Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

காணாமல் போன ஐந்து நாட்கள்

செவ்வாய் இரவு
உறங்கச் சென்று
ஞாயிறு மதியம் விழித்திருக்கிறேன்
இடையில்
பகல் வந்ததா
இரவு விடிந்ததா
அறியேன்

உண்ணாத உணவுக்கும்
உளறல் பேச்சுக்கும்
புரியாத மருத்துவ அறிக்கைகளும்
விழுங்கிடாத
மில்லி கிராம் நரகமுமான
மாத்திரைகளே
சாட்சியங்கள்

நினைவூட்டவோ
நினைவகற்றவோ
நிலையுணர்த்தவோ
வலியுறுத்தவோ
வற்புறுத்தவோ
எதன் பொருட்டு வந்ததோ?

பால்கனி தொட்டிச் செடியில்
புதிதாய் டேபிள் ரோஸ்
இரண்டு சாம்பல்
ஒரு கருப்பு நிற குட்டியை
ஈன்ற தாய்ப் பூனை
உக்கிரம் குறைந்த வெயில்
பைனலுக்கு முன்னேறிய கிரிக்கெட் அணி

நன்றாகத் தான்
இருந்திருக்கின்றன
நான் இல்லாமல் இருந்த நாட்கள்

வீட்டின் முற்றத்தில்
செத்துப் போன கரைப்பான் பூச்சி
தலைக்குப்புற கிடக்கிறது


முந்தைய நொடி வரை

மனம் கவரும் நிறம்
என்றேன்
“நிறமல்ல. உறைந்து போன சாயம்”
என்றது
ஆளை மயக்கும் நறுமணம்
என்றேன்
“நறுமணமல்ல. உதிர்ந்து உரமான இலைகளின்
வியர்வை” என்றது
நீ மலர் தானே என்றேன்
“ஆம்.
நீ பறிப்பதற்கு முந்தைய நொடி வரை”
என்றது

Exit mobile version