Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

குறிஞ்சியின் முல்லைகள்

பாலைவனத்தணல்,
சற்று ஓய்ந்தால் கள்ளிச்செடி,
பசும் பாசமென்று நெருங்கிட
நஞ்சினால் நிரம்பிய ஊற்று,
எஞ்சி அங்கங்கே சொட்டிக்கிடக்கும்
சில அன்புத்துளிகள்.
தாகம் தணியும் முன்
துடைத்துச்செல்லும்
வலிய விதி.
அதனினும் வலியதாம்
அத்தனையும் கடந்து
அவள் கண்ட ஞானஒளி.
விதியால் பாலைவனமான முல்லையது  
தன்னொளியால் மீண்டு வந்த
மலர்மனமது.
கோபத்தை மட்டுமே
ஊற்றி வார்க்கப்பட்டதாய்
சித்திரிக்கப்பட்டிருக்கும்
அந்தக் கொற்றவைகளுக்கு
போர் ரேகைகள் படர்ந்து கடந்த
பாதங்களில் அகப்பட்டிருக்கும்,
ஏகாந்த மென்கானகத்தின் சாயல்.  

Exit mobile version