மரம்
ஒரு காலத்தில்
அந்த மரங்களின் கீழ்
நின்றிருக்கும்போது
மரத்தின் மாற்றத்தை
நானறிந்திருந்தேன்
அதை என் மனதில்
படம் பிடித்து வைத்திருந்தேன்
சிறிய மரங்கள் என் வாழ்வை எளிமைப்படுத்தியது
பெரிய மரங்கள் என்னை மண்டியிட வைத்தது
இலைகள் அசைந்து
சூரிய ஒளி
பொற்காசுகளென மின்னியது
பாடசாலையின் ஆசிரியனாக
அது இருந்த நினைவுகள்
காற்றில் கரைந்து விடவில்லை
கடவுளர்கள் அமர்ந்த கிளைகள்
இயற்கையின் பலகணி
மரத்தால் காட்டப்பட்ட வீடு
மாற்றம் என்பது முற்றிலும்
உண்மையின் அடிப்படையில் நிகழ்வது
நான் அப்பொழுது அங்கு
எங்கு வேண்டுமானாலும்
செல்லும் சுதந்திரத்தை அடைந்திருந்தேன்
எனக்குக் கற்றுக்கொடுத்தவர்கள்
இப்பொழுதும் சரி அப்பொழுதும் சரி
உயிருடன் இல்லை
நட்பு
ஒருவரை விட்டு ஒருவர்
பிரிவதற்காகத்தான்
மனிதர்கள் ஒன்று சேர்கிறார்கள்
எது சரி எது தவறு என்று
வழக்கம்போல் யாருக்கும் தெரியாது
தவிர்க்க முடியாத சந்திப்பு
விருப்பத்துடன் பிரிதல்
இரண்டு கடிகாரங்கள்
ஒரே நேரத்தைக் காட்டுவதில்லை
வாழ்க்கையின் அங்கம்
நாடகத்தின் காட்சி
காய்கள் நகர்த்தப்படுகின்றன
சொக்கட்டான் உருட்டப்படுகிறது
பல காரணங்கள் இருந்தது
இப்பொழுது ஒரே ஒரு
காரணம் தான் இருக்கிறது
ஆட்டம் ஆரம்பம்
உண்மையில் சொல்லப்போனால்
இது நட்பின்
ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டது
அது தோற்றுப்போகிறது
நீடிக்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறது
நீடித்தால் அர்த்தமில்லாமல் போய்விடுகிறது
நன்கு தெரிந்தவன் என்பதைத்தவிர
வேரொன்றும் இல்லை இப்பொழுது
நலம் விசாரித்துக் கொள்ளலாம்
மரபான முறைப்படி
மற்றபடி நினைவில் இருப்பதை
எப்படி மறக்க முடியும்
அது
நான் தான் அது
அது தான் நான்
எல்லாவற்றின் மீதும்
இருக்கிறேன் நான்
அது போலவே அல்லது
அது போல் ஒன்றாகவே
இருக்கிறேன் நான்
நான் உனக்குக் கட்டுப்பட்டவன்
உன் பிரமாண்டம் ஆபத்தானது
பெரிய போர்வையை
ஷாமியானா பந்தலைப் போல்
சாவு வீடு மற்றும் விஷேசத்திற்கு
அமைத்திருந்தார்கள்
வரைந்து கொண்டிருக்கும் ஓவியம்
நடந்து கொண்டிருக்கும் வாழ்க்கை
மாறிக்கொண்டிருக்கும் மனம்
ஒரு கவிஞன்
இறந்து தூசி ஆகினான்
அவன் அப்படித்தான்
எழுதினான் அவன் கவிதையில்
இப்பொழுது இருப்பது போல்
அவள்
அவள் நோயுற்றிருந்தாள்
எல்லோரும் இருந்தும்
அவள் தனியாக இருந்தாள்
அவள் என் வருகைக்காகக் காத்திருந்தாள்
அவள் வீட்டுத் தோட்டத்தில்
பூக்கள் செடிகொடியிலிருந்து
மண்ணில் வீழ்ந்த வண்ணம் இருந்தது
நானும் அவளும் அங்கு
அமர்வதற்காக அது காத்திருந்தது
நிழலின் அமைதி ரகசியத்தைப் பேணியது
எத்தனை ஆண்டுக் காலம் அது நீடிக்கிறது
என்பதை துல்லியமாகச் சொல்ல
அவன் இருக்கும் மட்டும்
மற்றும் இப்பிரதியை முன்னிட்டு
நானும் அவளும்
அவள் வீட்டில் எங்கும் இருந்தோம்
வீடு முழுக்க பிரவேசிக்க
என்னை அவள் அனுமதித்தாள்
இத்தனை நடந்தும்
ஒன்றும் தெரியாதது போல்
எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்
