Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

மகரந்தம்

இஸ்லாமியர்களால் எதிர்க்கப்படும் தீவிரவாதம்

அரசுகள் அனேகமாகப் பயங்கரவாதிகளை ஏதும் செய்ய முடியாத நிலைக்கு வந்திருக்கின்றன. அரசுகள் பலவும், பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் கொடுத்து அண்டை நாடுகள் மீது, குறிப்பாக பெரும் திரள் உள்ள ஜனநாயக நாடுகள் மீது ஏவி விட்டுக் கொலைகள், நாசம் ஆகியவற்றைப் பரப்பி அந்நாடுகளை ஒழிக்க முயல்கின்றன. ஆனால் அபூர்வமாக சில இடங்களில் மக்கள் தாமே எழுந்து இந்தப் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுகிறார்கள். போகோ ஹராம் என்கிற இஸ்லாமியப் பயங்கரவாதக் கும்பலை, அது பிறந்த ஒரு நகரத்திலிருந்து அம்மக்கள் திரண்டெழுந்து ஒழித்துக் கட்டி விட்டார்களாம்.

இந்தியாவில் மக்கள் திரண்டெழுந்து மத வெறியர்கள், அந்நியரின் கைக்கூலிப் பயங்கரவாதிகள், மொழி வெறியர்கள், குறுந்தேசிய வெறியர்கள், ஜாதி வெறியர்கள், பண முதலைகளின் கைக்கூலிக் குற்றக் கும்பல்கள், ஊடகங்கள் மூலம் இந்திய தேசியத்துக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து பரப்பிக் காசு பார்க்கும் கயவர்கள் என்று நாட்டின் புல்லுருவிகளை எல்லாம் ஒழித்துக் கட்டினால் நாடு உண்மையில் தேறி ஆரோக்கியநிலைக்குச் சடுதியில் வந்து விடும். அந்நாள் என்று வருமோ.

http://www.nytimes.com/2013/10/21/world/africa/vigilantes-defeat-boko-haram-in-its-nigerian-base.html

oOo

அத்தாட்சியை அழிக்கும் கலை

பல்லாயிரம் மக்களின் வாழ்வை அழித்து, பல கோடி உயிரினங்களை ஒழித்த ஒரு பெரும் விபத்தை, இத்தனை ஆண்டுகள் துப்புத் துலக்கி, இறுதியில் ஒரு சில தனி நபர்களை மட்டும் தண்டித்து விட்டு வழக்கை இழுத்து மூடப் போகிறது அமெரிக்க முதலிய அரசு. பெரும் தனக்காரர்களின் பலம் உலகப் பொருளாதாரத்தில் அத்தனை வலுவாக உள்ளது. இந்தியாவில் எத்தனை அழிப்புகளை இவர்கள் ராகு காலத்தின் ஆட்சியில் செய்யப் போகிறார்களோ. நினைத்தாலே கலக்கமாக இருக்கிறது. ஏற்கனவே லட்சம் கோடிகள் போலக் கொள்ளை அடித்திருக்கிறார்கள் இல்லையா? பாவம் இந்திய மக்கள், விடுதலை வந்தும் விடியவே இல்லை. ஆயிரம் ஆண்டு அடிமை வாழ்வு நீங்கியும், மறுபடி அதே அடிமை வாழ்வைச் செகுலரியம் என்ற போர்வையில், முற்போக்கு என்ற பொய்யுரையில் மக்கள் மீது திணித்துக் கொண்டிருக்கின்றனர் இந்திய மேல்தட்டு ஆட்சியாளர்கள். ஏமாறுவோரைத்தான் உலகம் எப்போதும் பழி சொல்லும்.

http://www.theguardian.com/environment/2013/oct/15/bp-oil-spill-halliburton-manager-guilty-destroying-evidence

oOo

பரதேசி

இங்கே ஒரு அறிக்கை இந்தியாவில்தான் உலகிலேயே மிக அதிகமான அடிமைகள் இருக்கிறார்கள் என்று சொல்கிறது. ஆனால் ‘அடிமை’ என்ற சொல்லை அவர்கள் எதை எல்லாம் வைத்து வரையறுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அந்தக் கணக்கு என்றும், அதை யார் எங்கிருந்து வரையறுக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததும், அவர்களுடைய கணக்கு ஏதும் உண்மை நிலையா அல்லது கருத்தியல்களின் சார்பால் செலுத்தப்படும் கற்பனை ராக்கெட்டா என்பதும் இப்போதைக்குத் தெளிவில்லை. இன்னொரு மேலைப் பண்பாட்டுத் தாக்குதலாக இருக்க வாய்ப்பு அதிகம். இவர்களுக்கு யார் பின்னிருந்து நிதி உதவி இந்த ஆய்வுகளை நடத்துகிறார்கள் என்று பார்த்தால் கொஞ்சம் வெளிச்சம் கிட்டலாம்.

