Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

இரண்டு கவிதைகள் – எம்.ராஜா

மழைக்குப் பிந்தைய இரவு

க்ரோக் க்ரோக்
க்ரோக் க்ரோக்
இன்னுமென்ன சத்தம்?
ஊரைக்கூட்டி
உரக்கக் கத்தினாலும்
விழவா போகிறது காதுகளில் ?
இன்றைக்கு இவ்வளவுதான்
பேஞ்சு ஓஞ்சுவிட்டதாம் வானம்.
போய்த் தூங்கு போ
நானும் தூங்கணும்.
 
கோட்டைவிட்ட காவலாளி

மருத்துவமனை வளாகத்தில்
ரோந்து போகிறார்
இரவுநேரக் காவலாளி.
கறாரானவர்.
லேசில் விடமாட்டார்
அகப்பட்டவர்களை.
இன்னும் கொஞ்சம்
கறாராய் இருந்திருக்கலாம்.
எப்படியோ தப்பியோடி
என்செவிகளில் வந்துவிழுகிறது
அவர்கைவசமிருக்கும் அலைபேசியிலிருந்து
வழியும் இசை.

Exit mobile version