Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

ஆழ்கடலில்

ஆழ்கடலில்
படிந்திருக்கும்
பவளப்பாறையின்
வடிவம்.
வண்ணமீன்களின்
அணிவகுப்பு

பகலைப் பிழிந்தெடுத்த
ஒரு
தேனின் துளி
நீலம்பாரித்த
நஞ்சின் சாரல்
இரு வண்ணக்கலவையில்
பிரதிபலிக்கும்
வானவில் தோற்றம்

எவனோவொருவன்
தூரிகையால்
தீட்ட
உயிர்ந்தெழுந்து
நடமாடவிடும்
கூத்துப்பட்டறை

விழிமூடி
இரவை காண
ஒளி போடும்
சித்திரக் கோலம்

பகலின் யாத்திரைக்குள்
பயணித்த
ஆன்மாவின் எதுக்களிப்பு

பகலைத் தட்டி
தூங்க வைக்க
இரவு சொல்லும்
கதை

சாத்தியமற்ற
சிறகுகள்
முளைக்கும்வேளையில்
படிமத்திற்குள் ஓடிஒளிந்துகொள்ளும்
அரூபத்தின் தேவதை

இதோ
நீ,நானும்
கைகோர்த்தபடி
நடந்துக்கொண்டிருக்கிறோம்
இந்தப்பெருவெளியில்.

கனவு
ஆகப்பெரும்
இரவின் தேன்கூடு.

Exit mobile version