Site icon சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

மகரந்தம்


[stextbox id=”info” caption=”நகர்வு என்னும் மயக்க வழு“]

ஏதாவது செய்து கொண்டிருந்தால், உருப்படியாக முன்னேறுகிறோம் என நினைப்பது சகஜம். சும்மா வெட்டியாகப் பொழுதைப் போக்காமல், வேலையில் பிஸியாக இருந்தால், சாதிக்கிறோம் என அர்த்தமாகி விடுமா? அந்தக் கேள்வியை எடுத்துக் கொண்டு இந்தக் கட்டுரை கணித்துறை செயல்பாடுகளைப் பொறுத்திப் பார்க்கிறது.

இவர் சொல்லும் உதாரணம் சிந்தைக்கு நெருக்கமாக இருந்தது. இப்போது எந்த இடம் செல்வதாக இருந்தாலும் ஜி.பி.எஸ் எனப்படும் புவிநிலை காட்டி உபயோகிக்கிறார்கள்.  வேகமாகப் பயணிக்கும் சாலைகளையேப் பலரும் விரும்புகிறார்கள். 30கிமீ. வேகத்தில் காரோட்டி, இலக்கை அடைவதை விட நூறு கிமீ. வேகத்தில் பயணித்து, இறுதி இடத்தை அடைய விரும்புகிறார்கள். செல்வழியில் நெரிசல் ஏற்பட்டால், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், உடனடியாகத் திரும்பி, சந்து பொந்துகளில் சென்று மாற்று மார்க்கத்தை எடுத்து, அந்த வழியில் காலம் அதிகம் எடுத்துக் கொண்டாலும், நகர்ந்து கொண்டே இருப்பதையே நாடுகிறார்கள்.

அதே போல், கணினியில் பயன்படுத்துவதற்கான உபயோகப்பொருளுக்கான நிரலியை எழுதுவதையே நிரலாளர்கள் விரும்புகிறார்கள். அந்த நிரலியை எப்படி மேம்படுத்தலாம் என சிந்தனை செய்வதற்கான நேரம் செலவழிப்பதை விட, மேலும் மேலும் நிரற்றொடர் ஆக நிரப்புகிறார்கள். அந்த நிரலுக்குரிய சோதனைகளை தானியங்கியாக எழுதாமல், அடுத்த பயன்பாடு, அடுத்த உபயோகம் என்று நகர்ந்துகொண்டே இருப்பதையே சாதனையாக எண்ணுகிறார்கள். இதை எழுதியவர் ஔவையாரின் ’செய்வன திருந்தச் செய்’ ஆத்திச்சூடி படித்துவிட்டு இந்தக் கட்டுரையை எழுதினாரா எனக் கேட்க வேண்டும்

http://blog.dmbcllc.com/the-fallacy-of-motion/
[/stextbox]


[stextbox id=”info” caption=”தண்ணீர் வெடி“]

சிலரின் வாழ்க்கை வரலாறைப் படித்தால் உற்சாகம் கரைபுரண்டோடும். கலிஃபோர்னியா பல்கலையில் பேராசிரியராக இருக்கும் டெரன்ஸ் டாவ் (Terence Tao) அந்த ரகம்.  தண்ணீரில் ஓரணாவை சுண்டி எறிந்தால், அதனால் ஏற்படும் உள்மாற்றங்களினால்,  சுழித்தோடும் விளைவுகளை உண்டாக்கி, பேரலை உருவாகுமா என ஆராய்கிறார். இது மாதிரி இதுவரை நடந்தது கிடையாது. ஆனால், ஏன் நடக்கவில்லை என்றும் அறிவியல்பூர்வமாக எவரும் விளக்கியது கிடையாது.  கிட்டத்தட்ட கோமாளிப் பட்டம் கிடைக்கக்கூடிய இந்த மாதிரி யோசனைகளுக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் போல் ஜான் நாஷ் போல் மாற்றுத் திறனாளிகளாக இருக்க வேண்டும் என்று ஹாலிவுட் நம்மைப் பழக்கப்படுத்தி இருக்கிறது.

டாஓ கூட ஒரு வகையில் வித்தியாசமானவர்தான்.  இரண்டே வயதில் தானாகவே எழுதப் படிக்கக் கற்றுக்கொள்கிறார். ஏழு வயதில் 11ஆம் வகுப்பில் சேர்ந்துவிட்டார். ஓரிரு மாதங்களிலேயே பன்னிரெண்டாம் வகுப்பு கணிதப்பாடத்தை கரைத்துக் குடிக்கிறார். பத்து வயதில் அனைத்துலக கணித ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வெல்கிறார்.  அதன்பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை. கணிதத்திற்கான நோபல் பரிசான ஃபீல்ட்ஸ் மெடல், மெக் ஆர்த்தர் நல்கை என பரிசுகளையும் கௌரவங்களையும் அங்கீகாரங்களையும் குவிக்கிறார்.

