Site icon சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

மெய் நிகர்

அடர்ந்த காட்டில்
எங்கோ ஒரு மூலையில்
அவன் தென்படுகிறான்
இப்பொழுது நகரத்தின்
ஒரு வீட்டிலிருக்கும்
அறையில் அவன் இருக்கிறான்
இதைப் பதிவு செய்தவர்களின்
ஆராய்ச்சியில் இருண்டு கதைகள்
ஒரே மாதிரியாகக் கிடைத்தது
கனவு போக மிச்சம்
இருக்கும் நிரூபணத்தில்
இவை சாத்தியமாகியது
மீண்டும் அது கடலிலே
கலந்து போக
வழக்கம் போல்
தனியனாகப் பயணம் செய்தான்
பொன் முட்டையிடும்
வாத்தை அறுத்தவனின்
மிஞ்சிய பேராசை
சாக்கிடையில் விழுந்தது
மெய் நிகர் உலகம்
அவனைக் காப்பாற்றிக்
கரை சேர்த்தது


ஓவியம்

அது ஒரு வரையப்படாத ஓவியம்
குறிப்பிட்ட காலத்தில்
அசையாமல் ஆடாமல்
என்றுபோல் இன்றும் இருந்தது
அந்த ஓவியத்தில்
இருந்த பெண்ணின்
உடையிலிருந்த மலர்கள்
சற்றுமுன் பூத்திருந்தது
அவள் நின்றிருந்த
வாசல் வழி கண்ட முகப்பு
தற்சமயம் ஸ்தூலமாக இல்லை
நினைவுகளின் நீரில்
அவள் முகம் நன்றாக
தெரிய மின்னலின் வலி
அவனுக்கு உதவி செய்தது
ஞாபகத்தின் இண்டு இடுக்குகளில்
அழகிய தருணம்
நட்சத்திரம் போல் மின்னியது
என்றும் அவ்வோவியம் அழியாமல்
ஆற்றின் நீரில்
மிதந்து சென்றது

Exit mobile version