Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

ஆமிரா கவிதை

பருவம் தப்பிய நிலங்களில்
கொற்றவை நிலை கொள்கிறாள்

தன் உதிரத்தின் வெம்மை கொண்டு
அந்நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நெருப்பை மூட்டி அதன் நடுவே
கோடான கோடி இச்சைகளைக்
கொட்டி எரிக்கிறாள்

எங்கும் விரவிப் பரவுகிறது
அதன் நெடி
சுடர்விட்டு எரிகின்றன
மாமிசக் கொழுப்புகள்
அதை அள்ளி திண்ணும் கொற்றவையின் செங்கழுத்து
ஆகாசத்திற்கும்
பூமிக்குமாக
ஏறி இறங்குகிறது
அங்கே
கொற்றவை
காலம் அழித்து
நின்று சுடர்ந்து
ஆடத் துவங்குகிறாள்

நிலமெனும் கருக்குழியில்
விழுந்து திமிர்ந்து உருண்டு திரண்டு
வளரத் துவங்குகின்றன
தீயின் நாவுகள்

நினைவு தப்பிவிட்டது
நிலம் இல்லை
அது
கொற்றவையின்
உடல்
இல்லை
வெறும் இச்சை
இல்லை
அது
நீயும்
நானுமாக
எரியும்
காலத்தின்
எக்காள ஒலி

Exit mobile version