Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

எழுத்தாளன் கவிதை

எழுத்தாளன்


என்ன வேண்டுமானாலும் எழுதலாம்
உன் எழுத்துக்களை மட்டுமே வாசிக்கிறது இவ்வுலகு
ஒயினை அருந்தியபடியே
புகைமூட்டம் மணக்கும்
நள்ளிரவில்
எழுதியதாக யாருக்குமே தெரியாது
வாசிப்புக் கண்களில்
மின்னுகின்றன
எழுதும் உன் அறையைப் பற்றிய
புனிதக் கனவுகள்
எல்லாமும்
அனுமதிக்கப்படுகிறது
உன் உலகில்
எழுத்துகள் உன்னிலிருந்து
ஆவியைப் போலப் பறந்து பிரிகின்றன
பரிசுத்தமாகிறாய்
ஒவ்வொரு முறை
அவற்றின் கழுத்துகளை அறுத்து பலி கொடுக்கும்போதும்
முழுஉடலை
அலசி எடுத்துப் படைக்கும்
கவிதைப்பிரதியில்
நீ இருப்பதே இல்லை
ஆனால்
நீ சொல்வதெல்லாம்
எதிரொலிக்கிறது
மூளைப்பாறைகளுக்குள்
அழுக்கு ஊறிய
உன் விரல்களை மொய்க்கும்
தூரத்து முத்தங்கள்
மயக்கத்திலேயே மிதக்கின்றன.
இரா.கவியரசு

Exit mobile version