவர் படையினரிடம் ’’அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதை கடவுளுக்கும் கொடுக்கும் நீங்கள் எங்களுடையதை எங்களுக்குத்தான் அளிக்க வேண்டும்’’ என்னும் புண்ணியன்,
இயக்கத்துக்கு தான் போகாமல் அக்காவை அனுப்பிவிட்டு குற்றவுணர்வில் கதறும் அமலன், சாக்குப்பையில் சடலமாக மூட்டை கட்டப்படும் செட்டித்தாத்தா, ஊத்தைமாமா, ‘’நான் பயப்படலே, அதிகபட்சம் சுடுவாங்கள் அதானே நடக்கும்’’ என்கிற சங்கிலி பெரியப்பா
கழுத்திலும் உள்ளிலும் நஞ்சு கொண்டிருக்கும் சந்தனன், சந்தனனின் தந்தையை சுட்ட சரித்திரன், கொக்குவில் மாமா, அம்மாவை வேசி என்று வைய்யும் தகப்பனை கன்னத்தில் அறையும் அப்பன் என்னும் பெயர்கொண்ட மகனொருவன்
கோவிலில் திருடிவிட்டு முருகனிடமே ’இத்தனை துன்பத்தை தந்த அரசாங்கத்தை தண்டிக்காத நீ என்னையும் தண்டிக்க மாட்டாய்’ என உரையாடும் சங்கன்
தீக்காயம் பட்ட கரியன், பச்சை தூஷணத்தில் மருத்துவனைக்காரர்களை வசைபாடும் கால்கள் நீக்கப்பட்ட ஒருவர், அடுத்த படுக்கையிலிருந்தபடி ’’மரணத்தினாலும் நான் மீதம் வைக்கப்படுவேன் நன்றி வணக்கம்’’ என்று பேருரையாற்றும் போராளி ஒருவர், என அகரமுதல்வன் காட்டும் மனிதர்கள் நமக்கும் உறவாகி விடுகிறார்கள். காந்தி மாமாவை கண்டதும் ’’அட, இவர் கடவுள் பிசாசு நிலத்தின் மாமா’’ என்று மனம் கூவியது
ஷெல்லடியும், கிபிர் தாக்குதலும் தோக்கு சத்தங்களும் நிறைந்து தாய்மண்ணும் முழங்காலிடும் போதும் ஒன்றும் செய்ய முடியாத கடவுள்களும் இருக்கின்றனர் இதில்
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர், காந்தள் மலர் சூடிய கொட்டடிக்காளி, தேக்கங்காட்டு வீரபத்திரர், வறாப்பளி அம்மன்,முல்லைதீவு தேவாலயத்தின் இறைவன், கருங்காலி முனி, பொக்கணை நாக தம்பிரான் சண்டைக்கு செய்தியேதும் அனுப்பாத ஆதிசேஷன், களவவோடை அம்மன், தெல்லிப்பழை துர்க்கை என இடையிடையே அத்தனை துயரிலும் ஒன்றும் செய்ய முடியாத கடவுள்களும் வருகின்றனர்.காளியின் தலையிலும் ஷெல்லடிக் காயமிருக்கிறது.
’’கர்த்தாவே எதுவரைக்கும் நீங்கள் எங்களை உதாசீனபப்டுத்துவீர்? எனும் கேள்வியை புண்ணியனுடன் சேர்ந்து நாமும் ஒருகட்டத்தில் கேட்டுவிடுகிறோம்
இறந்த கணவனின் மூக்கிலும் வாயிலும் பெருகும் குருதியை தன் கர்ப்ப வயிற்றில் எடுத்தெடுத்து பூசிக்கொள்ளும் சுமதியக்கா, கொற்றவை என்னும் பெயர்கொண்ட அவளுக்கு பிறக்கும் பெண்குழந்தை
போர் வெளியேற்றிய பாஸ்பரஸினால் புற்றுநோய் உண்டாகியிருந்த, பங்கருக்குள் மயங்கிக்கிடந்தவனை எந்த பதற்றமும் இல்லாமல் காணும் திலகா
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்ய்பட்டவர்களின் பத்துநாள் குழந்தை புலித்தேவனின் பசியழுகைக்கு வற்றிய முலைகளை அளித்து போக்கு காட்டுகிறாள் பேரன்னை ஒருத்தி
மீள் குடியமர்த்தப்பட்ட நிலத்தின் மண்ணை அள்ளி உடலெங்கும் பூசிக்கொண்டு, ‘’இந்த இடம் ராணுவத்துக்கு சொந்தமானது’’ என்னும் அறிவிப்பு பலகையை மிதித்தேறுகையில் கண்ணிவெடியில் உடல்சிதறி சாகும் சின்னாசி
சின்னாசியின் உடலைதிரட்டி எரிக்கையில் ’தீமூளும் தீமூளுமென’ பாடியபடி முலைதிருகி வான் பார்த்து எறிவதைபோல பாவிக்கும் பெண்கள்
கொல்லப்பட்ட அப்பாவுக்கு கொள்ளி வைத்துவிட்டு ’’துரோகமென்றால் என்னம்மா? என்று கேட்கும் மகனை அணைத்துக்கொண்டு ‘’மனுஷராய் பிறந்தது அதுவும் இந்த மண்ணில் பிறந்ததுதான் துரோகம்’’ என்று கதறுகிறாள் ஒர் அன்னை
தாய்மண்ணுக்காக போராடிய இருவருக்கு பிறந்து முற்றத்து மண்ணை அள்ளி அள்ளித் தின்கிறாள் நந்திக்கடலென்னும் பெயர்கொண்ட மகளொருத்தி, உயிரற்ற சடலமாய் காலில் தட்டுபடுகிறாள் அறம்பாவை அத்தை.
