Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

ஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி

 ஜா. ராஜகோபாலன்

நண்பர்களே, ஆட்டத்தின் ஐந்து விதிகளை இதுவரை பார்த்து வந்தோம். இவ்விதிகள் எவையும் வெறுமே பயிற்சி நோக்கில் மட்டுமே எழுதப்படவில்லை. இவை ஐந்தும் அனுபவங்களின் அடிப்படையிலும், தொடர்ந்து பின்பற்றப்படுவதன் அடிப்படையிலும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டவை. 

ஆட்டத்தின் ஐந்து விதிகள்

  1. வாடிக்கையாளர் சுயமுடிவெடுக்கக் கூடிய  மனமுதிர்ச்சி பெற்றவர்
  2. உங்களிடம் கேட்கப்படாதவரை அறிவுரைப் பேச்சை வாடிக்கையாளருக்கு    வழங்க வேண்டாம்
  3. வாடிக்கையாளரின் முந்தைய முடிவுகள் குறித்து தாழ்த்திப் பேசவேண்டாம்
  4. வாடிக்கையாளரின் நோக்கங்களை நேர்மையாகப் பாராட்டுங்கள் 
  1. அனைத்து விதிகளும் புன்னகை எனும் தாய்விதிக்கு உட்பட்டவையே 

இவ்விதிகளைப் பயிற்சி வகுப்பில் பேசியதும் என்னிடம் எப்போதும் கேட்கப்படும் கேள்விகள் சில உண்டு. –

இவ்வகையிலான அனைத்து கேள்விகளுக்கும் என் பதில் நேரடியானது. “இல்லை” என்று உடனே புன்னகையுடன் சொல்வேன். அப்படிச் சொல்ல எனக்குத் தயக்கமே இல்லை. சற்று பொறுப்பற்ற பதிலாகத் தோன்றக்கூடும். ஆனால் இந்த விடை கேள்விக்கல்ல. அக்கேள்வியின் பின்னிருக்கும் சிந்தனைக்கானது.

இந்தக் கேள்விகளுக்குப் பின்னால் இருக்கும் சிந்தனை என்ன ? விற்பனை எனும் பணிக்கு சிந்தித்து, முயன்று, கடும் உழைப்புடன் தன்னை சீர் செய்து கொண்டு, கற்று, பின்பற்றி, சுயவிமர்சனம் தொடர்ந்து செய்து கொண்டு, பின் தன்னை மீள மீள மாற்றிக்கொண்டு, தன்னியல்பில் பொருந்தும்வரை தொடர் முயற்சிகளை விடாமல் செய்வது –  என ஒரு விற்பனையாளருக்குப் பின்னால் இவ்வளவு சுய முயற்சிகள் உள்ளன. இவற்றில் எதையுமே செய்யாமல் நான் இங்கு கற்றுக்கொள்ளும் நான்கு வரிகளைச் சொன்னால் எனக்கு வெற்றி கிடைத்துவிட வேண்டும் என சிந்திப்பதுதான் இதைப்போன்ற கேள்விகளைத் தூண்டுகிறது. எந்த உழைப்பையும் கொடுக்காமல் குறுக்கு வழியில் சிக்கல்களைக் கடந்து விட பயிற்சி வகுப்புகள் உதவாதா எனும் எண்ணம்தான் இக்கேள்விக்கு அடிப்படை. 

ஐந்து விதிகளும் அலிபாபா குகையைத் திறக்கும் மந்திரம் இல்லை. விற்பனையைப் பொறுத்தவரை அப்படி ஒரு மந்திரத்தைக் கண்டுபிடித்தவர் எவருமில்லை. பிறகு இந்த ஐந்து விதிகளும் என்ன செய்யும்? எதற்குப் பயன்படும்?

இந்த விதிகள் விற்பனையை ஒரு வழமைச் செயல் எனும் நிலையிலிருந்து சிந்தனைச் செயல்பாடாக மாற்ற முயல்கின்றன. திறன் சார்ந்த பணிகளைப் போலவே விற்பனையிலும் பணியின்போது திறன் மேலும் மேலும் மெருகேறி கூர்மை கொள்கிறது. ஒவ்வொரு பணியும் திறனின் வெவ்வேறு பரிமாணங்களைக் கோருகிறது. ஒரு அறுவைச்சிகிச்சை நிபுணர் எப்படி ஒவ்வொரு சிகிச்சையின்போதும் கவனமும், நுட்பமும் கொண்டு செய்கிறாரே அது போலவேதான் விற்பனையும். ஒரு ஓவியனின் கலை வெளிப்படுவது போன்றே மனம் ஒப்பி செயல்பட வேண்டிய பணி அது. இவ்விதிகள் அவ்வாறாக சிந்திப்போருக்கு உரியன. மாறாக செங்கல் அடுக்கும்  பணியைப் போலவே விற்பனையையும் நினைப்போருக்கு இவ்விதிகள் கற்றுத்தரப்போவது ஏதுமில்லை.

