Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

எம்எஸ்வி: விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பங்களிப்பு

எம்எஸ்வி இசை பற்றி பேசுமுன், தமிழ் திரையிசையின் வளர்ச்சியில் விஸ்வநாதன் ராமமூர்த்தி விட்டுச் சென்ற தாக்கம் என்னவென்று பார்ப்போம். தமிழ் திரையிசையை கர்நாடக சங்கீதத்தின் பிடியிலிருந்து விடுவித்து நவீனப்படுத்தியவர்கள் இவர்கள் என்பதை ஏற்கனவே பேசிவிட்டோம். அதையடுத்து இரண்டாவது முக்கியமான விஷயம், 1961-65 வரையான ஐந்து ஆண்டுகளின் இசை என்பதே இவர்களின் இசை என்று சொல்லுமளவு ஆதிக்கம் செலுத்தியவர்கள் இவர்கள் என்பதுதான். இந்தப் பாடல்களில் எது விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் என்று ஊகிக்க முடிகிறதா பாருங்கள்.
முதலில் இது.

அடுத்து இது.

அல்லது இந்த இரண்டு பாடல்களைப் பார்க்கலாம்.
முதலில் இது.

அடுத்து இது.

இந்தப் பாடல்களுக்கிடையே குறிப்பிட்ட ஒரு ஒற்றுமை இருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ் திரையிசையைக் கூர்ந்து கவனித்தவர்கள் மட்டுமே இந்தப் பாடல்களில் கே. வி. மகாதேவன் பாடல்களையும் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களையும் அடையாளம் கண்டு கொள்வார்கள். கே வி மகாதேவனுக்கும் அவருக்கே உரித்தான இசை ஒன்று இருந்தாலும், சாதாரணமாய் பாட்டு கேட்கும் ஒருவர் சமூக படங்களில் வரும் சிறந்த பாடல்களை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாணி இசையோடு அடையாளப்படுத்திக் கொள்வதுதான் இயல்பு. எனவேதான் கே வி மகாதேவன் பாடல்களில் பல பாடல்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம்.
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் தாக்கம் இப்படி இருந்தது என்று சொல்லலாம்- அக்காலத்தின் சிறந்த பாடல்கள் ஈதைக் கேட்டாலும் அது அவர்களது பாடல்களாகதான் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அப்படிப்பட்ட ஆதிக்கம் செலுத்தும்  இசைக்கு உரியவர்கள் இவர்கள்.
பலரைப் போலவே நானும் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடன் போட்டி போட முடியாமல்தான் கே வி மகாதேவன் தெலுங்கு திரையுலகுக்குச் சென்றார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் திரைப்பட விபரங்களைச் சரி பார்க்கும்போது நான் நினைத்தது தவறு என்று தெரிகிறது. 1960ஆம் ஆண்டில் கே.வி. மகாதேவன் ஒன்பது தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆனால் விஸ்வநாதன் ராமமூர்த்தியோ ஐந்து படங்களில் மட்டுமே இசையமைத்திருகின்றனர். 1962ஆம் ஆண்டில், இவர்களுக்கு இணையாக கே.வி. மகாதேவன் பன்னிரெண்டு திரைப்படங்களில் இசையமைத்திருக்கிறார். அடுத்த ஆண்டு, அவர் இருபத்து இரண்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்! 1964 மற்றும் 1965 ஆகிய இரு ஆண்டுகளில் தலா ஒன்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இதைக் கொண்டு விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்த ஐந்து ஆண்டுகளில் கே.வி. மகாதேவனைக் காட்டிலும் சீரான எண்ணிக்கையில் இசையமைத்திருக்கின்றனர் என்று கொள்ளலாம். ஏறத்தாழ சம எண்ணிக்கையில் இருந்தாலும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை மற்றும் பாடல்களின் தாக்கம் வேறு எந்த இசையமைப்பாளரை விடவும் அதிக தாக்கம் கொண்டதாக இருந்திருக்கிறது.
நவீன இசையை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதோடு அல்லாமல், விஸ்வநாதன் ராமமூர்த்தி மூன்று தலைசிறந்த பாடகர்கள் தமிழில் நிலைத்து நிற்கக் காரணமானார்கள். இவர்கள் எவரும் விஸ்வநாதன் ராமமூர்த்தி அறிமுகம் அல்ல, ஆனால் அவர்களின் புகழுக்கு இவர்கள் இசையமைத்த பாடல்களே காரணம். ஆம், டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசிலா ஆகிய மூவரையே சொல்கிறேன். இவர்களின் சாதனை என்னவென்று சொன்னால், டிஎம்எஸ் பாணியை மாற்றிக்கொண்டு அவர் தன் திறமையின் பல பரிமாணங்களையும் வெளிப்படுத்தக் காரணமாக இருந்தார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதே போல் பி.பி. ஸ்ரீனிவாசின் தலைசிறந்த பாடல்கள் பலவும் இவர்கள் இசையமைத்தவை. அவர் கன்னடத்தில் புகழ்பெற்ற பாடகர்தான் ஆனால் அவரது தமிழ்ப் பாடல்களில் சிறந்தவை விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தவை. இதோ, மகத்தான இந்த இரு பாடகர்களும் பாடிய ஒரு பாடல்-

