Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

குதிரைவண்டி

அன்றிரவு அச்சிறுவயதில் 
வானத்திலே மகிழ்ச்சியுடன் 
குதிரை வண்டியிலே 
பயணம் செய்தேன்  
எனக்கு இருக்கும் 
பாதுகாப்பு அதற்கில்லாமல் 
குதிரை வண்டி 
பெரியதாக இருந்தது 
எல்லோரும் மாடியின் 
உச்சிக்குப் போவதுபோல் 
வண்டியில் ஏறி அமர்ந்தோம் 
கம்பியினை கொக்கியில் மாட்டியபின் 
சமநிலை வந்ததுபோல் வண்டி புறப்பட்டது 
குதிரையின் குளம்பொலி சத்தம் 
வீரனை மறக்கச் செய்து 
சமூக பயன்பாட்டிற்கு வந்திருந்தது 
நினைவுகூரும்படி இருப்பதற்கு 
அக்குதிரை வண்டியா அல்லது 
நான் சிறுவனாக இருப்பதா 
அந்த வண்டி உயிர் பெறுவதற்கு 
அக்குதிரை காரணமென்றால் 
மனிதர்கள் இல்லாத இடம் 
வெறிச்சோடி இருப்பது நியாயம் தான் 
மக்கள் நடமாட்டத்தில் 
அவன் ஒருவனாகச் சாலையில் 
அத்தனை வண்டிகளைச் 
சமன் செய்வது போல் 
ஒரு வண்டியில் 
அவன் பயணம் செய்தான் 
மகிழ்ச்சியின் தொடக்கம் 
முடிவு என்பது 
ஒரு அருவியை
பார்க்கத் தொடங்கி 
நீண்ட நேரம் கழித்து 
அதனிடம் வெறுமனே
முடிவதைப் போல்


சிலந்தி

கழிவறை இருக்கையில் 
அமர்ந்திருந்தபோது 
சுவரில் ஒட்டிக்கொண்டிருக்கும் 
அச்சிலந்தியை 
நேருக்குநேராக சந்தித்தேன் 
அதற்கென்று ஒரு முகம் 
இருப்பதைக் கண்டுகொண்டேன் 
காட்டில் உள்ள மரங்களுக்கிடையே 
கண்ட ராஜ்ஜியத்தை 
அது இழந்திருந்தது 
அதன் நகர்வுகள் எனக்கு 
அச்சத்தைத் தந்த போதிலும் 
பிறகு நாங்கள் 
நண்பர்களாகிப் போனோம் 
அதற்காகவும் சேர்த்து 
நான் சிந்திக்கத் தொடங்கினேன் 
இன்னும் நான் மனிதனாகவும் 
அதுவொரு சிலந்தியாகவும் 
இருக்கும் காரணத்தை  
வெறுத்து ஒதுக்கினேன் 
காலவெளியில் 
பிரிந்த நாங்கள் 
இப்பொழுது ஒன்றுசேர 
அச்சிலந்தி இக்கவிதையிலே 
இடம்பிடித்து விட்டது 
என்றென்றும் நிலைப்பதற்கு

Exit mobile version