ஆனால் இந்தியாவில் சிறுவர்கள், பெண்கள், நகரங்களில் குடியேறிய கிராமப்புறத்து மக்கள் என்று பற்பல பிரிவுகளில் மோசமாக நடத்தப்படும் மக்கள் ஏராளமாக உள்ளனர் என்பது எந்த நகரம், சிறுநகரத் தெருக்களில் பார்த்தாலும் நமக்கு காட்சி ரூபமாகவே சான்றுகள் கிடைக்கக் கூடிய விஷயம்தான்.

http://www.theguardian.com/global-development/2013/oct/17/29-million-people-enslaved-global-index

oOo

ஒரு நடிகையின் கதை

அடிமைத்தனத்தில் பலவகைகள் உண்டு. இந்தியாவில் இருக்கும் பற்பல அடிமைகள்- அனேகமாக பொய் ஆவணங்கள், வன்முறை, கிராமத்து வழக்கங்களில் கேள்வி அற்று ஊறிப் போய் திணிக்கப்படும் அடக்குமுறை, நகரத்து ஒட்டுண்ணிகளிடம் ஏமாந்து பலியாவதால் வரும் கொடுநிலை என்று பல காரணங்களால் உழைப்பு அடிமையாகின்றனர். சிலர் பெருநகர விலைமாதர் உலகுள் தள்ளப்பட்டு பாலுறவு அடிமைகளாகின்றனர்.

ஆனால் பல நாடுகளில் பெண்கள் கூடாரம் போலத் துணி அணியாமல் வெளியில் காலெடுத்து வைத்தாலே கொல்லப்படும் நிலையில் வாழ்கின்றனர். இந்நாடுகளில் பலவற்றில் மதம் ஒரு காரணி-ஆம், அமைதி மார்க்கத்தின் நற்பணி அது- அல்லது அந்தந்த சமூகக் குழுக்களின் பண்டைப் பண்பாடு என்று அவர்கள் மூடத்தனமாக நம்பும் பழக்கங்களின் விளைவு இந்த அடிமைத்தனம். உலக சினிமாவில் தன் நடிப்புக்காகப் பெயர் பெற்று வரும் ஒரு நடிகை, இரானியர், தன் நாட்டுக்குத் திரும்பிப் போக முடியாத நிலையில் வாழ்கிறார். திரும்பினால் கடுஞ்சிறை அல்லது தூக்கு நிச்சயம் என்ற பயம். அவரது கதையை ஒரு சிறு செய்திக் கட்டுரை சொல்கிறது இங்கே.

http://www.spiegel.de/international/zeitgeist/hollywood-actress-golshifteh-farahani-shunned-in-iran-a-928198.html

oOo

கிறித்துவம்: அன்று அயர்லாந்தில் சவிதா கொலை… இன்று?

மதம் என்ற சிந்தனை முடக்கு வாதம் உலகைப் பீடித்திருக்கிறது. அதுவும் சில நாடுகளில் இந்த வாத நோய் அறிவையும், அரசையும், சமூகத்தையும் தம் அற்பத்தனங்களைப் பார்க்கவோ உணரவோ விடாமல் அடிக்கிறது. எல் சால்வடொர் என்ற நாட்டில் ஒரு பெண் அவருக்குக் கருக்கலைப்பு நேர்ந்தது என்பதற்காகப் பத்து வருடங்கள் சிறையிலிடப்படப் போகிறாராம். என்ன ஒரு அரக்கத்தனம் என்று நம்மால் மனமிரங்கத்தான் முடிகிறது. தீவிரக் கிருஸ்தவத்தின் கோர தாண்டவம் இது.

http://goo.gl/Ar1YPi

oOo

Exit mobile version