Site icon சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

மறுசுழற்சி விவசாயம்

This entry is part 11 of 23 in the series புவிச் சூடேற்றம்

இந்தப் பகுதியில், இந்தப் பிரச்சனைக்கு விஞ்ஞானிகள் மேலும் என்ன பரிந்துரைகளை முன் வைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

விவசாயப் பரிந்துரைகள்

கரியமில வாயுவின் ஒரு பகுதி, விவசாயத்திலிருந்து காற்றுமண்டலத்தில் கலக்கிறது. பயிர் மற்றும் கால்நடை யாவும் புவி சூடேற்ற வாயுக்களை காற்றுமண்டலத்தில் கலக்கின்றனச். உடனே, உணர்ச்சிவசப்பட்டு, ’சேற்றில் கால் வைக்காவிட்டால், மக்கள் சோற்றில் கை வைக்க முடியாது’, என்று டயலாக் எல்லாம் தேவையில்லை. விவசாயத்திலும், புவி சூடேற்ற வாயுக்களை குறைக்கும் முறைகள் உள்ளன. இது கரிக்குறைப்பு விவசாயம் (carbon farming) என்று அழைக்கப்படுகிறது.

இங்கு சொல்லியுள்ள முறைகள் அனைத்தும் எல்லா நாடுகளிலும் சாத்தியம் இல்லை. ஆனாலும், விவசாயிகளுக்கும் இதில் பங்குண்டு. அந்தந்த ஊருக்கு தகுந்த முறைகளில் கரியமில வாயுவைக் குறைக்கும் முறைகளை விவசாயத் துறை உருவாக்க வேண்டும்.

இந்திய விவசாயிகளுக்கு சில நல்ல மற்றும் கெட்ட செய்திகள் இதில் அடங்கியுள்ளது. பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்த குழந்தைக்கு, ‘ஏ’ என்ற எழுத்திற்கு நாம் சொல்லிக் கொடுக்கும் சொல், ‘ஏர்’ அல்லது ‘ஏர் உழவன்’. தமிழ் படித்த அனைவர் மனதிலும் பதிந்த ஒரு சொல் ஏர். நல்ல வேளையாக ‘உ’ என்பதற்கு ‘உரம்’ என்ற சொல் ஆரம்பத்தில் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. எப்படி ஏர் கொண்டு, உழவர்கள் நிலத்தை உழுதார்கள்? இன்று எப்படி உழுகிறார்கள்? சற்று விரிவாகப் பார்ப்போம். ஏரை உழும் காலத்தில், அந்த மண்ணில் எதுவுமே இருப்பதில்லை. நீரைக் கொண்டு, நிலத்தைச் சுரண்டி, பிறகு விதை விதைக்கிறார்கள். உடனே 3 மாதத்தில் விளைச்சல் வேண்டும் என்று ரசாயன உரத்தையும் கொட்டுகிறார்கள். இதெல்லாம் நமக்கு பழக்கப்பட்டுவிட்டது. மேலும், பாரதிராஜா படத்தில் வரும் காட்சி போல, புழுதி பறக்க, பேருந்துகளும், கிராமங்களுக்கு வந்து போகின்றன.

இந்தக் காட்சியில் என்ன குறை? பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்தும், ஒன்றை நாம் உணரவில்லை. விதை விதைக்க, நிலப்பரப்பு முழுவதையும் உழத் தேவையில்லை. சிறிய அளவு இடைவெளி போதும் விதைக்கு. இதை regenerative farming என்று அழைக்கிறார்கள். உலகம் முழுவதும் நாம் செய்து வருவது destructive farming. இதில் மண் வளம் முழுவதும் பாதிக்கப்படுகிறது. உலகெங்கும் மண்ணரிப்பிற்குக் காரணம், நம்முடைய பழைய விவசாய முறைகள். இது அமெரிக்காவிற்கு அதிகமாகவே பொருந்தும். மிகவும் எந்திர மயமாக்கப்பட்ட அமெரிக்கா மற்றும் கனேடிய விவசாயம், பல்லாயிரம் ஹெக்டேர் நிலத்தை, இப்படி எந்திரம் மூலம் உழுது, மண்ணின் வளத்தை பாழடிப்பதோடு, உரத்தையும் கொட்டி, அந்த நிலத்தின் உயிர் சங்கிலியைக் கொன்று, பல இடங்களை பாலைவனமாக்கியுள்ளது. இதுவே தென்மேற்கு அமெரிக்கப் பகுதியின் மிகப் பெரிய பொருளாதாரப் பிரச்சனை.

மறுபயன்பாட்டு விவசாயத்தில், சில நல்ல இந்திய முறைகள், மற்றும் புதிய அணுகுமுறைகள் அடங்கும்.

