Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

ஒரு கடிதம்

சமரேஷ் மஜும்தார்
(தமிழில்: க. ரகுநாதன்)

என் அன்பு மகனே,

எப்படி இருக்கிறாய்? பெருநகர வாழ்வு உனக்கு ஒத்துப்போயிருக்க வேண்டும் –  அடிக்கடி நீ கடிதம் எழுதுவதில்லை.

நான் மகிழ்ச்சியாக இல்லை.

இப்பொழுதெல்லாம் நான் கிட்டத்தட்ட குருடாகிவிட்டேன், எதையும் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை.

ஆனால் அது உண்மையான காரணம் இல்லை.

இதை உனக்கு எப்படிச் சொல்வேன் என்று தெரியவில்லை, ஆனால் சொல்ல  வேண்டும். உன் அப்பாவின் சித்திரவதையை இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது.

இந்த ஆளைத் திருமணம் செய்து கொண்டு இத்தனை ஆண்டுகள் எப்படிச் சமாளித்தேன் என்பதே எனக்குத் தெரியவில்லை.

ஒரு மகனிடம் அவன் அப்பாவைப் பற்றி கொடூரமான விஷயங்களை சொல்வது எவ்வளவு மோசமான விஷயம் என்பது எனக்குத் தெரியும்.  

ஆனால் உன் அப்பா எனக்கு எந்த வழியையும் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவரது வார்த்தையாலும் நடத்தையாலும் கொடுமையாலும் என்னைச் சித்திரவதை செய்கிறார்.

அவருடனான வாழ்வு ஒரு கொடுங்கனவு போன்றது.

இதையெல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டியிருந்ததற்கு என்னை மன்னிக்கவும்.

உன் அன்பு அம்மா.

பின்குறிப்பு: என்னால் பார்க்க முடியாததால், நான் சொல்லச்சொல்ல இதை எழுதித் தபாலில் உனக்கு அனுப்பியவர் உன் அப்பா.

Exit mobile version