இவற்றை மெய்யாகவே பின்பற்ற செய்யவேண்டிய முறைகள் எளிமையானவை 

நண்பர்களே, விற்பனைப் பணிக்கு பயிற்சியாளன்  என்று அறிமுகப்படுத்தப்படும் பல தருணங்களிலும் ஒட்டிய கால்சட்டைப் பையில் வைக்கப்பட்ட கைபேசி போல இளக்காரமான உதட்டுச் சுழிப்பை, காட்டியும் காட்டாமலும் புன்னகையோடு கலந்து கைகுலுக்கும் சூழல்களை இன்றுவரை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். விற்பனை என்பது எக்காரணத்தாலோ இங்கு சற்று தரக்குறைவான பொருளில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. விற்பனையாளர் எனப்படுபவர் கழுத்துப்பட்டி அணிந்துகொண்டு வீதியெங்கும் அலைந்து திரிந்து கொண்டே இருப்பார் என்ற பிழைத்தோற்றமும் நிலைபெற்று விட்டது. ஆனால் மனிதன் சமூகமாக வாழத்தொடங்கிய நாட்களில் இருந்தே விற்பனை எனும் பரிமாற்றச் செயல் தொடங்கி விட்டது. பண்டமாற்றிலிருந்து இணைய வழி வரை விற்பனை எனும் செயல் மனித நாகரிகத்தின் உடனாகவே வளர்ந்து வருகிறது. எந்த நிறுவனத்திலும் விற்பனை தெரிந்தவரே தலைமைப் பதவியில் அமர்கிறார். விற்பனை எனும் செயல் இல்லையேல் இன்று பொருளாதாரம் என்பதும் இல்லை. 

இன்று விற்பனை என்பது பிற திறன்சார் தொழில்களைப் போலவே நிலைபெற்றுவருகிறது. விற்பனையாளர் எனும் திறன்சார் நிபுணர் இன்று பணி புரிய கிடைக்கும் பரப்பு விரிவாகிக் கொண்டே வருகிறது. வளரும் தொழில்நுட்பங்கள், விரைவான பரிமாற்றங்கள் ஆகியன விற்பனைக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கின்றன. இணையம் கைபேசி தொழில் நுட்பத்துடன் கைகோர்த்ததும் இன்றைய விற்பனைத் திறன் என்பது வெளியில் சென்று சாதிக்க வேண்டிய ஒன்றாக இல்லாமல் ஆகியிருக்கிறது. 

சில திறன்கள் புறக்காரணிகளாக அமைபவை. சில திறன்கள் அகக்காரணிகளாக அமைபவை. விற்பனைத் திறன் அகக்காரணியாக அமைவது. ஆகவே நம் பண்பு நலன்களோடு இயைந்தே அவை வளர்வதும் அமைகிறது. நாம் சிந்திக்கும் விதத்தை, செயல்படுத்தும் விதத்தை, அவதானிப்பை மேலும் மேலும் கூர் கொள்ளச் செய்யும் திறன்களில் விற்பனைத் திறன் முக்கியமானது. அதனாலேயே தலைமைப் பொறுப்புகளில் அதிகமும் நிறைந்திருப்போர் விற்பனைத் திறன் கொண்டோராக இருப்பது. 

இவ்விதிகள் விற்பனையில் முதல் அடுக்கினைப் புரிந்து கொள்ளவும், கூடுதல் திறனை வளர்த்துக் கொள்ளவுமே இங்கு பேசப்பட்டன.  இவற்றைத் தொடர்ந்து சிந்தித்து உங்கள் வழிகளில் சிறப்புறச் செயல்பட வாழ்த்துக்கள். 

இத்தொடரை எழுத வாய்ப்பளித்த சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தொடர் வெளிவரத் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து வாசித்து வந்து பின்னூட்டமாகவும், மின்னஞ்சலாகவும், தொலைபேசி வாயிலாகவும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இன்னுமொரு இனிய வாய்ப்பில் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே! 

Exit mobile version