Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

ஆமிரா கவிதைகள்

கோடைக்கால அந்தி முடிகிறது
இனி புதிதாக
பூப்பெய்திய
மழை இரவு
தானாக சிரித்தபடி
தரை இறங்கி வரக்கூடும்
இரயில் நிலைய வாயிலில்
அரசமரத்தின் கிளைகளில்
அனைத்தும் சொல்லி முடித்து
அதனதன் குஞ்சுகளுடன் கரும்பச்சையை கட்டியணைத்தபடி
கோடை வெக்கை குடித்த
காக்கைகளும் குருவிகளும் தூங்கத் துவங்கிவிட்டன

இந்த கோடைகாலம்
இன்றோ இன்னும் சில தினங்களிலோ
முடிந்து போகலாம்
எவ்வித குறையுமில்லாமல்
அவை அனைத்தும்
ஒரு மழைக்காலத்திற்குள்
இரகசியம் ஏதுமின்றி
இடம்பெயர்ந்து செல்லும்
நான் தான்
என் வாசலில்
சேற்றில் புதைந்தபடி
கிடக்க போகும்
மரமல்லியை நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்
என் வீட்டில் வளரும்
நாய்குட்டிகளுக்கு
தகுந்த இடம் பார்க்க வேண்டும்
மனைவியிடம் எல்லாவற்றிற்காகவும்
கூடுதலாக சண்டையிட வேண்டும்
மழைக்காலம் திரும்பி வரும்போதெல்லாம்
என்
இரகசியத்தின்
சுவர்கள் இற்று விழுவதை
தாங்க முடியாமல்
அவ்வபோது
அழவும் வேண்டும்

2.

எடுத்தெறிய எத்தனிக்கும்
எல்லா கல்லிலும்
எதோ ஒரு மோன சிலை
சட்டென்று
அதை தடவிப் பார்த்து
தரையில் மெல்ல விடுவித்து
செல்கிறேன்

3.

நான்
எனக்கென்று இருந்த ஒளியின் பாதைகளை மென்று தின்று விட்டேன்
கண்கள் இரண்டும் வெறும் பொந்துகளென
கொண்ட மிருகங்கள்
கொழுத்த கால்களுடன்
மந்தை மந்தையாக என் உச்சி மேட்டிலிருந்து
இறங்கி வருகின்றன
அவற்றின் கால் நகங்களில்
என் கருணை
கரும் சிவப்பான இரத்தமென சொட்டுகிறது
நான்
அந்த மிருகங்களில் ஒன்றென
மாற விரும்புகிறேன்
எல்லா பாவனைகளையும் கைவிட்டு
முழு மிருகமென

Exit mobile version