வீரச்சாவடைந்து சகிக்கமுடியாத கெடுநாற்றத்துடன் பேழையில் கிடக்கிறாள் போராளி அனலி, கூந்தலை அவிழ்த்து விட்டு ஒற்றைக்காலில் நின்றபடிக்கு உணவுண்னும் மனம் பிறழ்ந்த அக்கா, ‘’இஞ்ச எல்லா பிள்ளயளும் பாரம்தான் சுமக்கினம் அது சிலுவையோ துவக்கோ கவலைப்பட ஏதுமில்லை’’ என்று சொல்லும் அம்மா,சமர்க்களத்தில் கருப்பை சிதைந்த ஈகை இவர்களுடன்’’அதியமான் உனக்கு துரோகியோ தியாகியோ அல்ல உன் தந்தை’’ என்று மகனிடம் சொல்லும் ஒரு அன்னையும் இருக்கிறாள்
’’இவ்வளவு யுத்தத்துக்கு மத்தியிலும் எங்கட ஆஸ்பத்திரியில் குழந்தைகள் பிறக்கிறார்கள்’’ என்று சொல்லும், கூந்தலில் காட்டுப்பூச்சூடி காமக்களிறை உருவேற்றும் ’’ யுத்தம் ஒழிக ஒழிக ‘’ என்றபடி முயங்கும் யசோ என்று அகரமுதல்வன் இதில் காட்டும் பெண்கள் பிரத்யேகமும் விசேஷமுமானவர்கள்.
பங்கருக்குள் நேசத்துக்குரியவரின் ஆன்மாவை கண்டுகொள்ளும் மூன்று கால் வீமனும் ஒரு பாத்திரம்தான் இதில். இத்தனை துயரிலும் மாமரங்கள் பூக்கின்றன, குளத்து மீன் ருசிக்கின்றது .
தெய்வங்கள் உறைந்த வெளியில் பிள்ளைகள் பலிகொடுக்கப்பட்ட கொடுங்காலங்கள் நாம் ஒருபோதும் அறிந்திடாதவை.
அகரமுதல்வனின் மொழியில் காடுறை தெய்வங்கள் கண் மலர்த்தி கசிந்த கண்ணீர் எரியூட்டும் இரவுகளை, உக்கிரமான தாக்குதல்களின் போது காலடியில் இறைஞ்கும் சொற்களை மிதித்து நசுக்கிவிட்டு முன்னேறி ஓடுகின்ற சனங்களை, போர்க்களத்தில் பூ மாதிரி கிடக்கும் போராளி ஒருவனின் மூளையை, காற்றில் அசையும் கருங்காலி மரத்திலிருந்து உதிரும் ரத்தம் கண்டிய பெருவிரலொன்றை, ஆலமரத்தின் வேர் இடுக்கில் கிடக்கும் கால்துண்டொன்றை காணும் நெஞ்சுரமும் நமக்குண்டாகி விடுகின்றது
பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனவைகளை சொல்லிச்செல்லும் கதையோட்டத்தில் காதல் முகிழ்க்கிறது காமம் தகிக்கிறது. காதலின் வெம்மை பொங்கும் ஐந்து அத்தியாயங்களும் இருக்கின்றன இதில்.
ஃப்ளாண்டர்ஸ் பெருவெளியில் நடந்த போரில் பீரங்கி தாக்குதலில் உடல்சிதறி இறந்த உற்ற நண்பனின் உடலை திரட்டி இறப்புச் சடங்குகள் செய்த பின்னர் அங்கேயே ஒரு மருத்துவ ஊர்தியின் அருகில் அமர்ந்து லெஃப்டினெண்ட் ஜான் மெக்ரே எழுதிய
“ஃபிளாண்டர்ஸ் கல்லறைச்
சிலுவைகளுக்கிடையில்
காற்றில் ஆடுகின்றன பாப்பிச்செடிகள்,
என்று தொடங்கும் கவிதை மிகப்புகழ் பெற்றது, அக் கவிதைக்கு பின்னரே மாவீரர் நினைவு நாளில் செம்பட்டு பாப்பி மலர்களை அணிந்துகொள்ளும் வழக்கம் வந்தது. மரணத்துக்கிடையில் மலர்ந்திருந்த பாப்பிச்செடிகள் இந்த கவிதையை மிகச்சிறப்பாக்கி விட்டிருக்கி்னறன.