”நான் சிறுவனாக இருந்தபோது  கணிதவியலாளர் என்றால் என்ன செய்வார் என எனக்குத் தெரியாது. ஒரு செயற்குழு இருக்கும். அவர்கள் தினசரி எனக்கு ஒரு புதிர் பட்டியல் தருவார்கள். அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்தால், அடுத்த நாள் காலையில் வேறு சில புதிர்களை அவிழ்க்கலாம் என நினைத்தேன்” என்கிறார். இப்போது பொறுமையும் மற்றவர்களுடன் ஒத்துழைக்கும் தன்மையும் கணிதத்திற்கு எவ்வளவு இன்றியமையாதது எனப் புரிந்து கொண்டதையும் நேவியர் – ஸ்டோக்ஸ் சமன்பாடுகளுக்கான முடிச்சுகளை அவிழ்ப்பதிலும் ஈடுபட்டிருப்பதையும் விளக்கும் கட்டுரையை இங்கு சென்று படிக்கலாம்

http://www.nytimes.com/2015/07/26/magazine/the-singular-mind-of-terry-tao.html?partner=socialflow&smid=tw-nytimes&_r=0
[/stextbox]


[stextbox id=”info” caption=”பாலையின் வெப்பத் தாக்குதல்”]

 
மேற்கு ஆசியா ஏற்கனவே தகன பூமியாகத்தான் இருக்கிறது. உலகின் மிக மோசமான கொலைகளும், ரத்தவெறி கொண்ட வன்முறைகளும், எண்ணற்ற கொடூரங்களும் நடக்கும் நிலப்பரப்பாக அது இருக்கிறது. அப்படித்தான் ஒரு நூறு ஆண்டுகளாகவாவது இருந்து வந்திருக்கிறது. அங்கு ஏற்கனவே நிறைய பாலைவனங்கள் உண்டு. மதவெறியின் பிடியில் சிக்கி, அறிவுப் பாலையாகவும், பண்பாட்டுப் பாலையாகவும்,  மனிதாபிமானப் பாலையாகவும் ஆகி வருகிறது.
இந்தப் பயங்கரங்களில் சிக்கி படிப்படியாகச் சீரழியும் பல கோடி அப்பாவி மனிதர்கள், தம்மை ஆட்டுவிக்கும் மதவெறியர்கள், ராணுவ ஏகாதிபத்திய வெறியர்கள், கடத்தல்காரர்கள், போதை மருந்து உற்பத்தி செய்து விற்கும் உலகளாவிய குற்றக் கும்பல்கள், பல நாட்டு எண்ணெய்த் தரகர்கள் என்ற பன்னாட்டு நிறுவனக் கொள்ளையர், முடியாட்சி என்ற உளுத்துப் போன அரசு வடிவத்தில் பதவியில் இருக்கும் ஒட்டுண்ணிகள் என்று கூட்டணியாக இயங்கும் சில லட்சம் அரக்கர்களால் தம் பல தலைமுறையினரின் வாழ்வு நசுக்கப்படுவதைப் பார்த்துப் பிரலாபிப்பதைத் தவிர ஏதும் செய்ய முடியாது தவிக்கின்றனர்.
இப்போது இயற்கையும் அவர்களுக்கெதிராகத் திரும்பி விட்டிருக்கிறது. சமீபத்தில் உலகெங்கும் பல பகுதிகளில் வெப்பம் பெருகி ஏராளமான சாமானியர்கள் இறந்து விட்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் பல நூறு பேர் ஆங்காங்கு இறந்து போனது நினைவிருக்கலாம். சமீபத்தில் பாகிஸ்தானிலும் பல நூறு பேர் இறந்தனர். இன்றைய தகவலின்படி, மேற்காசியாவில் சில பகுதிகளில் வெப்பம் 110 டிகிரி ஃபாரன்ஹைட்டைத் தாண்டி விட்டிருக்கிறது. அங்கு காற்றில் ஈரப்பசை அதிகமாக இருப்பதால் மக்கள் இந்த வெப்பத்தை அனுபவிப்பது 150 டிகிரி ஃபாரன்ஹைட் வெப்பத்தை ஒத்து இருக்கும் என்று இந்த அறிக்கை சொல்கிறது.
ஈரானியர்கள் ஏற்கனவே பல கொடுமைகளைச் சந்தித்துப் பல பத்தாண்டுகளாகத் தவித்து வருகின்றனர். இப்போது 110 டிகிரிக்கு மேற்பட்ட வெப்பம் வேறு அவர்களை வறுத்தெடுக்கிறது.

http://www.huffingtonpost.com/entry/middle-east-heat-wave_55bba9dae4b0b23e3ce29439
[/stextbox]

[stextbox id=”info” caption=”மிஷன் டு மார்ஸ்…”]

இது ப்ளூட்டோவிற்கான நெடும் பயணம். இன்றைக்கு மனிதர்களின் கீழ்மையைப் பற்றி நிறைய பொறுமிக் கொண்டிருக்கிறீர்களானால் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் – “மனுசப் பயல்”களினால் சில உருப்படியான காரியங்களும் செய்ய முடிந்திருக்கிறது. 2006ல் New Horizon என்ற விண்கலம் ப்ளூட்டோவை நோக்கிய தனது நெடும் பயணத்தைத் தொடங்கியது. ஒன்பது வருடங்களுக்குப் பின் இந்த ஜூலை 15ஆம் தேதியில் அடைந்து பிரமிக்க வைக்கும் படங்களை அனுப்பி வைக்கத்தொடங்கி இருக்கிறது. சிறுவயதில் பள்ளிப்பாடங்களில் கோள்கள் வரைபடங்களில் கடைசி வட்டத்தில் சிறு துளியாகத்தான் ப்ளூட்டோவைப் பார்த்திருப்போம். இன்று…நிஜப்படம். மனிதத்தின் சாத்தியங்களின் இன்னொரு மைல்கல்.

http://www.popsci.com/new-horizons-goes-pluto

[/stextbox]
Exit mobile version