Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

கவிதைகள்

வருடங்கள் பிசுபிசுக்கும் கோயில்தரை
உடைந்த புல்லாங்குழலிலிருந்து
      ஊர்கிறது
            பெயரற்ற ராகம்
மணிகளில்
மௌனம் கனத்துத் தொங்க
     நிழலொளி நேரத்தில்
        நினைவுகளற்ற
            பிரார்த்தனைகளை
     வில்வ இலைகள்
            விசாரிக்கின்றன்
திரியிலுறங்கும் சுடர்
கோலங்களசையும் வாசல்
  குரல்கள் பெருக
   கோரிக்கைகள்
   ஆரத்தி கற்பூரத்திலேறுகின்றன
கடவுள்கள் உறங்குகிறார்கள்.

oOo

மழை வெளுத்த மனம்
முல்லைப் பந்தற் கீழ்
  காற்று கவிழ்த்த
நந்தியாவட்ட விரிமலரை
    எடுப்பதோ, தொடுப்பதோ,
 தீண்டுவதோ, நுகர்வதோ...
    பார்ப்பதும் கூட,
இல்லையில்லை;
 நீள்காம்பையும்
 பச்சை மலராக்குகிறது
 உடனடியாக.

oOo

நீயும், நானும்
   நிழல் விழும் இரவும்
    நீலக் கருமரமும்
இருந்தோம் அப்பொழுது
இயங்காத கடிகாரங்கள்.
புலர்தலில்லாப் பொழுது.
கசங்காத காலம்.
பிறகு,
      நீயில்லை
நானும்,
      நட்சத்திரக் கனவுகளும்.
அப்புறம்
      நானுமில்லை
ஒரேயொரு
      எழுதாத வரிமட்டும்.

oOo

தளிர்கள் இமைக்காமல்
    மரம்
       விழித்திருக்கிறது.
தொட்டிலுறக்கம்
           நீட்டிய கிளைகளில்.
குழந்தை விழித்திடுமென
      அசையாது
  கவனம் காக்கும்
       கர்ண மரம்.
வெளிர்பாதம்
      வெளித் தொங்க,
 பனிக்கு உடல்குறுகக்
     குழந்தை தூங்க...
   பெற்றவள் எவளோ.
    சுற்றமும் ஏதோ.
தனி மழலை
         தவிக்காமல்.
 அமைதியாய்
   ஆர்ப்பரிக்கும் உள்மறைத்துக்
          காக்கும்
ஆலின் மடி மட்டும்
       நீளுமிரவில்.

oOo

Exit mobile version