Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

சக்தியின் கவிதைகள்

ஏய்
அப்படி யெல்லாம்
பார்க்காதே
நான் இப்பொழுது மழையை
வரைந்து கொண்டிருக்கிறேன்
நீயும் என்னோடு சேர்ந்து
நனைய ஆரம்பித்துவிடுவாய்


அதிகாலையில் ஒரு கனவு
அக்கனவில் பறந்து வந்து
என் இமைகளின் மேல் அமருகிறது
ஒரு சிட்டுக்குருவி
கனவுகளை விளித்து
உனக்கு என்ன
வேண்டுமென்று விவரிக்க
மரம் வேண்டுமென்று கூற
மரம் ஒன்றை வரைந்து நீட்டிருகிறேன்
மரத்தின் கிளைகளில்
அமர முற்படுகிறது சிட்டுக்குருவி
நான் கனவுகளுகளிலிருந்து
வெளியேறுகிறேன்
மரம் இல்லையே யென்று
எண்ணியே மீண்டுமொரு
கனவுகளை தேடியே அலைகிறது
அந்த சிட்டுக்குருவி,


பெரும் கல்லை உருட்டி
அதட்டி மடக்கி
மணலாக பூக்க வைத்து
விளையாடி மகிழ்கிறது ஆறு
கோடை வெயிலின் தாக்கத்தால்
தன்னுள் பொதிந்து
பாதுகாத்து அடைகாக்கிறது
மழை நீரால் உயிர்பெற்ற
ஆற்று மணல்

Exit mobile version