அக்கவிதையில் இழப்பின் துயர்களுக்கிணையாகவே அங்கு மலர்ந்திருக்கும் ரத்தச்சிவப்பு பாப்பிமலர்கள் சொல்லப்பட்டிருக்கும். அப்படித்தான் போதமும் காணாத போதம் காட்டும் அத்தனை துயரங்கள் துரோகங்கள் இழப்புக்கள் இறப்புக்களுக்கிடையிலும் குருதிச்சிவப்பில் மலர்ந்திருக்கிறது காதல்.
அவளருளாலே அவள் தாள் வணங்கி, மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகளின் தாலாட்டில் மலர்ந்திருக்கும் பிரதீபாவை புதைத்த மேட்டில் படுத்துக்கொள்ளும் காதலனை, காயங்களின் தழும்பில் முத்தம் ஈன்று மூர்ச்சையாகி போகும் வரை முயங்கும் ஆதாவை, அங்கவீனமாய் போனபின்னும் புல்லாங்குழலின் கீதம் கேட்கும் நறுமுகையின் உடலை தகிக்கும் தீவெளியில் அணைத்துகொண்டு முத்தமிடும் காதலனை , உதிரும் மலரை மீண்டும் ஏந்தும் மலரினும் மெல்லிய காமத்தை, மஞ்ஞையின், யசோவின் காதலை சொல்லும் மொழியும் துயரை சொல்லிய அதே அகரமுதல்வனுடையதுதான் என்பதை வாசித்தாலே நம்ப முடியும்.
நெஞ்சுரத்தில் நிலம் விளைவிக்கும் அதிபத்தன் எனும் நண்பனுக்காக அணையாவிளக்கொன்றை ஏந்தும் அம்மாவை சொல்கிறான் ஒரு மகன். அச்சுடரை அணையாமல் பாதுகாக்கும் அவளின் உயிருருகிய வெளிச்சத்தில் வன்னியெங்கும் ஒளிபெருகுகிகிறது.
வித்துடல்கள் பொலிகின்றன என்பதை போர்ச்சூழலில் பிறந்த அகரமுதல்வன் சொல்லுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது
ஈழத்தமிழின் இனிமையையும் தாண்டி தெரியும் துயரம், துயரின் மத்தியிலும் பெருகித் தகிக்கும் காமம், இறப்பினாலும் பிரிக்க முடியாத காதல், சொந்த நிலத்தின் பேரில் போராளிகளுக்கிருக்கும் பிணைப்பு என இந்த படைப்பின் கலவை வேறெதிலும் கண்டதில்லை, அகரமுதல்வனுக்கு அன்பும் வாழ்த்துக்களும்!
துயரின் இருளிலும் போதமும் காணாத போதம் காட்டும் போர் முற்றும், தாய்நிலமும், வாழ்வும் மீளும் என்னும் நம்பிக்கையையும், ஆயுதங்களுக்கு மத்தியில் இரண்டு தோமா மலர்களையும் வைத்துக் கொண்டிருக்கிற ஒருவனையும் வாசிக்கையில்
தெற்குப்புறத்தில் கிளைகளெங்கும்
அடர்ந்து பழுத்திருக்கும் செங்கனிகளை
நம் காதலின் குறியீடாக
கை நிறைய அள்ளிக்கொண்டு
என் பொருட்டு வீட்டுக்கு போகிறாயா?
என்னும் வாங் வெய்யின் ஒற்றை இதயம் என்னும் தலைப்பிடப்பட்ட மற்றுமொரு கவிதை நினைவுக்கு வருகிறது.
இரண்டு வெவ்வேறு வகையான தாவரங்கள் இணைத்து உருவாக்கப்படும் கலப்புயிரி தாவரங்களுக்கான் வலிமை மிகுதியாகவே இருக்கும். அப்படித்தான் சொந்த நிலத்தின் நினைவுகளுடன் புதிய நிலத்தில் வாழும் அகரமுதல்வனின் வலிமையும், .
குமர குருபர சுவாமிகள் அருளிய திருச்செந்தூர் கந்தர் கலி வெண்பாவின் போதமும் காணாத போதம் எனும் வரி இப்படைப்பிற்கு வெகு பொருத்தமான தலைப்பாக அமைந்திருக்கிறது.
சொந்த நிலம் பாவித்த சுகப்பொழுதுகளை மீளத் தீண்டுகிறேன் என் அகமெரியும் சந்தம் இசைக்கிறேன் செவியுள்ளோர் கேட்கட்டும் என்று சொல்லும் அகரமுதல்வன் ’’ஈழமண்ணில் தீ என உறையும் திசைகளின் ஒளிக்கதிர்களை தான் இப்படைப்பில் படர விட்டிருக்கிறேன், சனங்களின் சீவிதத்தில் ஒளி பெருகுக’’ என்கிறார்இறுதியில்.
ஆம் அவ்வாறே ஆகுக!