உற்பத்தித்துறை பரிந்துரைகள்

அனல்மின் நிலையங்கள், கார், இரும்பு மற்றும் எஃகு, உலோகம், ராட்சச எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள், சிமெண்ட் மற்றும் ப்ளாஸ்டிக் உற்பத்தியாளார்கள், உலகின் மிகப் பெரிய தொல்லெச்சப் பயனாளர்கள் மற்றும் உமிழ்வாளர்கள். இதற்கு அடுத்தபடியாக, மிகப் பெரிய உமிழ்வு, போக்குவரத்துத் தொழில் மற்றும் பயனாளர்களால் உருவாகும் கரியமில வாயு வெளியேற்றம்.

பல மில்லியன் பெட்ரோல் கார்களை இன்று தயாரிப்பதில் வளரும் நாடுகளான இந்தியா, சைனா ஆர்வம் காட்டுகின்றன. சைனா, 2030 –க்குள் பெட்ரோலிலிருந்து விடுபட திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கு இவ்வகைத் திட்டம் எதுவும் இல்லை.

கிராமப்புறத்திற்கான பரிந்துரைகள்

இந்தப் பரிந்துரைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றினால், புவி சூடேற்றத்திற்கு ஒரு தீர்வு கிடைத்து விடுமா? நிச்சயமாகச் சொல்ல முடியாது. மேலும், இந்த பரிந்துரைகளில் சிலவற்றை, பல நாடுகள் இன்று பின்பற்றி வருவதும் உண்மை. அப்படி இருக்கையில், இந்தப் பிரச்சனையின் மூலத்தை நாம் கண்டு கொண்டுவிட்டோமா? அல்லது, பிரச்சனையின் மையத்தை விட்டு விட்டு, வேறு எதையோ இங்கு அலசிக் கொண்டிருக்கிறோமா?

எல்லாம் நியாயமான கேள்விகள். முதலில், இந்தப் பிர்ச்சினையின் பெரும் காரணங்களை அலசுவோம். அதிலிருந்தே, இந்தப் பிர்ச்சினை ஏன் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்று உடனே தெரிந்து விடும்.

  1. உலகின் பணக்கார 10% மக்கள், பூமியின் 50% கரியமில வாயுவிற்கு காரணமாக உள்ளார்கள். இதனால், எந்த ஒரு மாற்றமும் இவர்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும்.
  2. உலகின் மிக ஏழையான 3.5 பில்லியன் மக்கள் உருவாக்கும் கரியமில வாயு, பூமி அளவில் வெறும் 10% தான்.
  3. வெறும் 100 நிறுவன்ங்கள் உலகின் கரியமில வாயுவில் 71% உமிழ்கிறார்கள். இந்த நிறுவன்ங்கள் உலகெங்கும் உள்ளன. இவற்றின் பட்டியல் இதோ:
    https://www.activesustainability.com/climate-change/100-companies-responsible-71-ghg-emissions/
  4. மேலே உள்ள பட்டியலில், பெரும்பாலும் தொல்லெச்ச எரிபொருள் நிறுவனங்கள் என்றால், உங்களுக்கு எந்த ஒரு வியப்பும் இருக்க நியாயமில்லை. இதில் கோல் இந்தியாவும் அடக்கம்.

தீர்வுகள் என்று தொடங்கிவிட்டு, இவற்றை இங்கே சொல்ல என்ன காரணம்? சில சக்திகள், பூதாகாரமான சில பிர்ச்சினைகளுக்கு தீர்வு காண தடுப்பு முயற்சிகளை தங்களது, அரசியல், பணபலத்தால், சாதித்து வருவதை, இந்தத் தொடரில் நீங்கள் படித்திருப்பீர்கள். இவ்வகை சக்தி வாய்ந்த நிறுவனங்கள், தங்களுடைய லாபத்தைக் காக்க, இந்தப் பிர்ச்சினையைத் திசை திருப்ப, கடந்த 50 ஆண்டுகளாக, பல முயற்சிகளில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்று வந்துள்ளார்கள். இவர்களது சுயநோக்கு மற்றும் குறுகிய பார்வை, நம் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

விஞ்ஞானத்தில் எந்த சந்தேகமும் இல்லை. விஞ்ஞான திரித்தல், பல அபத்த கேள்விகளை எழுப்பியதோடு, டிரம்ப் போன்ற விஞ்ஞான பின்புலம் இல்லாதவர்களையும் நம்ப வைத்து, தங்களுடைய சுயநலத்திற்காக, உலகை ஒரு அபாயப் பாதையில் தள்ளிவிட்டு, வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியது. இதுவரை நாம் பார்த்த விஞ்ஞான திரித்தலில் முடிசூடா மன்னன், பருவநிலை மாற்றம் சார்ந்த திரித்தல்தான். ஏனென்றால், பழைய சிகரெட், பெட்ரோலில் ஈயம், ஜி.எம்.ஓ., ஓஸோன் அடுக்கு, என்று பட்டை தீட்டிய பல அணுகுமுறைகளின் ஒட்டுமொத்த திரித்தல் இது.

அடுத்த சில பகுதிகளில், இந்தப் பிர்ச்சினையைத் தீர்க்க விடாமல் தடுக்கும், விஞ்ஞான திரித்தல்களை விவரமாகப் பார்ப்போம்.

புவிச் சூடேற்றம்

விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10 புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள்
Exit mobile version