Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

அந்த டைனோசர், அப்போதொரு காகம்

அந்த டைனோசர்

உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அது
கடப்பவர்களையெல்லாம் ஏசிக் கொண்டிருந்தது.
சில சமயங்களில்
மர்மமாய் புன்னகைக்கிறது
அழுகிறது
அர்த்தமற்றவொன்றை
முணுமுணுத்தபடியே இருக்கிறது
வேறொரு சமயத்தில்
தனக்குள் பேசிச் சிரிக்கிறது
அதைப்
பழக்கிவிடுதலில் இருக்கும் சிரமங்களை
அரும்பச் செய்த அயற்சி
தீருவதற்குள்
கொஞ்சம் பழகியிருந்தது
சந்தர்ப்பக் கூடாரத்தில்
நாய்
பிணைக்கும் கயிற்றில்
கட்டப்பட்டு
சாந்தமாக ஆப்பிள்
கடித்துக் கொண்டிருக்கும்
அந்த டினோசர்
இப்பொழுது
ஏனோ
பதட்டத்தோடு
அதை
கடந்து செல்லமுயல்கிறேன்.
ஆரூர் பாஸ்கர்

oOo

அப்போதொரு காகம்

அந்த ஊரில் இருந்த
கடைசி வேப்ப மரமும்
கடைசிப் புளிய மரமும்
வெட்டப்பட்டப் பின்னர்
அவற்றிலிருந்தப் பேய்களைப்
பிடித்து வந்து
கருணையுள்ளம் கொண்ட நான்
என் கவிதை வேலிகளுக்குள்
அடைத்து வைத்தேன்
பின்னர்
கருணையுள்ளம் கொண்ட
நான்
பக்கத்து ஊரில்
மரமிழக்கும்
பேய்களுக்காக
உண்ணாவிரதமிருக்கச்
சென்றேன்
அப்பொழுதொரு காகம்,
கடைசி மரமும்
வெட்டப்பட்டப் பின்
கடைசி மலையும்
தகர்க்கப்பட்டப் பின்
கடைசி ஆறும்
வற்றியப் பின்
கடைசி மனிதனும்
தற்கொலைச்
செய்துகொண்டப் பின்
இந்த பூமி
நிம்மதியாய்
கடைசி மூன்று
சுற்றுகளைச் சுற்றும்
என்று கரைந்தது
கருணையுள்ளம் கொண்ட
நான்
அக்காகத்திற்கு
சிலை வைக்க வேண்டுமென
உண்ணாவிரதத்தில்
பேசினேன்…

oOo

கைவிடப்பட்ட கட்டடங்களில்

கொலைகள்
ஆண்மையென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
வீரமென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
கடமையென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
புனிதமென்று நம்பவைக்கப்பட்டன
கொலைகள்
செய்தியாக்கப்பட்டன
கொலைகள்
பழகிவிட்டன
இவ்வுலகில்
தரப்படும் முத்தங்களின் சத்தங்கள்
டுமீல் டுமீலென்று கேட்கின்றன
ஏதோவொரு நம்பிக்கையில்
வளர்ந்து கொண்டிருக்கின்றன
கைவிடப்பட்ட கட்டிடங்களில்
இந்தச் செடிகள்…
சங்கர்

Exit mobile version