
மாடி வரை வளர்ந்து
மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது
என்றோ வளர்த்த நித்தியமல்லி!
பெருமழையில் நைந்தாலும்
வேனிலில் வாடினாலும்
எதிர்பாராத இரவின் மழையில்
விரிந்து சிரித்தாலும்
மலர்ந்துகொண்டேதான் இருக்கிறது
தினமும்.
அவ்வியற்கையின் துளியோடு
ஏகாந்தத்தில் இசைந்தபடி
எதிர்பாராத ஒரு கணத்தில்
என் புத்தியில் விரிகிறது
படித்தவையும்… படிந்தவையும்…
மலர்ந்து நிற்பது மட்டுமே
என் இறையடியின் தருணம்
என காற்றில் அசைகின்றன
பறிக்க இயலாத எட்டாத பூக்கள்.
மெலிதாக அகம்
சற்றே காரம் கொள்ள
சிறுதேனிக்கு இருக்கட்டும்
என்று பெருமிதம் கொள்கிறது மனம்.
எட்டியவையும் எனக்கேயென்றது
அருகில் வந்த அச்சிற்றுயிர்!
