Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

அந்த இயல்வாகை மரத்தடியில் கொஞ்ச நேரம்

யாருமில்லாததை
உறுதி செய்து கொண்டேன்
நேற்று ஓரத்தில்
ஒதுக்கி வைக்கப்பட்ட
என் நாற்காலியை
எடுத்து நடுவில் போட்டு
அமர்ந்து கொள்கிறேன்
இன்று இதுவரை
எங்கும் உரைக்க இயலாத
சொற்களை எல்லாம்
பேச்சாக கட்டமைத்து
பேசத் தொடங்குகிறேன்
பேசி முடிக்கும் வரை
குறுக்கிடாமல் இருப்பதென
கையெழுத்திடப்படாத
ஓர் ஒப்பந்தம்
எனக்கும் இந்தச் சுவருக்கும்
இப்படி ஒரு சுவர்
வாய்த்தலென்பது
எந்த தவத்தின்
வரம்?


எப்போதும்
என் வண்டி
அந்தத் தெருவுக்குள் நுழைந்ததும்
பின்னாடித் தொடர்ந்து
குரைத்துக் கொண்டே
துரத்தி வந்து
பின்னர் மீண்டும்
அந்த தெருவோர
இயல்வாகை மரத்தடியில்
சென்று படுத்துக் கொள்ளும்
அந்தப் பழுப்பு நிறத் தெருநாயை
இன்று ஏனோ காணவில்லை
மோப்பம் பிடித்தப்படியே
அதைத் தேடிச்
சென்று விட்டது மனம்
இப்போது அது
அந்த இயல்வாகை மரத்தடியில்
கொஞ்ச நேரம்
இளைப்பாறிக் கொண்டிருக்கலாம்.

Exit mobile version