Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

கைச்சிட்டா – 8

This entry is part 8 of 8 in the series கைச்சிட்டா

இசை

பாம்பே நகரத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் ஹிந்துஸ்தானி இசை எவ்வாறு உருமாறியது என்பதைத் தேஜஸ்வினி நிரஞ்சனா, “மும்பையில் மியுசிகோஃபிலியா” நூலில் தடம் பின்பற்றிப் பதிந்திருக்கிறார். 1950கள் வரைக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின்கீழ் இருந்தபோதும்; அதன்பின் சுதந்திர, பின்-காலனித்துவ பெருநகரமாக உருமாறியபோதும் – இந்துஸ்தானி இசை குறித்த வரலாற்று ஆய்வை முன்னெடுக்கிறார். செய்தித்தாள்கள், வரலாற்றுக் காப்பகங்கள், வாய்மொழி பேட்டிகள், செவிவழிச் செய்திகள், இசைக் கலைஞர்களுடனான பேட்டிகள், மாணவர்களுடனும் விமர்சகர்களுடனுமான உரையாடல்கள், இசைக்கருவி தயாரிப்பாளர்களுடனான சந்திப்புகள், சொந்த அனுபவங்கள் என எல்லாவற்றையும் தொகுத்துச் சரித்திரத்தை முறைமைப் படுத்தியிருக்கிறார் நிரஞ்சனா.

நகரம் என்றாலே வேறுபாடுகள் கொண்டது: பணம் படைத்தோர் x அல்லாதோர்; சாஸ்திரீய சங்கீதம் தெரிந்தோர் x பாண்டித்யம் இல்லாதோர்; ஆண் x பெண்; இந்து x இஸ்லாம்; ஹிந்தி மொழி அறிந்தோர் x வேற்று மாநிலத்தோர் – இன்னும் பல ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது பம்பாய் நகரம். இவர்கள் எல்லோரையும் ஹிந்துஸ்தானி எப்படி ஒருங்கிணைத்தது என்றும் விவரிக்கிறார். கச்சேரிகளுக்குச் செல்வதாலும் வாத்தியங்களைக் கற்றுக்கொள்வதாலும் அரங்கேற்றங்கள் நிகழ்த்துவதாலும் சேர்ந்திசை வகுப்புகளாலும் குரு பரம்பரையினாலும் பருவநிலைகள் தோறும் வரும் பண்டிகைக் கால வாசிப்புகளாலும் எவ்வாறு துடிப்பான சமூகம் நிலவியது என்பதையும் மேற்குலகப் பாரம்பரிய இசையில் இருந்து எவ்வாறு வேறுபட்டது என்பதையும் உணர்த்துகிறார்.

முதலாம் அத்தியாயம்: இதில் ஹிந்துஸ்தானி சங்கீதம் எவ்வாறு நகர்ப்புற இடங்களையும் பேசுபொருள் உருவாக்கத்தையும் ஒழுங்கமைத்துப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எவ்வாறு மும்பை நகர்ப்புறத்தை உருவாக்க உதவியது என்பதை ஆராய்கிறது.

இரண்டாம் அத்தியாயம்: மும்பையில் இசைக்கும் கட்டப்பட்ட இடத்திற்கும் இடையிலான உறவை ஆராய்கிறது. பம்பாயின் “சொந்த நகரமான” கிர்காமில் இந்துஸ்தானி இசை இருப்பதில் குறிப்பிட்ட கவனம் செலுத்துகிறது.

மூன்றாம் அத்தியாயம்: இந்துஸ்தானி இசையைக் கேட்பதன் உக்கிரமான மருவுதலைப் பேசுகிறது.

நான்காம் அத்தியாயம்: இசை கற்பித்தல் மற்றும் இசைப் பாடங்களை உருவாக்குவதில் அதன் பங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

அன்பும் ஆசையும் பிச்சித்தனமான மயக்கமும் பெருநகரத்தில் அகநிலையை உச்சத்தில் இட்டுக்கொண்டுபோக நிபந்தனையாக ஒன்றிணைகின்றன. இதற்கு இசை விசையாகிறது. நவீன நகர்ப்புறங்களுக்குள் ஒரே நேரத்தில் நிலவும் இயல் இயக்க மீறிய உள ஆற்றலுக்கும் சமூக வாழ்விடத்தின் கூட்டுச் செயல்பாட்டிற்கும் – இசை ஒருங்கிணைக்கும் பொருளாக நிலவுகிறது என்பது புலப்படுகிறது.

தெற்காசிய ஆய்வுகள், பிந்தைய காலனித்துவ மற்றும் காலனித்துவ ஆய்வுகள், இனவியல், மற்றும் சமூக கோட்பாடு ஆராய்ச்சிகளுக்கு இந்த நூல் துணைபுரியும்.

ஒற்றறிதல்

யுவன் சந்திரசேகரின் புனைவெழுத்துகளுக்குச் சில பொதுக்குணங்கள் உண்டு. இந்த எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கப்பட்ட வாசகருக்கு இவை எதிர்பார்ப்புக்கு உரியவை. புதிய வாசகருக்கு இவை எதிர்பாரா விளைவை அளிப்பவை.

பின்னட்டையில் சுகுமாரன்:

கதையாக இருப்பதை கதையற்றதாக மாற்றுவது, கதைத்தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக்குள் கதை என்று வட்டச் சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புன்னவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும், அற்புதங்களை இயல்பாகவும் சித்தரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்து செல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக் கொள்ளும் சுவாரஸ்யத்துடன் முன்வைப்பது, யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத் தன்மையைக் காணலாம்.

கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் விைனையப் பற்றிக் கவனம் கொள்ளும் பக்குவத்தையும் காண முடியும். முந்தைய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகள் புலனாகும் இம் மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது. 

தமிழினி.இன்

சிறுகாட்டுச் சுனை

சிங்கப்பூரை அறியாதவர்களுக்கு களிநயத்தோடு கூடிய புதிய தகவல்களையும், பல்லாண்டுகளாக இங்கேயே வாழ்பவர்களுக்கு அவர்கள் அனேகமாகப் பெயரளவில் மட்டுமே அறிந்திருக்கும் ஒரு விஷயத்தைக் குறித்துச் செறிவுள்ள தகவல்களையும் நிதானமான பார்வைகளையும் வழங்குபவை இக்கட்டுரைகள். அளவிற் சிறியது என்றாலும் இந்நூல் சரளமான வாசிப்பின்பத்துக்கும் தீர்க்கமான சிந்தனைகளுக்கும் நாற்றங்காலாக இருக்கிறது – எழுத்தாளர் சிவானந்தம் நீலகண்டன்

நீரில் அலையும் முகத்தைப் போல மாற்றத்தின் போக்கில் அலைவுறும் சிங்கப்பூர் என்ற இந்தக் குட்டித் தீவின் மரபுகளைத் தேடி அலைந்த எனது தடத்தில் நான் கண்ட மரபின் நீட்சிகளையும் அதன் வழியாக உற்று நோக்கி அறிந்த வரலாறுகளையும் உங்களோடு பகிர விரும்பியதன் விழைவே இத்தொகுப்பு – அழகுநிலா

கைச்சிட்டா

கைச்சிட்டா – 7
Exit mobile version