Site icon சொல்வனம் | இதழ் 371 | 26 ஜூலை 2026

ராமலக்ஷ்மி கவிதைகள்

இலக்கணப் பிழை

ஒரு காற்புள்ளி
கோபத்தைச் சற்று நேரம்
நிறுத்தி வைக்கிறது

ஒரு முற்றுப்புள்ளி
ஒரு நட்புக்கு
முடிவெழுதுகிறது

ஒரு கேள்விக்குறி
பல காலமாக
உறங்கவிடவில்லை

ஒரு ஆச்சரியக்குறி
நிலைக்காத ஒன்றை
கொண்டாடுகிறது

மேற்கோள் குறிகள்
வேறொருவருக்கு சொந்தமான
வாக்குறுதிகளை
சுமந்து நிற்கின்றன

அடைப்புக்குறிகள்
உண்மையான வாழ்க்கையை
மறைத்து வைக்கின்றன

சரியான நிறுத்தற்குறியைத் தேடி
எங்கெங்கோ
அலைந்து திரிகிறது வாழ்க்கை

காற்புள்ளிகளைத் திருத்துவதிலும்
முற்றுப்புள்ளிகளை மாற்றுவதிலும்
ஆச்சரியக்குறிகளைத் துரத்துவதிலும்
கேள்விக்குறிகளுக்கு அஞ்சுவதிலும்
கழிகின்றன வருடங்கள்

கடைசிப் பக்கத்தை
திருப்பும் போதே புரிய வருகிறது
எழுதிக் கொண்டிருப்பதாக
நினைத்த கதையின்
ஆசிரியராக நாம்
ஒருபோதும் இருந்ததில்லை


வானத்தின் அகலம்

நூறாண்டு கடந்த
பழைய அரசமரத்திலிருந்து
ஒவ்வொரு காலையிலும்
புறப்படுகின்றன பறவைகள்
வானத்தின் அகலத்தை
அளந்து பாராமல்

இன்றைய பறப்புக்கு
இந்த நீலம் போதுமா
இன்னொரு நாள் பறக்க
தேவையான நீலம்
மீதம் இருக்குமா என
ஒருபோதும் அவை
கேட்டுக் கொள்வதில்லை

அடிவானம் விலகிச் செல்கிறதா
அல்லது
மெல்ல நெருங்கி வருகிறதா என
யோசித்ததில்லை

சிறகுகளுக்குக் கீழே
ஒவ்வொரு கணமும்
விரிந்து கொண்டிருக்கும்
வழியைத் தவிர
வேறு எந்த வரைபடத்தையும்
பின்பற்றுவதில்லை

சென்ற இடங்களுக்கு
சாட்சியாக
வீட்டுக்குக் கொண்டு செல்ல
வானத்தின் துண்டுகளை
சேகரிப்பதில்லை

எழுகின்றன
சிதறுகின்றன
காற்றிடம் தம்மை
ஒப்படைக்கின்றன
வயல்களுக்கிடையே
கூரைகளுக்கிடையே
தொலைவில் ஒலிக்கும்
அழைப்புகளுக்கிடையே
பகலைக் கழிக்கின்றன

மாலை சாய்கையில்
திரும்புகின்றன
புறப்பட்ட அதே சிறகுகளுடன்
புறப்பட்ட அதே கிளைக்கு—

வானம் முழுவதுமே
இரு கிளைகளுக்கு
இடையேயான தூரமே தவிர
வேறொன்றுமில்லை
என்பதைப் போல.

Exit mobile version