தெலுங்கு திரைப்படங்களில் பி சுசீலாவின் பாடல்கள் மிகவும் விரும்பப்பட்டன. ஆனாலும்கூட அவரது சிறந்த பாடல்களில் பல விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அவர் தமிழில் பாடியவை. மென்சோகம் சுசிலாவின் குரலுக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. அதே சமயம், அவர்தான் புதிய பறவை பாடல்களையும் பாடியவர். பி. சுசிலாவின் முழுத்திறமையும் வெளிப்பட வாய்ப்பு அளித்தனர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.
சுசிலாவின் குரல் இந்தப் பாடலுக்கு எவ்வளவு கச்சிதமாகப் பொருந்துகிறது பாருங்கள்-

இதற்கு மறுமுனையில், இதோ சுசிலாவும் பிபிஎஸ்சும்-

இவர்கள் மூவரும் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு கடன்பட்டவர்கள் என்று நாம் சொன்னால் அதிலுள்ள உண்மையை இவர்கள் எவரும் மறுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
விஸ்வநாதன் ராமமூர்த்தியின் அழியாப் புகழை உறுதி செய்யும் மற்றொரு விஷயம் இது- உணர்ச்சி நிலைகள் சிலவற்றுக்கு முழுமையாய் பொருந்தும் பாடல்களை இவர்கள் உருவாக்கியிருக்கின்றனர். “போனால் போகட்டும் போடா” அல்லது, “சட்டி சுட்டதடா” போன்ற பாடல்களின் தத்துவத் தொனியைச் சொல்லலாம். கையறு நிலையின் உச்ச துயருக்கு வெளிப்பாடு அளிக்கும் “உள்ளத்தில் நல்ல உள்ளம்,” அல்லது, தங்கைக்காகப் பாடிய “மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

அல்லது, “நான் ஆணையிட்டால்” பாடலின் புரட்சி வேட்கை. “மலர்ந்தும் மலராத” பாடலின் சோகத் தாலாட்டு. “சிந்து நதியின் மிசை நிலவினிலே“, “தமிழுக்கு அமுதென்று பேர்” போன்ற பாடல்களின் மொழியுணர்வு. “வாராயோ தோழி” பாடல், திருமணப் பாடல்களின் இலக்கணத் தொகையில் ஓர் அங்கம்.
இவர்களின் பாடல்கள்தான் எத்தனை எத்தனை உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன, இன்றும் தம் உணர்வுகளை எதிரொலிக்கும் பாடல்களைத் தேடுபவர்கள் இந்தப் பாடல்களுக்குச் செல்கின்றனர். இதுதான் இவர்கள் விட்டுச் சென்ற மிகப்பெரிய கொடை என்று சொல்வேன்.
இது தவிர இன்னொரு மகத்தான சாதனையையும் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு உரித்தாக்கலாம். இந்தித் திரையிசைக்கு நிகராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இவர்கள். இந்தியாவெங்கும் உள்ள திரையிசைக் கலைஞர்களுக்கு ஹிந்தி திரையுலகம் ஆதர்சமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. விஸ்வநாதன் ராமமூர்த்தியும்கூட நௌஷத்தை எந்த அளவுக்கு உயர்வாய் மதித்தனர் என்பதை அனைவரும் அறிவோம். இவர்களிடமும்கூட இந்தித் திரைப்பாடல்களின் தாக்கம் இருந்தது, ஆனால் அது மிக அதிகமல்ல. மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களும் இந்திப் பாடல்களை நகலெடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்ட காலம் அது.
தென்னகத்தின் ஷங்கர் ஜெய்கிஷன் என்றே விஸ்வநாதன் ராமமூர்த்தி அழைக்கப்பட்டனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர்கள் ஷங்கர் ஜெய்கிஷனைவிடச் சிறந்த இசையமைப்பாளர்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள் இந்தியில் தயாரிக்கப்பட்டபோது, இந்தி மொழி பாடல்கள் தமிழின் உயரத்தைத் தொட முடியவில்லை என்பதுதான் உண்மை. “ஆலயமணி“, நௌஷத் இசையமைப்பில் “ஆத்மி” என்றும், “நெஞ்சில் ஒரு ஆலயம்” ஷங்கர் ஜெய்கிஷன் இசையமைப்பில் “தில் ஏக் மந்திர்” என்றும், “பாலும் பழமும்” நௌஷத் இசையமைப்பில் “சாத்தி” என்றும் வெளிவந்தன. இந்தப் படங்களின் பாடல்களை நாம் ஒப்பிட முடியும்.
தெலுங்கு மொழியிலும் விஸ்வநாதன் ராமமூர்த்தி புகழ்பெற்றவர்களாகவே இருந்தனர், ஆனால் இந்தப் பாடல்கள் பலவும் டப்பிங் செய்யப்பட்டவை. இருந்தாலும்கூட இவை பெரிய அளவில் வெற்றி பெற்று, கண்டசாலாவுக்கும் சுசிலாவுக்கும் தெலுங்கில் உள்ள சிறந்த பாடல்களின் பட்டியலில் இடம் பெற்றுக் கொண்டன. ஐம்பதுகளிலேயே விஸ்வநாதன் ராமமூர்த்தி பிரமிக்க வைக்கும் இந்த அஷ்டபதிக்கு இசையமைத்திருக்கின்றனர்-

