Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

நிலை

எண்ணிலடங்கா 
அர்த்தம் கொள்வதை 
என்னைப் போல் 
ஒரு பித்தனிடம் 
ஒப்படைத்துவிட்டேன் 
இத்துயரத்தையும் சேர்த்து 
மரணத்திற்கு நிகரான
பயணத்தை மேற்கொள்கிறேன்
யாருடைய கட்டுப்பாட்டிலும் 
இல்லாத வாழ்க்கையில் 
புகுந்துகொண்டு 
வெளிவர முடியாமல் 
தவிக்கிறேன் 
எதுவும் இல்லை 
என்பது அறியாமை  
அது எதிரொலிக்கிறது 
எனக்குப் புரிந்தது போக 
இன்னும் இருக்கிறது  
என்னைப் பலவீனமாகவும் 
முழு மனிதனாகவும் 
அடையாளம் காண்கிறேன் 
நானே என்னை 
யாருக்கும் தெரியாமல் 
மறைத்து வைக்கிறேன் 
என் கண்கள் மட்டும் 
அனைத்தையும் பார்க்கத் 
தற்சமயம் நான் 
உயிருடன் இல்லை


ரகசியம்

அது புதைக்கப்பட்டிருக்கிறது
யாருக்கோ தெரிந்திருக்கிறது
நீட்டி முழக்கி
எழுதப்பட்ட ஆவணத்திலும் 
அதன் பயங்கர பயணம் 
தெரிந்ததே ஒழிய 
விடை ஏதும் காணவில்லை 
ஓராயிரம் முறை ஆடினாலும் 
ஒரே ஆட்டம் இன்னொருமுறை
ஆடப்படுவதில்லை
இவ்வளவு பெரிய பிரபஞ்சம் 
உருவாதற்குக் காரணமே 
அது ரகசியமாக 
இருப்பதினால் தான் 
உச்சத்தில் இருக்கும் 
ஏதுவொன்றும் 
தோற்றுப்போவது
அது இல்லாமல் 
இருப்பதினால் தான் 
கடைசிவரை அது 
அதுவாகவே இருக்கிறது 


அது

தெரிந்ததும் 
தெரியாதது 
ஒரே பாதையில் 
இருக்கிறது 
ஒரு கட்டத்தில் 
கைகூடும் 
வேளையில்
அனைத்தும்  
உதிர்ந்து 
போகின்றன 
மிச்சத்தில் 
எதுவோ 
அதுவே 
அது 


அவன்

கட்டிப் போட்டிருக்கும் 
உன்னை நீ 
விடுவித்துக் கொள் 
அப்படி நீ 
திரியும் போது 
உனக்கு எந்த 
பாதுகாப்பும் இல்லை 
உனக்கான 
அறுவை சிகிச்சையை 
நீயே மேற்கொள்ள வேண்டும் 
சரி தவறு என்பது 
நடை முறையில் 
தெரியவரும் போது 
இந்த உலகத்திடம் 
இருந்து கைவிடப்பட்ட 
மனிதனாய் இருக்கிறாய் 
நீ மீதியாய் மற்றும் 
தொடங்கும் 
ஒருவனைப் போல்


Exit mobile version