பூலரங்குடு” என்ற படத்தில் வரும் பாடல், “இந்த மன்றத்தில் ஓடி வரும்” என்ற பாடலைப் போலில்லை? விஸ்வநாதன் ராமமூர்த்தியின் தாக்கம் அப்படி.

தெலுங்கு திரையிசை இந்துஸ்தானி இசை மரபில் நிறைய எடுத்துக் கொண்டிருக்கிறது என்றாலும்கூட விஸ்வநாதன் ராமமூர்த்தியும்கூட அதன் வளர்ச்சியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். இது மிகப்பெரிய ஒரு சாதனைதான்.
சரி, விஸ்வநாதன் ராமமூர்த்தி அமைத்துக் கொடுத்த வழித்தடத்தில் பயணித்து, அவர்களின் இசைக்கு மேலும் பல பரிமாணங்கள் சேர்த்து பல புதிய சாதனைகளை நிகழ்த்தியவர்கள் யார்? யாரும் அதைச் செய்யவில்லை என்பதுதான் சோகம். எம்எஸ்வியாகவே இருக்கட்டும், டிகேஆராகவே இருக்கட்டும், ஓரிரண்டு ஆண்டுகள் இந்தப் பாணியில் சென்றனர். டிகேஆர் காணாமல் போனார், எம்எஸ்வி தன் பாணியை முழுமையாக மாற்றிக் கொண்டார். பின்னர் வந்த ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களிடம் எம்எஸ்வியின் தாக்கத்தைப் பார்க்க முடிகிறது, இப்போது இமான் போன்றவர்கள் இளையராஜா பாணியைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் விஸ்வநாதன் ராமமூர்த்திக்குப்பின், அவர்களைப் போல் எளிய, ஆனால் இறுக்கமான கட்டுக்கோப்பு கொண்ட, இதயத்தைத் தொடும் மெலடி இசைக்கு உரியவர்கள் என்று யாரும் வரவில்லை.
கட்டுரையின் இப்பகுதி முடிவுக்கு வருகிறது.
ஆனால் விடைபெறுமுன் இந்தித் திரையிசையின் பல்முனைப்பட்ட வீச்சை உணர்த்தும் வகையில் சில பாடல்களைப் பின்னிணைப்பாகக் கொடுக்க விரும்புகிறேன்.
ஓ.பி. நய்யாரின் இறவாப்புகழ் கொண்ட பாடல் இது. துவக்கமும் ட்யூனும் கேட்கும்போது “நாலாம் நாலாம் திருநாளாம்” பாடல் நினைவுக்கு வருகிறதா?

இது ரோஷனின் மிக மென்மையான மெலடி-

இந்தியாவெங்கும் எதிரொலித்த மதன் மோகனின் மெலடி-

நாட்டுப்புற இசையின் தாக்கம் கொண்ட சலீல் சௌதுரி இசை. இந்திய அளவில் இதன் தாக்கமும் மிகப்பெரிது-

ஜெய்தேவின் விளையாட்டுத்தனமான, ஆனால் மறக்க முடியாத ட்யூன்-

பர்மன் சிறிது விளையாடிப் பார்க்கிறார்-

இறுதியாக, வாதைக்குட்பட்ட மேதை, சஜ்ஜத் ஹுசேனின் மெலடி-

இதின் நௌஷத், ஷங்கர் ஜெய்கிஷன், ரவி மற்றும் பலரின் பாடல்கள் இல்லை இந்தித் திரையிசையில் எத்தனை எத்தனை வகைப் பாடல்கள் வந்திருக்கின்றன என்பது பிரமிக்க வைக்கும் விஷயம். அதற்கென்றே நீண்ட ஒரு தொடர் எழுத வேண்டியிருக்கலாம், அப்போதும் எத்தனை எழுதியும் தீராது என்றுதான் நினைக்கிறேன்.

(தொடரும்)

Exit mobile version